415ஆமையாய்க் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய்
      அரு வரைகளாய்
நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்த் தக்கணையாய்த்
      தானும் ஆனான்
சேமம் உடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக்
      கிடந்தான் கோயில்
பூ மருவிப் புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும்
      புனல் அரங்கமே             (5)