நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி

தளர்நடைப் பருவம்
85தொடர் சங்கிலிகை சலார்-பிலார் என்னத்
      தூங்கு பொன்மணி ஒலிப்பப்
படு மும்மதப் புனல் சோர வாரணம்
      பைய நின்று ஊர்வது போல்
உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப
      உடை மணி பறை கறங்க
தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி
      தளர்நடை நடவானோ             (1)
   
86செக்கரிடை நுனிக்கொம்பிற் தோன்றும்
      சிறுபிறை முளைப் போல
நக்க செந் துவர்வாய்த் திண்ணை மீதே
      நளிர் வெண்பல் முளை இலக
அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி
      பூண்ட அனந்தசயனன்
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்
      தளர்நடை நடவானோ             (2)
   
87மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும்
      சூழ் பரிவேடமுமாய்ப்
பின்னற் துலங்கும் அரசிலையும்
      பீதகச் சிற்றாடையொடும்
மின்னிற் பொலிந்த ஓர் கார்முகில் போலக்
      கழுத்தினிற் காறையொடும்
தன்னிற் பொலிந்த இருடிகேசன்
      தளர்நடை நடவானோ             (3)
   
88கன்னற் குடம் திறந்தால் ஒத்து ஊறிக்
      கணகண சிரித்து உவந்து
முன் வந்து நின்று முத்தம் தரும் என்
      முகில்வண்ணன் திருமார்வன்
தன்னைப் பெற்றேற்குத் தன்வாய் அமுதம்
      தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்
தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே
      தளர்நடை நடவானோ             (4)
   
89முன் நல் ஓர் வெள்ளிப் பெருமலைக் குட்டன்
      மொடுமொடு விரைந்து ஓடப்
பின்னைத் தொடர்ந்தது ஓர் கருமலைக் குட்டன்
      பெயர்ந்து அடியிடுவது போல்
பன்னி உலகம் பரவி ஓவாப் புகழ்ப்
      பலதேவன் என்னும்
தன் நம்பி ஓடப் பின் கூடச் செல்வான்
      தளர்நடை நடவானோ             (5)
   
90ஒரு காலிற் சங்கு ஒரு காலிற் சக்கரம்
      உள்ளடி பொறித்து அமைந்த
இரு காலுங் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல்
      இலச்சினை பட நடந்து
பெருகாநின்ற இன்ப-வெள்ளத்தின்மேல்
      பின்னையும் பெய்து பெய்து
தரு கார்க் கடல்வண்ணன் காமர் தாதை
      தளர்நடை நடவானோ             (6)
   
91படர் பங்கைய மலர்வாய் நெகிழப்
      பனி படு சிறுதுளி போல்
இடங் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி
      இற்று இற்று வீழநின்று
கடுஞ் சேக் கழுத்தின் மணிக்குரல் போல்
      உடை மணி கணகணென
தடந் தாளிணை கொண்டு சாரங்கபாணி
      தளர்நடை நடவானோ             (7)
   
92பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே
      அருவிகள் பகர்ந்தனைய
அக்குவடம் இழிந்து ஏறித் தாழ
      அணி அல்குல் புடை பெயர
மக்கள் உலகினிற் பெய்து அறியா
      மணிக் குழவி உருவின்
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்
      தளர்நடை நடவானோ             (8)
   
93வெண் புழுதி மேற் பெய்துகொண்டு அளைந்தது ஓர்
      வேழத்தின் கருங்கன்று போல்
தெண் புழுதியாடி திரிவிக்கிரமன்
      சிறு புகர்பட வியர்த்து
ஒண் போது அலர்கமலச் சிறுக்கால் உறைத்து
      ஒன்றும் நோவாமே
தண் போது கொண்ட தவிசின் மீதே
      தளர்நடை நடவானோ             (9)
   
94திரை நீர்ச் சந்திர மண்டலம் போலச்
      செங்கண்மால் கேசவன் தன்
திரு நீர் முகத்துத் துலங்கு சுட்டி
      திகழ்ந்து எங்கும் புடைபெயர
பெரு நீர்த் திரை எழு கங்கையிலும்
      பெரியதோர் தீர்த்த பலம்
தரு நீர்ச் சிறுச்சண்ணம் துள்ளம் சோரத்
      தளர்நடை நடவானோ             (10)
   
95ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய
      அஞ்சனவண்ணன் தன்னைத்
தாயர் மகிழ ஒன்னார் தளரத்
      தளர்நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால்
      விரித்தன உரைக்கவல்லார்
மாயன் மணிவண்ணன் தாள் பணியும்
      மக்களைப் பெறுவர்களே             (11)