முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
பூச் சூட்டல் |
181 | ஆனிரை மேய்க்க நீ போதி அருமருந்து ஆவது அறியாய் கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட பானையிற் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப தேனில் இனிய பிரானே செண்பகப் பூச் சூட்ட வாராய் (1) | |
|
|
|
|
182 | கரு உடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள் உரு உடையாய் உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய் திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூச் சூட்ட வாராய் (2) | |
|
|
|
|
183 | மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள்தம் இடம் புக்கு கச்சொடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேங்கடத்து எந்தாய் பச்சைத் தமனகத்தோடு பாதிரிப் பூச் சூட்ட வாராய் (3) | |
|
|
|
|
184 | தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி மார்களைத் தீமை செய்யாதே மருவும் தமனகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற புருவம் கருங்குழல் நெற்றி பொலிந்த முகிற்-கன்று போலே உருவம் அழகிய நம்பீ உகந்து இவை சூட்ட நீ வாராய் (4) | |
|
|
|
|
185 | புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய் கள்ள அரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய் அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன் தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் (5) | |
|
|
|
|
186 | எருதுகளோடு பொருதி ஏதும் உலோபாய் காண் நம்பீ கருதிய தீமைகள் செய்து கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய் தெருவின்கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு பொருது வருகின்ற பொன்னே புன்னைப் பூச் சூட்ட நீ வாராய் (6) | |
|
|
|
|
187 | குடங்கள் எடுத்து ஏற விட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே மடம் கொள் மதிமுகத்தாரை மால்செய வல்ல என் மைந்தா இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவு ஆக முன் கீண்டாய் குடந்தைக் கிடந்த எம் கோவே குருக்கத்திப் பூச் சூட்ட வாராய் (7) | |
|
|
|
|
188 | சீமாலிகன் அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறு அவனை நீ எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய் ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய் ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச் சூட்ட வாராய் (8) | |
|
|
|
|
189 | அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணியுள் அங்கு இருந்தாய் தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூமலராள் மணவாளா உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆலிலையிற் துயில் கொண்டாய் கண்டு நான் உன்னை உகக்கக் கருமுகைப் பூச் சூட்ட வாராய் (9) | |
|
|
|
|
190 | செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி எண் பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று மண் பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன் பட்டர்பிரான் சொன்ன பத்தே (10) | |
|
|
|
|