| முதல் ஆயிரம் பெரியாழ்வார்
 பெரியாழ்வார் திருமொழி
 
 | 
		| அம்மம் தர மறுத்தல் | 
					
			
			
      | | 222 | தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு தளர்நடைஇட்டு வருவான்
 பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு ஒரு
 புள்ளுவன் பொய்யே தவழும்
 மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை
 துஞ்ச வாய்வைத்த பிரானே
 அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
 அஞ்சுவன் அம்மம் தரவே                   (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 223 | பொன்போல் மஞ்சனம் ஆட்டி அமுது ஊட்டிப் போனேன் வருமளவு இப்பால்
 வன் பாரச் சகடம் இறச் சாடி
 வடக்கில் அகம் புக்கு இருந்து
 மின்போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை
 வேற்றுருவம் செய்து வைத்த
 அன்பா உன்னை அறிந்துகொண்டேன்
 உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 224 | கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத் தயிர் சாய்த்துப் பருகி
 பொய்ம் மாய மருது ஆன அசுரரைப்
 பொன்றுவித்து இன்று நீ வந்தாய்
 இம் மாயம் வல்ல பிள்ளை- நம்பீ உன்னை
 என்மகனே என்பர் நின்றார்
 அம்மா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
 அஞ்சுவன் அம்மம் தரவே                    
                (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 225 | மைஆர் கண் மட ஆய்ச்சியர் மக்களை மையன்மை செய்து அவர் பின்போய்
 கொய் ஆர் பூந்துகில் பற்றித் தனி நின்று
 குற்றம் பல பல செய்தாய்
 பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ
 புத்தகத்துக்கு உள கேட்டேன்
 ஐயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
 அஞ்சுவன் அம்மம் தரவே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 226 | முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயி னோடு தயிரும் விழுங்கி
 கப்பால் ஆயர்கள் காவிற் கொணர்ந்த
 கலத்தொடு சாய்த்துப் பருகி
 மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல
 விம்மி விம்மி அழுகின்ற
 அப்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
 அஞ்சுவன் அம்மம் தரவே            (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 227 | கரும்பார் நீள் வயற் காய்கதிர்ச் செந்நெலைக் கற்றாநிரை மண்டித் தின்ன
 விரும்பாக் கன்று ஒன்று கொண்டு விளங்கனி
 வீழ எறிந்த பிரானே
 சுரும்பார் மென்குழற் கன்னி ஒருத்திக்குச்
 சூழ்வலை வைத்துத் திரியும்
 அரம்பா உன்னை அறிந்துகொண்டேன்
 உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 228 | மருட்டார் மென்குழற் கொண்டு பொழில் புக்கு வாய்வைத்து அவ் ஆயர்தம் பாடி
 சுருட்டார் மென்குழற் கன்னியர் வந்து உன்னைச்
 சுற்றும் தொழ நின்ற சோதி
 பொருள்- தாயம் இலேன் எம்பெருமான் உன்னைப்
 பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு
 அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு
 அஞ்சுவன் அம்மம் தரவே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 229 | வாளா ஆகிலும் காணகில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து
 தோளால் இட்டு அவரோடு திளைத்து நீ
 சொல்லப் படாதன செய்தாய்
 கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி
 கெட்டேன் வாழ்வில்லை நந்தன்
 காளாய் உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
 அஞ்சுவன் அம்மம் தரவே (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 230 | தாய்மார் மோர் விற்கப் போவர் தமப்பன்மார் கற்றா நிரைப் பின்பு போவர்
 நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை
 நேர்படவே கொண்டு போதி
 காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து
 கண்டார் கழறத் திரியும்
 ஆயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
 அஞ்சுவன் அம்மம் தரவே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 231 | தொத்தார் பூங்குழற் கன்னி ஒருத்தியைச் சோலைத் தடம் கொண்டு புக்கு
 முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை
 மூவேழு சென்றபின் வந்தாய்
 ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை
 உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்
 அத்தா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
 அஞ்சுவன் அம்மம் தரவே (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 232 | காரார் மேனி நிறத்து எம்பிரானைக் கடிகமழ் பூங்குழல் ஆய்ச்சி
 ஆரா இன்னமுது உண்ணத் தருவன் நான்
 அம்மம் தாரேன் என்ற மாற்றம்
 பாரார் தொல்புகழான் புதுவை மன்னன்
 பட்டர்பிரான் சொன்ன பாடல்
 ஏரார் இன்னிசை மாலைகள் வல்லார்
 இருடிகேசன் அடியாரே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |