முதல் ஆயிரம் ஆண்டாள் நாச்சியார் திருமொழி
|
விருந்தாவனத்துக் கண்ணனைக் கண்டமை |
636 | பட்டி மேய்ந்து ஓர் காரேறு பலதேவற்கு ஓர் கீழ்க்-கன்றாய் இட்டீறு இட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே? இட்டமான பசுக்களை இனிது மறித்து நீர் ஊட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே (1) |
|
|
|
|
|
637 | அனுங்க என்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே? கணங்களோடு மின் மேகம் கலந்தாற் போல வனமாலை மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே (2) |
|
|
|
|
|
638 | மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே? மேலால் பரந்த வெயில்காப்பான் வினதை-சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே (3) |
|
|
|
|
|
639 | கார்த் தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்தி என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன்தன்னைக் கண்டீரே? போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல் வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே (4) |
|
|
|
|
|
640 | மாதவன் என் மணியினை வலையிற் பிழைத்த பன்றி போல் ஏதும் ஒன்றும் கொளத் தாரா ஈசன்தன்னைக் கண்டீரே? பீதக-ஆடை உடை தாழ பெருங் கார்மேகக் கன்றே போல் வீதி ஆர வருவானை விருந்தாவனத்தே கண்டோமே (5) |
|
|
|
|
|
641 | தருமம் அறியாக் குறும்பனைத் தன் கைச் சார்ங்கம் அதுவே போல் புருவ வட்டம் அழகிய பொருத்தம் இலியைக் கண்டீரே? உருவு கரிதாய் முகம் சேய்தாய் உதயப் பருப்பதத்தின்மேல் விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே (6) |
|
|
|
|
|
642 | பொருத்தம் உடைய நம்பியைப் புறம்போல் உள்ளும் கரியானைக் கருத்தைப் பிழைத்து நின்ற அக் கரு மா முகிலைக் கண்டீரே? அருத்தித் தாரா-கணங்களால் ஆரப் பெருகு வானம் போல் விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே (7) |
|
|
|
|
|
643 | வெளிய சங்கு ஒன்று உடையானைப் பீதக-ஆடை உடையானை அளி நன்கு உடைய திருமாலை ஆழியானைக் கண்டீரே? களி வண்டு எங்கும் கலந்தாற்போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல் மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே (8) |
|
|
|
|
|
644 | நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்தன்னைக் கண்டீரே? காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டையாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே (9) |
|
|
|
|
|
645 | பருந்தாள்-களிற்றுக்கு அருள்செய்த பரமன்தன்னைப் பாரின் மேல் விருந்தாவனத்தே கண்டமை விட்டுசித்தன் கோதை சொல் மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள் பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ்ப் பிரியாது என்றும் இருப்பாரே (10) |
|
|
|
|
|