நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி

மேகவிடு தூது
576விண் நீல மேலாப்பு
      விரித்தாற்போல் மேகங்காள்
தெண் நீர் பாய் வேங்கடத்து என்
      திருமாலும் போந்தானே?
கண்ணீர்கள் முலைக்குவட்டிற்
      துளி சோரச் சோர்வேனைப்
பெண் நீர்மை ஈடழிக்கும்
      இது தமக்கு ஓர் பெருமையே?              (1)
   
577மா முத்தநிதி சொரியும்
      மா முகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட
      தாளாளன் வார்த்தை என்னே?
காமத்தீ உள்புகுந்து
      கதுவப்பட்டு இடைக் கங்குல்
ஏமத்து ஓர் தென்றலுக்கு
      இங்கு இலக்காய் நான் இருப்பேனே?         (2)
   
578ஒளி வண்ணம் வளை சிந்தை
      உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் இட்டு என்னை
      ஈடழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என்
      கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள்
      ஆவி காத்து இருப்பேனே?             (3)
   
579மின் ஆகத்து எழுகின்ற
      மேகங்காள் வேங்கடத்துத்
தன் ஆகத் திருமங்கை
      தங்கிய சீர் மார்வற்கு
என் ஆகத்து இளங்கொங்கை
      விரும்பித் தாம் நாள்தோறும்
பொன் ஆகம் புல்குதற்கு என்
      புரிவுடைமை செப்புமினே             (4)
   
580வான் கொண்டு கிளர்ந்து எழுந்த
      மா முகில்காள் வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத்
      திரண்டு ஏறிப் பொழிவீர்காள்
ஊன் கொண்ட வள்-உகிரால்
      இரணியனை உடல் இடந்தான்
தான் கொண்ட சரி-வளைகள்
      தருமாகிற் சாற்றுமினே              (5)
   
581சலங் கொண்டு கிளர்ந்து எழுந்த
      தண் முகில்காள் மாவலியை
நிலங் கொண்டான் வேங்கடத்தே
      நிரந்து ஏறிப் பொழிவீர்காள்
உலங்கு உண்ட விளங்கனி போல்
      உள் மெலியப் புகுந்து என்னை
நலங் கொண்ட நாரணற்கு என்
      நடலை-நோய் செப்புமினே             (6)
   
582சங்க மா கடல் கடைந்தான்
      தண் முகில்காள் வேங்கடத்துச்
செங்கண் மால் சேவடிக் கீழ்
      அடி-வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின்
      குழம்பு அழியப் புகுந்து ஒருநாள்
தங்குமேல் என் ஆவி
      தங்கும் என்று உரையீரே             (7)
   
583கார் காலத்து எழுகின்ற
      கார்முகில்காள் வேங்கடத்துப்
போர் காலத்து எழுந்தருளிப்
      பொருதவனார் பேர் சொல்லி
நீர் காலத்து எருக்கின் அம்
      பழ இலை போல் வீழ்வேனை
வார் காலத்து ஒருநாள் தம்
      வாசகம் தந்தருளாரே             (8)
   
584மத யானை போல் எழுந்த
      மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள்
      பாம்பு-அணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தான் ஆவான்
      கருதாது ஓர் பெண்-கொடியை
வதை செய்தான் என்னும் சொல்
      வையகத்தார் மதியாரே?             (9)
   
585நாகத்தின் அணையானை
      நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக்கோன்
      விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத
      புதுவையர்கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்து உரைப்பார்
      அவர் அடியார் ஆகுவரே             (10)