நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி

நீராட்டம்
151வெண்ணெய் அளைந்த குணுங்கும்
      விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணென இவ் இரா உன்னைத்
      தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்
எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு
      எத்தனை போதும் இருந்தேன்
நண்ணல் அரிய பிரானே
      நாரணா நீராட வாராய்             (1)
   
152கன்றுகள் ஓடச் செவியிற்
      கட்டெறும்பு பிடித்து இட்டால்
தென்றிக் கெடும் ஆகில் வெண்ணெய்
      திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய்
      நீ பிறந்த திருவோணம்
இன்று நீ நீராட வேண்டும்
      எம்பிரான் ஓடாதே வாராய்             (2)
   
153பேய்ச்சி முலை உண்ணக் கண்டு
      பின்னையும் நில்லாது என்நெஞ்சம்
ஆய்ச்சியர் எல்லாரும் கூடி
      அழைக்கவும் நான் முலை தந்தேன்
காய்ச்சின நீரொடு நெல்லி
      கடாரத்திற் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ் மணிவண்ணா
      மஞ்சனம் ஆட நீ வாராய்             (3)
   
154கஞ்சன் புணர்ப்பினில் வந்த
      கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச
      வாய் முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழுநீரின்
      வாசிகையும் நறுஞ்சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன்
      அழகனே நீராட வாராய்             (4)
   
155அப்பம் கலந்த சிற்றுண்டி
      அக்காரம் பாலிற் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன்
      தின்னல் உறுதியேல் நம்பி
செப்பு இள மென்முலையார்கள்
      சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும்
      சோத்தம் பிரான் இங்கே வாராய்            (5)
   
156எண்ணெய்க் குடத்தை உருட்டி
      இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக்
      கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன்
      ஒலிகடல் ஓதநீர் போலே
வண்ணம் அழகிய நம்பீ
      மஞ்சனம் ஆட நீ வாராய்             (6)
   
157கறந்த நற்பாலும் தயிரும்
      கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப்
      பெற்றறியேன் எம்பிரானே
சிறந்த நற்றாய் அலர் தூற்றும்
      என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன்
      மஞ்சனம் ஆட நீ வாராய்             (7)
   
158கன்றினை வால் ஓலை கட்டி
      கனிகள் உதிர எறிந்து
பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப்
      பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும்
நின்திறத்தேன் அல்லேன் நம்பீ
      நீ பிறந்த திரு நன்னாள்
நன்று நீ நீராட வேண்டும்
      நாரணா ஓடாதே வாராய்             (8)
   
159பூணித் தொழுவினிற் புக்குப்
      புழுதி அளைந்த பொன்-மேனி
காணப் பெரிதும் உகப்பன்
      ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் இத்தனையும் இலாதாய்
      நப்பின்னை காணிற் சிரிக்கும்
மாணிக்கமே என்மணியே
      மஞ்சனம் ஆட நீ வாராய்             (9)
   
160கார் மலி மேனி நிறத்துக் கண்ணபிரானை உகந்து
வார் மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப்
பார் மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்
சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே             (10)