நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
குலசேகராழ்வார்
பெருமாள் திருமொழி

கன்னியர் ஊடிக் கண்ணனை எள்குதல்
697ஏர் மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர்
      எனைப் பலர் உள்ள இவ் ஊரில் உன்தன்
மார்வு தழுவுதற்கு ஆசையின்மை
      அறிந்தறிந்தே உன்தன் பொய்யைக் கேட்டு
கூர் மழை போல் பனிக் கூதல் எய்திக்
      கூசி நடுங்கி யமுனை யாற்றில்
வார் மணற் குன்றிற் புலர நின்றேன்
      வாசுதேவா உன் வரவு பார்த்தே             (1)
   
698கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி
      கீழை அகத்துத் தயிர் கடையக்
கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று
      கள்ள-விழியை விழித்துப் புக்கு
வண்டு அமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ
      வாள்முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்
      தாமோதரா மெய் அறிவன் நானே             (2)
   
699கருமலர்க் கூந்தல் ஒருத்திதன்னைக்
      கடைக்கணித்து ஆங்கே ஒருத்திதன்பால்
மருவி மனம் வைத்து மற்றொருத்திக்கு
      உரைத்து ஒரு பேதைக்குப் பொய் குறித்து
புரிகுழல் மங்கை ஒருத்திதன்னைப்
      புணர்தி அவளுக்கும் மெய்யன் அல்லை
மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே
      வளர்கின்றதால் உன்தன் மாயை தானே.             (3)
   
700தாய்-முலைப் பாலில் அமுதிருக்கத்
      தவழ்ந்து தளர்நடையிட்டுச் சென்று
பேய்-முலை வாய்வைத்து நஞ்சை உண்டு
      பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்
ஆய்மிகு காதலோடு யான் இருப்ப
      யான் விட வந்த என் தூதியோடே
நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய்
      அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே.             (4)
   
701மின்னொத்த நுண்ணிடையாளைக் கொண்டு
      வீங்கு இருள்வாய் என்தன் வீதியூடே
பொன்னொத்த ஆடை குக்கூடலிட்டுப்
      போகின்ற போது நான் கண்டு நின்றேன்
கண்ணுற்றவளை நீ கண்ணாலிட்டுக்
      கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய்?
      இன்னம் அங்கே நட நம்பி நீயே.             (5)
   
702மற் பொரு தோள் உடை வாசுதேவா
      வல்வினையேன் துயில் கொண்டவாறே
இற்றை இரவிடை ஏமத்து என்னை
      இன்னணைமேல் இட்டு அகன்று நீ போய்
அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும்
      அரிவையரோடும் அணைந்து வந்தாய்
எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய்?
      எம்பெருமான் நீ எழுந்தருளே             (6)
   
703பையரவின் அணைப் பள்ளியினாய்
      பண்டையோம் அல்லோம் நாம் நீ உகக்கும்
மையரி ஒண் கண்ணினாரும் அல்லோம்
      வைகி எம் சேரி வரவு ஒழி நீ
செய்ய உடையும் திருமுகமும்
      செங்கனிவாயும் குழலும் கண்டு
பொய் ஒரு நாள் பட்டதே அமையும்
      புள்ளுவம் பேசாதே போகு நம்பீ             (7)
   
704என்னை வருக எனக் குறித்திட்டு
      இனமலர் முல்லையின் பந்தர்-நீழல்
மன்னி அவளைப் புணரப் புக்கு
      மற்று என்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன்னிற ஆடையைக் கையிற் தாங்கிப்
      பொய்-அச்சம் காட்டி நீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள்
      வருதியேல் என் சினம் தீர்வன் நானே            (8)
   
705மங்கல நல் வனமாலை மார்வில்
      இலங்க மயில்-தழைப் பீலி சூடி
பொங்கு இள ஆடை அரையிற் சாத்தி
      பூங்கொத்துக் காதிற் புணரப் பெய்து
கொங்கு நறுங் குழலார்களோடு
      குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்
எங்களுக்கே ஒருநாள் வந்து ஊத
      உன் குழலின் இசை போதராதே?             (9)
   
706அல்லி மலர்த் திருமங்கை கேள்வன்
      தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள்
எல்லிப் பொழுதினில் ஏமத்து ஊடி
      எள்கி உரைத்த உரையதனைக்
கொல்லி நகர்க்கு இறை கூடற்கோமான்
      குலசேகரன் இன்னிசையில் மேவிச்
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்
      சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பந் தானே.            (10)