முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
| நீராட்டம் |
| 151 | வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு திண்ணென இவ் இரா உன்னைத் தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன் எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன் நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் (1) | |
|
| |
|
|
| 152 | கன்றுகள் ஓடச் செவியிற் கட்டெறும்பு பிடித்து இட்டால் தென்றிக் கெடும் ஆகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம் இன்று நீ நீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய் (2) | |
|
| |
|
|
| 153 | பேய்ச்சி முலை உண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என்நெஞ்சம் ஆய்ச்சியர் எல்லாரும் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன் காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்திற் பூரித்து வைத்தேன் வாய்த்த புகழ் மணிவண்ணா மஞ்சனம் ஆட நீ வாராய் (3) | |
|
| |
|
|
| 154 | கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து வஞ்சகப் பேய்மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே மஞ்சளும் செங்கழுநீரின் வாசிகையும் நறுஞ்சாந்தும் அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் (4) | |
|
| |
|
|
| 155 | அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலிற் கலந்து சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னல் உறுதியேல் நம்பி செப்பு இள மென்முலையார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர் சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான் இங்கே வாராய் (5) | |
|
| |
|
|
| 156 | எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக் கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே உண்ணக் கனிகள் தருவன் ஒலிகடல் ஓதநீர் போலே வண்ணம் அழகிய நம்பீ மஞ்சனம் ஆட நீ வாராய் (6) | |
|
| |
|
|
| 157 | கறந்த நற்பாலும் தயிரும் கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய் பிறந்ததுவே முதலாகப் பெற்றறியேன் எம்பிரானே சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சனம் ஆட நீ வாராய் (7) | |
|
| |
|
|
| 158 | கன்றினை வால் ஓலை கட்டி கனிகள் உதிர எறிந்து பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப் பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும் நின்திறத்தேன் அல்லேன் நம்பீ நீ பிறந்த திரு நன்னாள் நன்று நீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய் (8) | |
|
| |
|
|
| 159 | பூணித் தொழுவினிற் புக்குப் புழுதி அளைந்த பொன்-மேனி காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர் நாண் இத்தனையும் இலாதாய் நப்பின்னை காணிற் சிரிக்கும் மாணிக்கமே என்மணியே மஞ்சனம் ஆட நீ வாராய் (9) | |
|
| |
|
|
| 160 | கார் மலி மேனி நிறத்துக் கண்ணபிரானை உகந்து வார் மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப் பார் மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல் சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே (10) | |
|
| |
|
|