நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி

கண்ணன் இருக்கும் இடத்துக் கொண்டுசெல்க எனல்
616மற்று இருந்தீர்கட்கு அறியலாகா
      மாதவன் என்பது ஓர் அன்புதன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம்
      ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப்
      பேர்த்து ஒரு தாய் இல் வளர்ந்த நம்பி
மற் பொருந்தாமற் களம் அடைந்த
      மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின்.             (1)
   
617நாணி இனி ஓர் கருமம் இல்லை
      நால்-அயலாரும் அறிந்தொழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து
      பண்டு பண்டு ஆக்க உறுதிராகில்
மாணி உருவாய் உலகு அளந்த
      மாயனைக் காணிற் தலைமறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில்
      ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்.             (2)
   
618தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத்
      தனிவழி போயினாள் என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழி காப்பு அரிது
      மாயவன் வந்து உருக் காட்டுகின்றான்
கொந்தளம் ஆக்கிப் பரக்கழித்துக்
      குறும்பு செய்வான் ஓர் மகனைப் பெற்ற
நந்தகோபாலன் கடைத்தலைக்கே
      நள்-இருட்கண் என்னை உய்த்திடுமின்             (3)
   
619அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான்
      அவன்முகத்து அன்றி விழியேன் என்று
செங்கச்சுக் கொண்டு கண் ஆடை ஆர்த்துச்
      சிறு மானிடவரைக் காணில் நாணும்
கொங்கைத்தலம் இவை நோக்கிக் காணீர்
      கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய்
      யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்.             (4)
   
620ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது
      அம்மனைமீர் துழதிப் படாதே
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன்
      கைகண்ட யோகம் தடவத் தீரும்
நீர்க் கரை நின்ற கடம்பை ஏறிக்
      காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்களமாக நிருத்தம் செய்த
      பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்.            (5)
   
621கார்த் தண் முகிலும் கருவிளையும்
      காயா மலரும் கமலப் பூவும்
ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு
      இருடீகேசன் பக்கல் போகே என்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து
      வேண்டு அடிசில் உண்ணும் போது ஈது என்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும்
      பத்தவிலோசனத்து உய்த்திடுமின்             (6)
   
622வண்ணம்-திரிவும் மனம்-குழைவும்
      மானம் இலாமையும் வாய்வெளுப்பும்
உண்ண லுறாமையும் உள்மெலிவும்
      ஓத நீர் வண்ணன் என்பான் ஒருவன்
தண்ணந் துழாய் என்னும் மாலை கொண்டு
      சூட்டத் தணியும் பிலம்பன் தன்னைப்
பண் அழியப் பலதேவன் வென்ற
      பாண்டிவடத்து என்னை உய்த்திடுமின்             (7)
   
623கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான்
      காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான்
பற்றி உரலிடை யாப்பும் உண்டான்
      பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ?
கற்றன பேசி வசவு உணாதே
      காலிகள் உய்ய மழை தடுத்துக்
கொற்றக் குடையாக ஏந்தி நின்ற
      கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின்             (8)
   
624கூட்டில் இருந்து கிளி எப்போதும்
      கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டக் கொடாது செறுப்பனாகில்
      உலகு-அளந்தான் என்று உயரக் கூவு1ம்
நாட்டில் தலைப்பழி எய்தி உங்கள்
      நன்மை இழந்து தலையிடாதே
சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
      துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்.            (9)
   
625மன்னு மதுரை தொடக்கமாக
      வண் துவராபதிதன் அளவும்
தன்னைத் தமர் உய்த்துப் பெய்ய வேண்டித்
      தாழ்குழலாள் துணிந்த துணிவை
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும்
      புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை
      ஏத்தவல்லார்க்கு இடம் வைகுந்தமே.             (10)