| முதல் ஆயிரம் பெரியாழ்வார்
 பெரியாழ்வார் திருமொழி
 
 | 
		| நீராட்டம் | 
					
			
			
      | | 151 | வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு
 திண்ணென இவ் இரா உன்னைத்
 தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்
 எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு
 எத்தனை போதும் இருந்தேன்
 நண்ணல் அரிய பிரானே
 நாரணா நீராட வாராய்             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 152 | கன்றுகள் ஓடச் செவியிற் கட்டெறும்பு பிடித்து இட்டால்
 தென்றிக் கெடும் ஆகில் வெண்ணெய்
 திரட்டி விழுங்குமா காண்பன்
 நின்ற மராமரம் சாய்த்தாய்
 நீ பிறந்த திருவோணம்
 இன்று நீ நீராட வேண்டும்
 எம்பிரான் ஓடாதே வாராய்             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 153 | பேய்ச்சி முலை உண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என்நெஞ்சம்
 ஆய்ச்சியர் எல்லாரும் கூடி
 அழைக்கவும் நான் முலை தந்தேன்
 காய்ச்சின நீரொடு நெல்லி
 கடாரத்திற் பூரித்து வைத்தேன்
 வாய்த்த புகழ் மணிவண்ணா
 மஞ்சனம் ஆட நீ வாராய்             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 154 | கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
 வஞ்சகப் பேய்மகள் துஞ்ச
 வாய் முலை வைத்த பிரானே
 மஞ்சளும் செங்கழுநீரின்
 வாசிகையும் நறுஞ்சாந்தும்
 அஞ்சனமும் கொண்டு வைத்தேன்
 அழகனே நீராட வாராய்             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 155 | அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலிற் கலந்து
 சொப்பட நான் சுட்டு வைத்தேன்
 தின்னல் உறுதியேல் நம்பி
 செப்பு இள மென்முலையார்கள்
 சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
 சொப்பட நீராட வேண்டும்
 சோத்தம் பிரான் இங்கே வாராய்            (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 156 | எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக்
 கண்ணைப் புரட்டி விழித்துக்
 கழகண்டு செய்யும் பிரானே
 உண்ணக் கனிகள் தருவன்
 ஒலிகடல் ஓதநீர் போலே
 வண்ணம் அழகிய நம்பீ
 மஞ்சனம் ஆட நீ வாராய்             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 157 | கறந்த நற்பாலும் தயிரும் கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்
 பிறந்ததுவே முதலாகப்
 பெற்றறியேன் எம்பிரானே
 சிறந்த நற்றாய் அலர் தூற்றும்
 என்பதனால் பிறர் முன்னே
 மறந்தும் உரையாட மாட்டேன்
 மஞ்சனம் ஆட நீ வாராய்             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 158 | கன்றினை வால் ஓலை கட்டி கனிகள் உதிர எறிந்து
 பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப்
 பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும்
 நின்திறத்தேன் அல்லேன் நம்பீ
 நீ பிறந்த திரு நன்னாள்
 நன்று நீ நீராட வேண்டும்
 நாரணா ஓடாதே வாராய்             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 159 | பூணித் தொழுவினிற் புக்குப் புழுதி அளைந்த பொன்-மேனி
 காணப் பெரிதும் உகப்பன்
 ஆகிலும் கண்டார் பழிப்பர்
 நாண் இத்தனையும் இலாதாய்
 நப்பின்னை காணிற் சிரிக்கும்
 மாணிக்கமே என்மணியே
 மஞ்சனம் ஆட நீ வாராய்             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 160 | கார் மலி மேனி நிறத்துக் கண்ணபிரானை உகந்து வார் மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப்
 பார் மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்
 சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |