நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி

கோவர்த்தனகிரியைக் குடைகொண்டமை
263அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும்
      தயிர்- வாவியும் நெய்- அளறும் அடங்கப்
பொட்டத் துற்றி மாரிப் பகை புணர்த்த
      பொரு மா கடல்வண்ணன் பொறுத்த மலை
வட்டத் தடங்கண் மட மான் கன்றினை
      வலைவாய்ப் பற்றிக் கொண்டு குறமகளிர்
கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (1)
   
264வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர்கோன்
      வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட
மழை வந்து எழு நாள் பெய்து மாத் தடுப்ப
      மதுசூதன் எடுத்து மறித்த மலை
இழவு தரியாதது ஓர் ஈற்றுப் பிடி
      இளஞ் சீயம் தொடர்ந்து முடுகுதலும்
குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (2)
   
265அம் மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும்
      ஆனாயரும் ஆநிரையும் அலறி
எம்மைச் சரண் ஏன்றுகொள் என்று இரப்ப
      இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை
தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப்
      புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று
கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (3)
   
266கடு வாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக்
      கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல்
அடிவாய் உறக் கையிட்டு எழப் பறித்திட்டு
      அமரர்பெருமான் கொண்டு நின்ற மலை
கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக்
      கதுவாய்ப் பட நீர்முகந்து ஏறி எங்கும்
குடவாய்ப் பட நின்று மழை பொழியும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே             (4)
   
267வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல்
      அறையோ வந்து வாங்குமின் என்பவன் போல்
ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை
      இடவன் எழ வாங்கி எடுத்த மலை
கானக் களி-யானை தன் கொம்பு இழந்து
      கதுவாய் மதம் சோரத் தன் கை எடுத்துக்
கூனற் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (5)
   
268செப்பாடு உடைய திருமால் அவன் தன்
      செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும்
கப்பு ஆக மடுத்து மணி நெடுந்தோள்
      காம்பு ஆகக் கொடுத்துக் கவித்த மலை
எப்பாடும் பரந்து இழி தெள் அருவி
      இலங்கு மணி முத்துவடம் பிறழக்
குப்பாயம் என நின்று காட்சிதரும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே            (6)
   
269படங்கள் பலவும் உடைப் பாம்பு- அரையன்
      படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்
தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத்
      தாமோதரன் தாங்கு தடவரைதான்
அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த
      அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களைக்
குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (7)
   
270சல மா முகில் பல் கணப் போர்க்களத்துச்
      சர- மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு
நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல்
      நாராயணன் முன் முகம் காத்த மலை
இலை வேய் குரம்பைத் தவ மா முனிவர்
      இருந்தார் நடுவே சென்று அணார் சொறியக்
கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்று உறங்கும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (8)
   
271வன் பேய்முலை உண்டது ஓர் வாய் உடையன்
      வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை
தன் பேர் இட்டுக் கொண்டு தரணி தன்னிற்
      தாமோதரன் தாங்கு தடவரை தான்
முன்பே வழி காட்ட முசுக் கணங்கள்
      முதுகிற் பெய்து தம் உடைக் குட்டன்களைக்
கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே             (9)
   
272கொடி ஏறு செந் தாமரைக் கைவிரல்கள்
      கோலமும் அழிந்தில வாடிற்று இல
வடிவு ஏறு திருவுகிர் நொந்தும் இல
      மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம்
முடி ஏறிய மா முகிற் பல் கணங்கள்
      முன் நெற்றி நரைத்தன போல எங்கும்
குடி ஏறி இருந்து மழை பொழியும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (10)
   
273அரவிற் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு
      அரவப்-பகை ஊர்தி அவனுடைய  
குரவிற் கொடி முல்லைகள் நின்று உறங்கும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடைமேல்
திருவிற் பொலி மறைவாணர் புத்தூர்த்
      திகழ் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவு மனம் நன்கு உடைப் பத்தர் உள்ளார்
      பரமான வைகுந்தம் நண்ணுவரே             (11)