நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி

அச்சோப் பருவம்
96பொன் இயல் கிண்கிணி சுட்டி புறங் கட்டித்
தன் இயல் ஓசை சலன்-சலன் என்றிட
மின் இயல் மேகம் விரைந்து எதிர் வந்தாற்போல்
என் இடைக்கு ஓட்டரா அச்சோ அச்சோ
      எம்பெருமான் வாராய் அச்சோ அச்சோ            (1)
   
97செங்கமலப் பூவிற் தேன் உண்ணும் வண்டே போல்
பங்கிகள் வந்து உன் பவளவாய் மொய்ப்ப
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய
அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ
      ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ (2)
   
98பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சனவண்ணனே அச்சோ அச்சோ
      ஆயர் பெருமானே அச்சோ அச்சோ (3)
   
99நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத்
தேறி அவளும் திருவுடம்பிற் பூச
ஊறிய கூனினை உள்ளே ஒடுங்க அன்று
ஏற உருவினாய் அச்சோ அச்சோ
      எம்பெருமான் வாராய் அச்சோ அச்சோ            (4)
   
100கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி
எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும்
சுழலை பெரிது உடைத் துச்சோதனனை
அழல விழித்தானே அச்சோ அச்சோ
      ஆழி அங் கையனே அச்சோ அச்சோ            (5)
   
101போர் ஒக்கப் பண்ணி இப் பூமிப்பொறை தீர்ப்பான்
தேர் ஒக்க ஊர்ந்தாய் செழுந்தார் விசயற்காய்
கார் ஒக்கு மேனிக் கரும் பெருங் கண்ணனே
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ
      ஆயர்கள் போரேறே அச்சோ அச்சோ (6)
   
102மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியிற்
தக்கது இது அன்று என்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணைத் துரும்பாற் கிளறிய
சக்கரக் கையனே அச்சோ அச்சோ
      சங்கம் இடத்தானே அச்சோ அச்சோ (7)
   
103என் இது மாயம்? என் அப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானிற் சுழற்றிய
மின்னு முடியனே அச்சோ அச்சோ
      வேங்கடவாணனே அச்சோ அச்சோ            (8)
   
104கண்ட கடலும் மலையும் உலகு ஏழும்
முண்டத்துக்கு ஆற்றா முகில்வண்ணா ஓ என்று
இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள
மண்டை நிறைத்தானே அச்சோ அச்சோ
      மார்வில் மறுவனே அச்சோ அச்சோ (9)
   
105துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திடப்
பின் இவ் உலகினில் பேரிருள் நீங்க அன்று
அன்னமது ஆனானே அச்சோ அச்சோ
      அருமறை தந்தானே அச்சோ அச்சோ            (10)
   
106நச்சுவார் முன் நிற்கும் நாராயணன் தன்னை
அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன
மச்சு அணி மாடப் புதுவைக்கோன் பட்டன் சொல்
நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வரே             (11)