முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
கண்ணன் குழல் ஊதல் |
274 | நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்கள் இது ஓர் அற்புதம் கேளீர் தூ வலம்புரி உடைய திருமால் தூய வாயிற் குழல்-ஓசை வழியே கோவலர் சிறுமியர் இளங் கொங்கை குதுகலிப்ப உடல் உள்-அவிழ்ந்து எங்கும் காவலும் கடந்து கயிறுமாலை ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே (1) | |
|
|
|
|
275 | இட அணரை இடத் தோளொடு சாய்த்து இருகை கூடப் புருவம் நெரிந்து ஏறக் குடவயிறு பட வாய் கடைகூடக் கோவிந்தன் குழல்கொடு ஊதின போது மட மயில்களொடு மான்பிணை போலே மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ உடை நெகிழ ஓர்கையால் துகில் பற்றி ஒல்கி ஓடு அரிக்கண் ஒட நின்றனரே (2) | |
|
|
|
|
276 | வான் இளவரசு வைகுந்தக் குட்டன் வாசுதேவன் மதுரைமன்னன் நந்த- கோன் இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல்கொடு ஊதின போது வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி மனம் உருகி மலர்க்கண்கள் பனிப்பத் தேன் அளவு செறி கூந்தல் அவிழச் சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே (3) | |
|
|
|
|
277 | தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்பப் பூடுகள் அடங்க உழக்கிக் கானகம் படி உலாவி உலாவிக் கருஞ்சிறுக்கன் குழல் ஊதின போது மேனகையொடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி வானகம் படியில் வாய் திறப்பு இன்றி ஆடல் பாடல் இவை மாறினர் தாமே (4) | |
|
|
|
|
278 | முன் நரசிங்கமது ஆகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் மூவுலகில் மன்னர் அஞ்சும் மதுசூதனன் வாயிற் குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க நன் நரம்பு உடைய தும்புருவோடு நாரதனும் தம் தம் வீணை மறந்து கின்னர மிதுனங்களும் தம் தம் கின்னரம் தொடுகிலோம் என்றனரே (5) | |
|
|
|
|
279 | செம் பெருந் தடங்- கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் நம் பரமன் இந்நாள் குழல் ஊதக் கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர் அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீத வலையால் சுருக்குண்டு நம் பரம் அன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே (6) | |
|
|
|
|
280 | புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து அவையுள் நாகத்து- அணையான் குழல் ஊத அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப அவியுணா மறந்து வானவர் எல்லாம் ஆயர்-பாடி நிறையப் புகுந்து ஈண்டிச் செவி-உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே (7) | |
|
|
|
|
281 | சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக் கோவிந்தன் குழல்கொடு ஊதின போது பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக் கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே (8) | |
|
|
|
|
282 | திரண்டு எழு தழை மழைமுகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான் ஊதுகின்ற குழல்-ஓசை வழியே மருண்டு மான்-கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே (9) | |
|
|
|
|
283 | கருங்கண் தோகை மயிற் பீலி அணிந்து கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை அருங்கல உருவின் ஆயர் பெருமான் அவனொருவன் குழல் ஊதின போது மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே (10) | |
|
|
|
|
284 | குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக் கோவிந்தனுடைய கோமள வாயிற் குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக் கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக் குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார் குழலை வென்ற குளிர் வாயினராகிச் சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே (11) | |
|
|
|
|