| முதல் ஆயிரம் பெரியாழ்வார்
 பெரியாழ்வார் திருமொழி
 
 | 
		| தன் தகவின்மையை அறிவித்தல் | 
					
			
			
      | | 432 | வாக்குத் தூய்மை இலாமையினாலே மாதவா உன்னை வாய்க்கொள்ள மாட்டேன்
 நாக்கு நின்னை அல்லால் அறியாது
 நான் அது அஞ்சுவன் என்வசம் அன்று
 மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று
 முனிவாயேலும் என் நாவினுக்கு ஆற்றேன்
 காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்
 காரணா கருளக் கொடியானே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 433 | சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்து கையானே
 பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல்
 பொறுப்பது பெரியோர் கடன் அன்றே
 விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால்
 வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது
 உழைக்கு ஓர் புள்ளி மிகை அன்று கண்டாய்
 ஊழி ஏழ் உலகு உண்டு உமிழ்ந்தானே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 434 | நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
 புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப்
 புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
 உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன்
 ஓவாதே நமோ நாரணா என்பன்
 வன்மை ஆவது உன் கோயிலில் வாழும்
 வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே            (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 435 | நெடுமையால் உலகேழும் அளந்தாய் நின்மலா நெடியாய் அடியேனைக்
 குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா
 கூறை சோறு இவை வேண்டுவதில்லை
 அடிமை என்னும் அக் கோயின்மையாலே
 அங்கங்கே அவை போதரும் கண்டாய்
 கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின் தாதை
 கோத்த வன் தளை கோள் விடுத்தானே            (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 436 | தோட்டம் இல்லவள் ஆத் தொழு ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம்
 வாட்டம் இன்றி உன் பொன்னடிக் கீழே
 வளைப்பு-அகம் வகுத்துக்கொண்டு இருந்தேன்
 நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது
 நச்சுவார் பலர் கேழல் ஒன்று ஆகிக்
 கோட்டு மண் கொண்ட கொள்கையினானே
 குஞ்சரம் விழக் கொம்பு ஒசித்தானே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 437 | கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான்
 உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை
 ஓவாதே நமோ நாரணா என்று
 எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம
 வேத நாள்மலர் கொண்டு உன பாதம்
 நண்ணா நாள் அவை தத்துறுமாகில்
 அன்று எனக்கு அவை பட்டினி நாளே            (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 438 | வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே
 கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்
 காணலாங்கொல் என்று ஆசையினாலே
 உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி
 உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள்
 துள்ளம் சோரத் துயில் அணை கொள்ளேன்
 சொல்லாய் யான் உன்னைத் தத்துறுமாறே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 439 | வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா
 கண்ணனே கரி கோள் விடுத்தானே
 காரணா களிறு அட்ட பிரானே
 எண்ணுவார் இடரைக் களைவானே
 ஏத்தரும் பெருங் கீர்த்தியினானே
 நண்ணி நான் உன்னை நாள்தொறும் ஏத்தும்
 நன்மையே அருள்செய் எம்பிரானே            (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 440 | நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமது ஆனாய்
 உம்பர்கோன் உலகு ஏழும் அளந்தாய்
 ஊழி ஆயினாய் ஆழி முன் ஏந்திக்
 கம்ப மா கரி கோள் விடுத்தானே
 காரணா கடலைக் கடைந்தானே
 எம்பிரான் என்னை ஆள் உடைத் தேனே
 ஏழையேன் இடரைக் களையாயே            (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 441 | காமர் தாதை கருதலர் சிங்கம் காண இனிய கருங்குழற் குட்டன்
 வாமனன் என் மரகத வண்ணன்
 மாதவன் மதுசூதனன் தன்னைச்
 சேம நன்கு அமரும் புதுவையர் கோன்
 விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும்
 நாமம் என்று நவின்று உரைப்பார்கள்
 நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே            (10)
 | 
 |  | 
		
			|  |  |  |