முதல் ஆயிரம் ஆண்டாள் நாச்சியார் திருமொழி
|
குயிற் பத்து |
544 | மன்னு பெரும்புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி-முடி மைந்தன் தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்கு உண்டே? புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவள-வாயன் வரக் கூவாய் (1) | |
|
|
|
|
545 | வெள்ளை விளிசங்கு இடங்கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான் உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும் கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதிக் களித்து இசை பாடும் குயிலே மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய் (2) | |
|
|
|
|
546 | மாதலி தேர் முன்பு கோல்கொள்ள மாயன் இராவணன் மேல் சர-மாரி தாய் தலை அற்று அற்று வீழத் தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன் போது அலர் காவிற் புதுமணம் நாறப் பொறி வண்டின் காமரம் கேட்டு உன் காதலியோடு உடன் வாழ் குயிலே என் கருமாணிக்கம் வரக் கூவாய் (3) | |
|
|
|
|
547 | என்பு உருகி இன வேல் நெடுங் கண்கள் இமை பொருந்தா பல நாளும் துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பது ஓர் தோணி பெறாது உழல்கின்றேன் அன்பு உடையாரைப் பிரிவு உறு நோயது நீயும் அறிதி குயிலே பொன் புரை மேனிக் கருளக் கொடி உடைப் புண்ணியனை வரக் கூவாய் (4) | |
|
|
|
|
548 | மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவான் தன் பொன்னடி காண்பது ஓர் ஆசையினால் என் பொரு கயற் கண்ணினை துஞ்சா இன் அடிசிலொடு பால்-அமுது ஊட்டி எடுத்த என் கோலக் கிளியை உன்னொடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகு அளந்தான் வரக் கூவாய் (5) | |
|
|
|
|
549 | எத் திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய முத்து அன்ன வெண் முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான் கொத்து அலர் காவில் மணித்தடம் கண்படை கொள்ளும் இளங் குயிலே என் தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறு இலேனே (6) | |
|
|
|
|
550 | பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப் புணர்வது ஓர் ஆசையினால் என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும் அம் குயிலே உனக்கு என்ன மறைந்து உறைவு? ஆழியும் சங்கும் ஒண் தண்டும் தங்கிய கையவனை வரக் கூவில் நீ சாலத் தருமம் பெறுதி (7) | |
|
|
|
|
551 | சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தம் உடையன் நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டிய கச்சங்கம் நானும் அவனும் அறிதும் தேம் கனி மாம் பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்றியாகில் அவனை நான் செய்வன காணே (8) | |
|
|
|
|
552 | பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பது ஓர் பாசத்து அகப்பட்டிருந்தேன் பொங்கு ஒளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயி லே குறிக்கொண்டு இது நீ கேள் சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல் இங்கு உள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும் (9) | |
|
|
|
|
553 | அன்று உலகம் அளந்தானை உகந்து அடிமைக்கண் அவன் வலி செய்ய தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன் என்றும் இக் காவில் இருந்திருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் (10) | |
|
|
|
|
554 | விண் உற நீண்டு அடி தாவிய மைந்தனை வேற்கண் மடந்தை விரும்பிக் கண்ணுற என் கடல்-வண்ணனைக் கூவு கருங்குயிலே என்ற மாற்றம் பண் உறு நான்மறையோர் புதுவைமன்னன் பட்டர்பிரான் கோதை சொன்ன நண் உறு வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே (11) | |
|
|
|
|