நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி

பூச் சூட்டல்
181ஆனிரை மேய்க்க நீ போதி
      அருமருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன்
      கரிய திருமேனி வாட
பானையிற் பாலைப் பருகிப்
      பற்றாதார் எல்லாம் சிரிப்ப
தேனில் இனிய பிரானே
      செண்பகப் பூச் சூட்ட வாராய்             (1)
   
182கரு உடை மேகங்கள் கண்டால்
      உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்
உரு உடையாய் உலகு ஏழும்
      உண்டாக வந்து பிறந்தாய்
திரு உடையாள் மணவாளா
      திருவரங்கத்தே கிடந்தாய்
மருவி மணம் கமழ்கின்ற
      மல்லிகைப் பூச் சூட்ட வாராய்             (2)
   
183மச்சொடு மாளிகை ஏறி
      மாதர்கள்தம் இடம் புக்கு
கச்சொடு பட்டைக் கிழித்து
      காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய்
      நீள் திருவேங்கடத்து எந்தாய்
பச்சைத் தமனகத்தோடு
      பாதிரிப் பூச் சூட்ட வாராய்             (3)
   
184தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி
      மார்களைத் தீமை செய்யாதே
மருவும் தமனகமும் சீர்
      மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கருங்குழல் நெற்றி
      பொலிந்த முகிற்-கன்று போலே
உருவம் அழகிய நம்பீ
      உகந்து இவை சூட்ட நீ வாராய்             (4)
   
185புள்ளினை வாய் பிளந்திட்டாய்
      பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்
கள்ள அரக்கியை மூக்கொடு
      காவலனைத் தலை கொண்டாய்
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க
      அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரில் எழுந்த
      செங்கழுநீர் சூட்ட வாராய்             (5)
   
186எருதுகளோடு பொருதி
      ஏதும் உலோபாய் காண் நம்பீ
கருதிய தீமைகள் செய்து
      கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்
தெருவின்கண் தீமைகள் செய்து
      சிக்கென மல்லர்களோடு
பொருது வருகின்ற பொன்னே
      புன்னைப் பூச் சூட்ட நீ வாராய்             (6)
   
187குடங்கள் எடுத்து ஏற விட்டுக்
      கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதிமுகத்தாரை
      மால்செய வல்ல என் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை
      இரு பிளவு ஆக முன் கீண்டாய்
குடந்தைக் கிடந்த எம் கோவே
      குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்             (7)
   
188சீமாலிகன் அவனோடு
      தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணிச்
      சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே
      அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்
      இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்             (8)
   
189அண்டத்து அமரர்கள் சூழ
      அத்தாணியுள் அங்கு இருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்
      தூமலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை ஏழும்
      ஓர் ஆலிலையிற் துயில் கொண்டாய்
கண்டு நான் உன்னை உகக்கக்
      கருமுகைப் பூச் சூட்ட வாராய்             (9)
   
190செண்பக மல்லிகையோடு
      செங்கழுநீர் இருவாட்சி
எண் பகர் பூவும் கொணர்ந்தேன்
      இன்று இவை சூட்ட வா என்று
மண் பகர் கொண்டானை ஆய்ச்சி
      மகிழ்ந்து உரை செய்த இம் மாலை
பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன்
      பட்டர்பிரான் சொன்ன பத்தே             (10)