நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி

சப்பாணிப் பருவம்
74மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப மருங்கின் மேல்
ஆணிப் பொன்னாற் செய்த ஆய்பொன் உடை மணி
பேணி பவளவாய் முத்துஇலங்க பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி
      கருங்குழற் குட்டனே சப்பாணி             (1)
   
75பொன் அரைநாணொடு மாணிக்கக் கிண்கிணி
தன் அரை ஆட தனிச் சுட்டி தாழ்ந்து ஆட
என் அரை மேல்நின்று இழிந்து உங்கள் ஆயர்தம்
மன் அரைமேல் கொட்டாய் சப்பாணி
      மாயவனே கொட்டாய் சப்பாணி             (2)
   
76பல் மணி முத்து இன்பவளம் பதித்தன்ன
என் மணிவண்ணன் இலங்கு பொற் தோட்டின் மேல்
நின் மணிவாய் முத்து இலங்க நின் அம்மைதன்
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி
      ஆழியங் கையனே சப்பாணி             (3)
   
77தூ நிலாமுற்றத்தே போந்து விளையாட
வான் நிலா அம்புலீ சந்திரா வா என்று
நீ நிலா நிற் புகழாநின்ற ஆயர்தம்
கோ நிலாவ கொட்டாய் சப்பாணி
      குடந்தைக் கிடந்தானே சப்பாணி             (4)
   
78புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டுவந்து
அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண்
பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி
      பற்பநாபா கொட்டாய் சப்பாணி            (5)
   
79தாரித்து நூற்றுவர் தந்தை சொற் கொள்ளாது
போர் உய்த்து வந்து புகுந்தவர் மண் ஆளப்
பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று
தேர் உய்த்த கைகளால் சப்பாணி
      தேவகி சிங்கமே சப்பாணி            (6)
   
80பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை
இரந்திட்ட கைம்மேல் எறிதிரை மோதக்
கரந்திட்டு நின்ற கடலைக் கலங்கச்
சரந் தொட்ட கைகளால் சப்பாணி
      சார்ங்க விற்கையனே சப்பாணி            (7)
   
81குரக்கு இனத்தாலே குரைகடல் தன்னை
நெருக்கி அணை கட்டி நீள் நீர் இலங்கை
அரக்கர் அவிய அடு கணையாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி
      நேமியங் கையனே சப்பாணி             (8)
   
82அளந்து இட்ட தூணை அவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க உருவாய்
உளந் தொட்டு இரணியன் ஒண்மார்வு அகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி
      பேய் முலை உண்டானே சப்பாணி            (9)
   
83அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை
மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி
வடம் சுற்றி வாசுகி வன்கயிறு ஆகக்
கடைந்திட்ட கைகளால் சப்பாணி
      கார்முகில் வண்ணனே சப்பாணி            (10)
   
84ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தம் கோவினை
நாட்கமழ் பூம்பொழில் வில்லிபுத்தூர்ப் பட்டன்
வேட்கையால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையினால் சொல்லுவார் வினை போதுமே             (11)