நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி

விருந்தாவனத்துக் கண்ணனைக் கண்டமை
636பட்டி மேய்ந்து ஓர் காரேறு
      பலதேவற்கு ஓர் கீழ்க்-கன்றாய்
இட்டீறு இட்டு விளையாடி
      இங்கே போதக் கண்டீரே?
இட்டமான பசுக்களை
      இனிது மறித்து நீர் ஊட்டி
விட்டுக் கொண்டு விளையாட
      விருந்தாவனத்தே கண்டோமே             (1)
   
637அனுங்க என்னைப் பிரிவு செய்து
      ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக்
      கோவர்த்தனனைக் கண்டீரே?
கணங்களோடு மின் மேகம்
      கலந்தாற் போல வனமாலை
மினுங்க நின்று விளையாட
      விருந்தாவனத்தே கண்டோமே             (2)
   
638மாலாய்ப் பிறந்த நம்பியை
      மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை
      இங்கே போதக் கண்டீரே?
மேலால் பரந்த வெயில்காப்பான்
      வினதை-சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை
      விருந்தாவனத்தே கண்டோமே             (3)
   
639கார்த் தண் கமலக் கண் என்னும்
      நெடுங்கயிறு படுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்
      ஈசன்தன்னைக் கண்டீரே?
போர்த்த முத்தின் குப்பாயப்
      புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட
      விருந்தாவனத்தே கண்டோமே             (4)
   
640மாதவன் என் மணியினை
      வலையிற் பிழைத்த பன்றி போல்
ஏதும் ஒன்றும் கொளத் தாரா
      ஈசன்தன்னைக் கண்டீரே?
பீதக-ஆடை உடை தாழ
      பெருங் கார்மேகக் கன்றே போல்
வீதி ஆர வருவானை
      விருந்தாவனத்தே கண்டோமே             (5)
   
641தருமம் அறியாக் குறும்பனைத்
      தன் கைச் சார்ங்கம் அதுவே போல்
புருவ வட்டம் அழகிய
      பொருத்தம் இலியைக் கண்டீரே?
உருவு கரிதாய் முகம் சேய்தாய்
      உதயப் பருப்பதத்தின்மேல்
விரியும் கதிரே போல்வானை
      விருந்தாவனத்தே கண்டோமே             (6)
   
642பொருத்தம் உடைய நம்பியைப்
      புறம்போல் உள்ளும் கரியானைக்
கருத்தைப் பிழைத்து நின்ற அக்
      கரு மா முகிலைக் கண்டீரே?
அருத்தித் தாரா-கணங்களால்
      ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை
      விருந்தாவனத்தே கண்டோமே             (7)
   
643வெளிய சங்கு ஒன்று உடையானைப்
      பீதக-ஆடை உடையானை
அளி நன்கு உடைய திருமாலை
      ஆழியானைக் கண்டீரே?
களி வண்டு எங்கும் கலந்தாற்போல்
      கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட
      விருந்தாவனத்தே கண்டோமே             (8)
   
644நாட்டைப் படை என்று அயன் முதலாத்
      தந்த நளிர் மா மலர் உந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும்
      விமலன்தன்னைக் கண்டீரே?
காட்டை நாடித் தேனுகனும்
      களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டையாடி வருவானை
      விருந்தாவனத்தே கண்டோமே             (9)
   
645பருந்தாள்-களிற்றுக்கு அருள்செய்த
      பரமன்தன்னைப் பாரின் மேல்
விருந்தாவனத்தே கண்டமை
      விட்டுசித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே
      வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ்ப்
      பிரியாது என்றும் இருப்பாரே             (10)