278முன் நரசிங்கமது ஆகி அவுணன்
      முக்கியத்தை முடிப்பான் மூவுலகில்
மன்னர் அஞ்சும் மதுசூதனன் வாயிற்
      குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க
நன் நரம்பு உடைய தும்புருவோடு
      நாரதனும் தம் தம் வீணை மறந்து
கின்னர மிதுனங்களும் தம் தம்
      கின்னரம் தொடுகிலோம் என்றனரே             (5)