நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
குலசேகராழ்வார்
பெருமாள் திருமொழி

அரங்கநாதனது அடியார்க்கு அடியேன்
657தேட்டு அருந் திறல்-தேனினைத் தென்
      அரங்கனைத் திருமாது வாழ்
வாட்டம் இல் வனமாலை மார்வனை
      வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்டம் மேவி அலந்து அழைத்து அயர்வு-
      எய்தும் மெய்யடியார்கள்தம்
ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது
      காணும் கண் பயன் ஆவதே             (1)
   
658தோடு உலா மலர்-மங்கை தோளிணை
      தோய்ந்ததும் சுடர்-வாளியால்
நீடு மா மரம் செற்றதும் நிரை
      மேய்த்ததும் இவையே நினைந்து
ஆடிப் பாடி அரங்க ஓ என்று
      அழைக்கும் தொண்டர் அடிப்-பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து
      ஆடும் வேட்கை என் ஆவதே?             (2)
   
659ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம்
      கீண்டதும் முன் இராமனாய்
மாறு அடர்த்ததும் மண் அளந்ததும்
      சொல்லிப் பாடி வண் பொன்னிப் பேர்-
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு
      அரங்கன் கோயில்-திருமுற்றம்
சேறு செய் தொண்டர் சேவடிச் செழுஞ்
      சேறு என் சென்னிக்கு அணிவனே             (3)
   
660தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன்
      உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என்
      அரங்கனுக்கு அடியார்களாய்
நாத் தழும்பு எழ நாரணா என்று
      அழைத்து மெய் தழும்பத் தொழுது
ஏத்தி இன்பு உறும் தொண்டர் சேவடி
      ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே             (4)
   
661பொய் சிலைக் குரல் ஏற்று-எருத்தம்
      இறுத்தப் போர்-அரவு ஈர்த்த கோன்
செய் சிலைச் சுடர் சூழ் ஒளித் திண்ண
      மா மதில்-தென் அரங்கனாம்
மெய் சிலைக் கருமேகம் ஒன்று தம்
      நெஞ்சில் நின்று திகழப் போய்
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து
      என் மனம் மெய் சிலிர்க்குமே             (5)
   
662ஆதி அந்தம் அனந்தம் அற்புதம்
      ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி
      இலாத பாவிகள் உய்ந்திடத்
தீதில் நன்னெறி காட்டி எங்கும்
      திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும்
      காதல் செய்யும் என் நெஞ்சமே            (6)
   
663கார்-இனம் புரை மேனி நற் கதிர்
      முத்த வெண்ணகைச் செய்ய வாய்
ஆர-மார்வன் அரங்கன் என்னும்
      அரும் பெருஞ்சுடர் ஒன்றினைச்
சேரும் நெஞ்சினர் ஆகிச் சேர்ந்து
      கசிந்து இழிந்த கண்ணீர்களால்
வார நிற்பவர் தாளிணைக்கு ஒரு
      வாரம் ஆகும் என் நெஞ்சமே             (7)
   
664மாலை உற்ற கடற் கிடந்தவன்
      வண்டு கிண்டு நறுந்துழாய்
மாலை உற்ற வரைப் பெருந் திரு
      மார்வனை மலர்க் கண்ணனை
மாலை உற்று எழுந்து ஆடிப்பாடித்
      திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு
      மாலை உற்றது என் நெஞ்சமே             (8)
   
665மொய்த்துக் கண் பனி சோர மெய்கள்
      சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று
எய்த்துக் கும்பிடு நட்டம் இட்டு எழுந்து
      ஆடிப் பாடி இறைஞ்சி என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடி
      யார்கள் ஆகி அவனுக்கே
பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே             (9)
   
666அல்லி மா மலர்-மங்கை நாதன்
      அரங்கன் மெய்யடியார்கள் தம்
எல்லை இல் அடிமைத் திறத்தினில்
      என்றும் மேவு மனத்தனாம்
கொல்லி-காவலன் கூடல்-நாயகன்
      கோழிக்கோன் குலசேகரன்
சொல்லின் இன்தமிழ் மாலை வல்லவர்
      தொண்டர் தொண்டர்கள் ஆவரே             (10)