நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி

கூடல் இழைத்தல்
533தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிடக்
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே             (1)
   
534காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர்
வாட்டம் இன்றி மகிழ்ந்து உறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப் பற்றித் தன்னொடும்
கூட்டு மாகில் நீ கூடிடு கூடலே             (2)
   
535பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு
ஆமகன் அணி வாணுதல் தேவகி
மா மகன் மிகு சீர் வசுதேவர்தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே             (3)
   
536ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பு ஏறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன்மேல் நடம் ஆடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே             (4)
   
537மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மத யானை உதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே             (5)
   
538அற்றவன் மருதம் முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையிற்
செற்றவன் திகழும் மதுரைப் பதிக்
கொற்றவன் வரில் கூடிடு கூடலே             (6)
   
539அன்று இன்னாதன செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல்-கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே             (7)
   
540ஆவல் அன்பு உடையார் தம் மனத்து அன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்து விளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே             (8)
   
541கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று
பண்டு மாவலிதன் பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி ஒன்றினால்
கொண்டவன் வரில் கூடிடு கூடலே             (9)
   
542பழகு நான்மறையின் பொருளாய் மதம்
ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே             (10)
   
543ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழற் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே             (11)