நாலாயிர திவ்ய பிரபந்தம்

முதல் ஆயிரம்
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்

திருமலை
871காவலிற் புலனை வைத்து
      கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழிதர்கின்றோம்
      நமன்-தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த
      முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்பு உடைமை கண்டாய்
      அரங்க மா நகருளானே             (1)

871

பதிவிறக்கம் செய்ய
   
872பச்சை மா மலை போல் மேனி
      பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
      ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச் சுவை தவிர யான் போய்
      இந்திர-லோகம் ஆளும்
அச் சுவை பெறினும் வேண்டேன்
      அரங்க மா நகருளானே             (2)

872

பதிவிறக்கம் செய்ய
   
873வேத நூற் பிராயம் நூறு
      மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும்
      நின்றதிற் பதினையாண்டு
பேதை பாலகன் அது ஆகும்
      பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன்
      அரங்க மா நகருளானே             (3)

873

பதிவிறக்கம் செய்ய
   
874மொய்த்த வல்வினையுள் நின்று
      மூன்று எழுத்து உடைய பேரால்
கத்திரபந்தும் அன்றே
      பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை அடியர் ஆனார்க்கு
      இரங்கும் நம் அரங்கன் ஆய
பித்தனைப் பெற்றும் அந்தோ
      பிறவியுள் பிணங்குமாறே             (4)

874

பதிவிறக்கம் செய்ய
   
875பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்
      பெரியது ஓர் இடும்பை பூண்டு
உண்டு இராக் கிடக்கும் அப்போது
      உடலுக்கே கரைந்து நைந்து
தண் துழாய்-மாலை மார்பன்
      தமர்களாய்ப் பாடி ஆடி
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத்
      தொழும்பர்சோறு உகக்குமாறே            (5)
   
876மறம் சுவர் மதில் எடுத்து
      மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம் சுவர் ஓட்டை மாடம்
      புரளும் போது அறிய மாட்டீர்
அறம் சுவர் ஆகி நின்ற
      அரங்கனார்க்கு ஆட் செய்யாதே
புறஞ் சுவர்க் கோலஞ் செய்து
      புள் கௌவக் கிடக்கின்றீரே            (6)
   
877புலை-அறம் ஆகி நின்ற
      புத்தொடு சமணம் எல்லாம்
கலை அறக் கற்ற மாந்தர்
      காண்பரோ? கேட்பரோ தாம்?
தலை அறுப்பு உண்டும் சாவேன்
      சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற
      தேவனே தேவன் ஆவான்             (7)
   
878வெறுப்பொடு சமணர் முண்டர்
      விதி இல் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பு அரியனகள் பேசில்
      போவதே நோயது ஆகி
குறிப்பு எனக்கு அடையும் ஆகில்
      கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய்
      அரங்க மா நகருளானே             (8)
   
879மற்றும் ஓர் தெய்வம் உண்டே?
      மதி இலா மானிடங்காள்
உற்றபோது அன்றி நீங்கள்
      ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றம் மேல் ஒன்று அறியீர்
      அவன் அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை
      கழலிணை பணிமின் நீரே             (9)
   
880நாட்டினான் தெய்வம் எங்கும்
      நல்லது ஓர் அருள்தன்னாலே
காட்டினான் திருவரங்கம்
      உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பிமீர்காள்
      கெருடவா கனனும் நிற்கச்
சேட்டைதன் மடியகத்துச்
      செல்வம் பார்த்து இருக்கின்றீரே             (10)
   
881ஒரு வில்லால் ஓங்கு முந்நீர்
      அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே அரக்கர்கோனைச்
      செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில்
      மதில்-திருவரங்கம் என்னா
கருவிலே திரு இலாதீர்
      காலத்தைக் கழிக்கின்றீரே             (11)
   
882நமனும் முற்கலனும் பேச
      நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சுவர்க்கம் ஆகும்
      நாமங்கள் உடையன் நம்பி
அவனது ஊர் அரங்கம் என்னாது
      அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
கவலையுள் படுகின்றார் என்று
      அதனுக்கே கவல்கின்றேனே             (12)
   
883எறியும் நீர் வெறிகொள் வேலை
      மாநிலத்து உயிர்கள் எல்லாம்
வெறிகொள் பூந்துளவ மாலை
      விண்ணவர்கோனை ஏத்த
அறிவு இலா மனிசர் எல்லாம்
      அரங்கம் என்று அழைப்பராகில்
பொறியில் வாழ் நரகம் எல்லாம்
      புல் எழுந்து ஒழியும் அன்றே            (13)
   
884வண்டினம் முரலும் சோலை
      மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை
      குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை
      அணி திருவரங்கம் என்னா
மிண்டர்பாய்ந்து உண்ணும்சோற்றை
      விலக்கி நாய்க்கு இடுமின் நீரே             (14)
   
885மெய்யர்க்கே மெய்யன் ஆகும்
      விதி இலா என்னைப் போலப்
பொய்யர்க்கே பொய்யன் ஆகும்
      புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு
      ஒருவன் என்று உணர்ந்த பின்னை
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும்
      அழகன் ஊர் அரங்கம் அன்றே             (15)
   
886சூதனாய்க் கள்வனாகித்
      தூர்த்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயற்கண் என்னும்
      வலையுள் பட்டு அழுந்துவேனைப்
போதரே என்று சொல்லிப்
      புந்தியுள் புகுந்து தன்பால்
ஆதரம் பெருக வைத்த
      அழகன் ஊர் அரங்கம் அன்றே             (16)
   
887விரும்பி நின்று ஏத்த மாட்டேன்
      விதி இலேன் மதி ஒன்று இல்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம்
      இறை-இறை உருகும் வண்ணம்
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த
      அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என்
      கண்ணினை களிக்குமாறே             (17)
   
888இனி திரைத் திவலை மோத
      எறியும் தண் பரவை மீதே
தனி கிடந்து அரசு செய்யும்
      தாமரைக்கண்ணன் எம்மான்
கனி இருந்தனைய செவ்வாய்க்
      கண்ணனைக் கண்ட கண்கள்
பனி-அரும்பு உதிருமாலோ
      என் செய்கேன் பாவியேனே?             (18)
   
889குடதிசை முடியை வைத்துக்
      குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித்
      தென்திசை இலங்கை நோக்கிக்
கடல்-நிறக் கடவுள் எந்தை
      அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ
      என் செய்கேன் உலகத்தீரே?            (19)
   
890பாயும் நீர் அரங்கந் தன்னுள்
      பாம்பு-அணைப் பள்ளிகொண்ட
மாயனார் திரு நன் மார்வும்
      மரகத-உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும்
      துவர்-இதழ்ப் பவள-வாயும்
ஆய சீர் முடியும் தேசும்
      அடியரோர்க்கு அகலல் ஆமே?             (20)
   
891பணிவினால் மனமது ஒன்றிப்
      பவள-வாய் அரங்கனார்க்குத்
துணிவினால் வாழ மாட்டாத்
      தொல்லை நெஞ்சே நீ சொல்லாய்
அணியின் ஆர் செம்பொன் ஆய
      அருவரை அனைய கோயில்
மணி அனார் கிடந்தவாற்றை
      மனத்தினால் நினைக்கல் ஆமே?             (21)
   
892பேசிற்றே பேசல் அல்லால்
      பெருமை ஒன்று உணரல் ஆகாது
ஆசற்றார் தங்கட்கு அல்லால்
      அறியல் ஆவானும் அல்லன்
மாசற்றார் மனத்துளானை
      வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தான் ஆவது உண்டோ?
      பேதை நெஞ்சே நீ சொல்லாய்             (22)
   
893கங்கையிற் புனிதம் ஆய
      காவிரி நடுவுபாட்டுப்
பொங்குநீர் பரந்து பாயும்
      பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன்
      கிடந்தது ஓர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்?
      ஏழையேன் ஏழையேனே             (23)
   
894வெள்ள-நீர் பரந்து பாயும்
      விரி பொழில் அரங்கந் தன்னுள்
கள்வனார் கிடந்தவாறும்
      கமல நன் முகமும் கண்டும்
உள்ளமே வலியை போலும்
      ஒருவன் என்று உணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்து உன்
      கள்ளத்தே கழிக்கின்றாயே             (24)
   
895குளித்து மூன்று அனலை ஓம்பும்
      குறிகொள் அந்தணமை தன்னை
ஒளித்திட்டேன் என்கண் இல்லை
      நின்கணும் பத்தன் அல்லேன்
களிப்பது என் கொண்டு? நம்பீ
      கடல்வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள்செய் கண்டாய்
      அரங்க மா நகருளானே             (25)
   
896போதெல்லாம் போது கொண்டு உன்
      பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டு உன்
      திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு
      கலந்திலேன் அது தன்னாலே
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே
      என் செய்வான் தோன்றினேனே?             (26)
   
897குரங்குகள் மலையை நூக்கக்
      குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடைக்கல் உற்ற
      சலம் இலா அணிலும் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்ச
      வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்க்கு ஆட் செய்யாதே
      அளியத்தேன் அயர்க்கின்றேனே             (27)
   
898உம்பரால் அறியல் ஆகா
      ஒளியுளார் ஆனைக்கு ஆகிச்
செம் புலால் உண்டு வாழும்
      முதலைமேல் சீறி வந்தார்
நம் பரம் ஆயது உண்டே?
      நாய்களோம் சிறுமை ஓரா
எம்பிராற்கு ஆட் செய்யாதே
      என் செய்வான் தோன்றினேனே            (28)
   
899ஊர் இலேன் காணி இல்லை
      உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம்
      பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என்
      கண்ணனே கதறுகின்றேன்
ஆர் உளர் களைகண்? அம்மா
      அரங்க மா நகருளானே             (29)
   
900மனத்தில் ஓர் தூய்மை இல்லை
      வாயில் ஓர் இன்சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித்
      தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலையானே
      பொன்னி சூழ் திருவரங்கா
எனக்கு இனிக் கதி என் சொல்லாய்?
      என்னை ஆளுடைய கோவே            (30)
   
901தவத்துளார் தம்மில் அல்லேன்
      தனம் படைத்தாரில் அல்லேன்
உவர்த்த நீர் போல என்தன்
      உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்
துவர்த்த செவ்வாயினார்க்கே
      துவக்கு அறத் துரிசன் ஆனேன்
அவத்தமே பிறவி தந்தாய்
      அரங்க மா நகருளானே             (31)
   
902ஆர்த்து வண்டு அலம்பும் சோலை
      அணி திரு அரங்கந் தன்னுள்
கார்த் திரள் அனைய மேனிக்
      கண்ணனே உன்னைக் காணு
மார்க்கம் ஒன்று அறியமாட்டா
      மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன்
      மூர்க்கனேன் மூர்க்கனேனே             (32)
   
903மெய் எல்லாம் போக விட்டு
      விரிகுழலாரிற் பட்டுப்
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட
      போழ்க்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்கனே உன்
      அருள் என்னும் ஆசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன்
      பொய்யனேன் பொய்யனேனே             (33)
   
904உள்ளத்தே உறையும் மாலை
      உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லாக்
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்
      தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம்
      உடன் இருந்து அறிதி என்று
வெள்கிப்போய் என்னுள்ளே நான்
      விலவு அறச் சிரித்திட்டேனே             (34)
   
905தாவி அன்று உலகம் எல்லாம்
      தலைவிளாக்கொண்ட எந்தாய்
சேவியேன் உன்னை அல்லால்
      சிக்கெனச் செங்கண் மாலே
ஆவியே அமுதே என்தன்
      ஆருயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால்
      பாவியேன் பாவியேனே             (35)
   
906மழைக்கு அன்று வரை முன் ஏந்தும்
      மைந்தனே மதுர ஆறே
உழைக் கன்றே போல நோக்கம்
      உடையவர் வலையுள் பட்டு
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது
      ஒழிவதே உன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி
      அரங்கமா நகருளானே             (36)
   
907தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ்
      திருவரங்கத்துள் ஓங்கும்
ஒளியுளார் தாமே யன்றே
      தந்தையும் தாயும் ஆவார்?
எளியது ஓர் அருளும் அன்றே
      என் திறத்து? எம்பிரானார்
அளியன் நம் பையல் என்னார்
      அம்மவோ கொடியவாறே            (37)
   
908மேம் பொருள் போக விட்டு
      மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம் பரிசு அறிந்துகொண்டு
      ஐம்புலன் அகத்து அடக்கிக்
காம்பு அறத் தலை சிரைத்து உன்
      கடைத்தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும்
      சூழ் புனல் அரங்கத்தானே             (38)
   
909அடிமையிற் குடிமை இல்லா
      அயல் சதுப்பேதிமாரிற்
குடிமையிற் கடைமை பட்ட
      குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய்
      மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும்
      அரங்க மா நகருளானே 39
   
910திருமறுமார்வ நின்னைச்
      சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்தர் ஆகில்
      மா நிலத்து உயிர்கள் எல்லாம்
வெருவு உறக் கொன்று சுட்டிட்டு
      ஈட்டிய வினையரேலும்
அருவினைப் பயன துய்யார்
      அரங்க மா நகருளானே             (40)
   
911வானுளார் அறியல் ஆகா
      வானவா என்பர் ஆகில்
தேனுலாம் துளப மாலைச்
      சென்னியாய் என்பர் ஆகில்
ஊனம் ஆயினகள் செய்யும்
      ஊனகாரகர்களேலும்
போனகம் செய்த சேடம்
      தருவரேல் புனிதம் அன்றே             (41)               
   
912பழுது இலா ஒழுகல்-ஆற்றுப்
      பல சதுப்பேதிமார்கள்   
இழிகுலத்தவர்களேலும்
      எம் அடியார்கள் ஆகில்
தொழுமின் நீர் கொடுமின் கொண்மின்
      என்று நின்னோடும் ஒக்க
வழிபட அருளினாய் போல்
      மதில்-திருவரங்கத்தானே             (42)
   
913அமர ஓர் அங்கம் ஆறும்
      வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களிற் தலைவராய
      சாதி-அந்தணர்களேலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில்
      நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும்
      அரங்க மா நகருளானே             (43)
   
914பெண் உலாம் சடையினானும்
      பிரமனும் உன்னைக் காண்பான்
எண் இலா ஊழி ஊழி
      தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண் உளார் வியப்ப வந்து
      ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணறா உன்னை என்னோ?
      களைகணாக் கருதுமாறே             (44)
   
915வள எழும் தவள மாட
      மதுரை மா நகரந் தன்னுள்
கவள மால் யானை கொன்ற
      கண்ணனை அரங்க-மாலைத்
துளவத் தொண்டு ஆய தொல் சீர்த்
      தொண்டரடிப் பொடி சொல்
இளைய புன் கவிதையேலும்
      எம்பிராற்கு இனியவாறே             (45)