நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி

நற்றாய் இரங்கல்
285ஐய புழுதி உடம்பு அளைந்து இவள்
      பேச்சும் அலந்தலையாய்ச்
செய்ய நூலின் சிற்றாடை செப்பன்
      உடுக்கவும் வல்லள் அல்லள்
கையினில் சிறுதூதை யோடு இவள்
      முற்றில் பிரிந்தும் இலள்
பை அரவணைப் பள்ளியானொடு
      கைவைத்து இவள்வருமே             (1)
   
286வாயிற் பல்லும் எழுந்தில மயி
      ரும் முடி கூடிற்றில
சாய்வு இலாத குறுந்தலைச் சில
      பிள்ளைகளோடு இணங்கி
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள்
      தன் அன்ன செம்மை சொல்லி
மாயன் மா மணிவண்ணன்மேல் இவள்
      மால் உறுகின்றாளே             (2)
   
287பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும்
      முற்றத்து இழைக்கலுறில்
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும்
      அல்லது இழைக்கலுறாள்
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில
      கோவிந்தனோடு இவளைச்
சங்கை யாகி என் உள்ளம் நாள்தொறும்
      தட்டுளுப்பு ஆகின்றதே             (3)
   
288ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என்
      பெண்மகளை எள்கி
தோழிமார் பலர் கொண்டுபோய்ச் செய்த
      சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்
ஆழியான் என்னும் ஆழ மோழையில்
      பாய்ச்சி அகப்படுத்தி
மூழை உப்பு அறியாது என்னும்
      மூதுரையும் இலளே             (4)
   
289நாடும் ஊரும் அறியவே போய்
      நல்ல துழாய் அலங்கல்
சூடி நாரணன் போம் இடம் எல்லாம்
      சோதித்து உழிதர்கின்றாள்
கேடு வேண்டுகின்றார் பலர் உளர்
      கேசவனோடு இவளைப்
பாடிகாவல் இடுமின் என்று என்று
      பார் தடுமாறினதே             (5)
   
290பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள்
      பாடகமும் சிலம்பும்
இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு
      என்னோடு இருக்கலுறாள்
பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று இவள்
      பூவைப் பூவண்ணா என்னும்
வட்ட வார் குழல் மங்கைமீர் இவள்
      மால் உறுகின்றாளே             (6)
   
291பேசவும் தரியாத பெண்மையின்
      பேதையேன் பேதை இவள்
கூசமின்றி நின்றார்கள் தம் எதிர்
      கோல் கழிந்தான் மூழையாய்
கேசவா என்றும் கேடிலீ என்றும்
      கிஞ்சுக வாய் மொழியாள்
வாச வார்குழல் மங்கைமீர் இவள்
      மால் உறுகின்றாளே 7
   
292காறை பூணும் கண்ணாடி காணும் தன்
      கையில் வளை குலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும் தன்
      கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த்
      தேவன் திறம் பிதற்றும்
மாறில் மா மணிவண்ணன்மேல் இவள்
      மால் உறுகின்றாளே             (8)
   
293கைத்தலத்து உள்ள மாடு அழியக்
      கண்ணாலங்கள் செய்து இவளை-
வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம்?
      நம்மை வடுப்படுத்தும்-
செய்த்தலை எழு நாற்றுப் போல் அவன்
      செய்வன செய்துகொள்ள
மைத் தடமுகில் வண்ணன் பக்கல்
      வளர விடுமின்களே             (9)
   
294பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து
      பேணி நம் இல்லத்துள்ளே
இருத்துவான் எண்ணி நாம் இருக்க
      இவளும் ஒன்று எண்ணுகின்றாள்
மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும்
      வார்த்தை படுவதன்முன்
ஒருப்படுத்து இடுமின் இவளை
      உலகளந்தான் இடைக்கே             (10)
   
295ஞாலம் முற்றும் உண்டு ஆலிலைத் துயில்
      நாராயணனுக்கு இவள்
மாலதாகி மகிழ்ந்தனள் என்று
      தாய் உரை செய்ததனை
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்கோன்
      விட்டுசித்தன் சொன்ன
மாலை பத்தும் வல்லவர்கட்கு
      இல்லை வரு துயரே             (11)