முதல் ஆயிரம் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
|
| தலைவன்பின் சென்ற மகளைக்குறித்துத் தாய் பலபடி உன்னி ஏங்குதல் |
| 296 | நல்லது ஓர் தாமரைப் பொய்கை நாண்மலர் மேல் பனி சோர அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தால் ஒத்ததாலோ இல்லம் வெறியோடிற்றாலோ என்மகளை எங்கும் காணேன் மல்லரை அட்டவன் பின்போய் மதுரைப் புறம் புக்காள் கொல்லோ? (1) | |
|
| |
|
|
| 297 | ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத உருவறைக் கோபாலர் தங்கள் கன்று கால் மாறுமா போலே கன்னி இருந்தாளைக் கொண்டு நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை என்றும் எமர்கள் குடிக்கு ஓர் ஏச்சுக்கொல்? ஆயிடுங் கொல்லோ? (2) | |
|
| |
|
|
| 298 | குமரி மணம் செய்து கொண்டு கோலம் செய்து இல்லத்து இருத்தி தமரும் பிறரும் அறியத் தாமோதரற்கு என்று சாற்றி அமரர் பதியுடைத் தேவி அரசாணியை வழிபட்டு துமிலம் எழப் பறை கொட்டித் தோரணம் நாட்டிடுங் கொல்லோ? (3) | |
|
| |
|
|
| 299 | ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண் மால் தான் கொண்டு போனான் பெரு மகளாய்க் குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை மருமகளைக் கண்டு உகந்து மணாட்டுப் புறம்செய்யுங் கொல்லோ? (4) | |
|
| |
|
|
| 300 | தம் மாமன் நந்தகோபாலன் தழீஇக் கொண்டு என் மகள் தன்னைச் செம்மாந்திரே என்று சொல்லி செழுங் கயற் கண்ணும் செவ்வாயும் கொம்மை முலையும் இடையும் கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு இம் மகளைப் பெற்ற தாயர் இனித் தரியார் என்னுங் கொல்லோ? (5) | |
|
| |
|
|
| 301 | வேடர் மறக்குலம் போலே வேண்டிற்றுச் செய்து என்மகளைக் கூடிய கூட்டமே யாகக் கொண்டு குடி வாழுங் கொல்லோ? நாடும் நகரும் அறிய நல்லது ஓர் கண்ணாலம் செய்து சாடு இறப் பாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றுங் கொல்லோ? (6) | |
|
| |
|
|
| 302 | அண்டத்து அமரர் பெருமான் ஆழியான் இன்று என்மகளைப் பண்டப் பழிப்புக்கள் சொல்லிப் பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ? கொண்டு குடி- வாழ்க்கை வாழ்ந்து கோவலப் பட்டம் கவித்துப் பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்குங் கொல்லோ? (7) | |
|
| |
|
|
| 303 | குடியிற் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ நடை ஒன்றும் செய்திலன் நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன் இடை இருபாலும் வணங்க இளைத்து இளைத்து என்மகள் ஏங்கிக் கடைகயிறே பற்றி வாங்கிக் கை தழும்பு ஏறிடுங் கொல்லோ? (8) | |
|
| |
|
|
| 304 | வெண்ணிறத் தோய் தயிர் தன்னை வெள்வரைப்பின் முன் எழுந்து கண் உறங்காதே இருந்து கடையவும் தான்வல்லள் கொல்லோ? ஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகளந்தான் என்மகளைப் பண் அறையாப் பணிகொண்டு பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ? (9) | |
|
| |
|
|
| 305 | மாயவன் பின்வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமும் எல்லாம் தாயவள் சொல்லிய சொல்லைப் தண் புதுவைப் பட்டன் சொன்ன தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணிவண்ணனுக்கு ஆளரே (10) | |
|
| |
|
|