| முதல் ஆயிரம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
 
 
 | 
		| திருமலை | 
					
			
			
      | | 871 | காவலிற் புலனை வைத்து கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
 நாவலிட்டு உழிதர்கின்றோம்
 நமன்-தமர் தலைகள் மீதே
 மூவுலகு உண்டு உமிழ்ந்த
 முதல்வ நின் நாமம் கற்ற
 ஆவலிப்பு உடைமை கண்டாய்
 அரங்க மா நகருளானே             (1)
 | 
 | 871பதிவிறக்கம் செய்ய 
 | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 872 | பச்சை மா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
 அச்சுதா அமரர் ஏறே
 ஆயர் தம் கொழுந்தே என்னும்
 இச் சுவை தவிர யான் போய்
 இந்திர-லோகம் ஆளும்
 அச் சுவை பெறினும் வேண்டேன்
 அரங்க மா நகருளானே             (2)
 | 
 | 872பதிவிறக்கம் செய்ய 
 | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 873 | வேத நூற் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
 பாதியும் உறங்கிப் போகும்
 நின்றதிற் பதினையாண்டு
 பேதை பாலகன் அது ஆகும்
 பிணி பசி மூப்புத் துன்பம்
 ஆதலால் பிறவி வேண்டேன்
 அரங்க மா நகருளானே             (3)
 | 
 | 873பதிவிறக்கம் செய்ய 
 | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 874 | மொய்த்த வல்வினையுள் நின்று மூன்று எழுத்து உடைய பேரால்
 கத்திரபந்தும் அன்றே
 பராங்கதி கண்டு கொண்டான்
 இத்தனை அடியர் ஆனார்க்கு
 இரங்கும் நம் அரங்கன் ஆய
 பித்தனைப் பெற்றும் அந்தோ
 பிறவியுள் பிணங்குமாறே             (4)
 | 
 | 874பதிவிறக்கம் செய்ய 
 | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 875 | பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியது ஓர் இடும்பை பூண்டு
 உண்டு இராக் கிடக்கும் அப்போது
 உடலுக்கே கரைந்து நைந்து
 தண் துழாய்-மாலை மார்பன்
 தமர்களாய்ப் பாடி ஆடி
 தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத்
 தொழும்பர்சோறு உகக்குமாறே            (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 876 | மறம் சுவர் மதில் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
 புறம் சுவர் ஓட்டை மாடம்
 புரளும் போது அறிய மாட்டீர்
 அறம் சுவர் ஆகி நின்ற
 அரங்கனார்க்கு ஆட் செய்யாதே
 புறஞ் சுவர்க் கோலஞ் செய்து
 புள் கௌவக் கிடக்கின்றீரே            (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 877 | புலை-அறம் ஆகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
 கலை அறக் கற்ற மாந்தர்
 காண்பரோ? கேட்பரோ தாம்?
 தலை அறுப்பு உண்டும் சாவேன்
 சத்தியம் காண்மின் ஐயா
 சிலையினால் இலங்கை செற்ற
 தேவனே தேவன் ஆவான்             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 878 | வெறுப்பொடு சமணர் முண்டர் விதி இல் சாக்கியர்கள் நின்பால்
 பொறுப்பு அரியனகள் பேசில்
 போவதே நோயது ஆகி
 குறிப்பு எனக்கு அடையும் ஆகில்
 கூடுமேல் தலையை ஆங்கே
 அறுப்பதே கருமம் கண்டாய்
 அரங்க மா நகருளானே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 879 | மற்றும் ஓர் தெய்வம் உண்டே? மதி இலா மானிடங்காள்
 உற்றபோது அன்றி நீங்கள்
 ஒருவன் என்று உணர மாட்டீர்
 அற்றம் மேல் ஒன்று அறியீர்
 அவன் அல்லால் தெய்வம் இல்லை
 கற்றினம் மேய்த்த எந்தை
 கழலிணை பணிமின் நீரே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 880 | நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லது ஓர் அருள்தன்னாலே
 காட்டினான் திருவரங்கம்
 உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
 கேட்டிரே நம்பிமீர்காள்
 கெருடவா கனனும் நிற்கச்
 சேட்டைதன் மடியகத்துச்
 செல்வம் பார்த்து இருக்கின்றீரே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 881 | ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச்
 செருவிலே அரக்கர்கோனைச்
 செற்ற நம் சேவகனார்
 மருவிய பெரிய கோயில்
 மதில்-திருவரங்கம் என்னா
 கருவிலே திரு இலாதீர்
 காலத்தைக் கழிக்கின்றீரே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 882 | நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க
 நரகமே சுவர்க்கம் ஆகும்
 நாமங்கள் உடையன் நம்பி
 அவனது ஊர் அரங்கம் என்னாது
 அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
 கவலையுள் படுகின்றார் என்று
 அதனுக்கே கவல்கின்றேனே             (12)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 883 | எறியும் நீர் வெறிகொள் வேலை மாநிலத்து உயிர்கள் எல்லாம்
 வெறிகொள் பூந்துளவ மாலை
 விண்ணவர்கோனை ஏத்த
 அறிவு இலா மனிசர் எல்லாம்
 அரங்கம் என்று அழைப்பராகில்
 பொறியில் வாழ் நரகம் எல்லாம்
 புல் எழுந்து ஒழியும் அன்றே            (13)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 884 | வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
 கொண்டல் மீது அணவும் சோலை
 குயிலினம் கூவும் சோலை
 அண்டர்கோன் அமரும் சோலை
 அணி திருவரங்கம் என்னா
 மிண்டர்பாய்ந்து உண்ணும்சோற்றை
 விலக்கி நாய்க்கு இடுமின் நீரே             (14)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 885 | மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதி இலா என்னைப் போலப்
 பொய்யர்க்கே பொய்யன் ஆகும்
 புட்கொடி உடைய கோமான்
 உய்யப்போம் உணர்வினார்கட்கு
 ஒருவன் என்று உணர்ந்த பின்னை
 ஐயப்பாடு அறுத்துத் தோன்றும்
 அழகன் ஊர் அரங்கம் அன்றே             (15)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 886 | சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்த காலம்
 மாதரார் கயற்கண் என்னும்
 வலையுள் பட்டு அழுந்துவேனைப்
 போதரே என்று சொல்லிப்
 புந்தியுள் புகுந்து தன்பால்
 ஆதரம் பெருக வைத்த
 அழகன் ஊர் அரங்கம் அன்றே             (16)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 887 | விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதி இலேன் மதி ஒன்று இல்லை
 இரும்புபோல் வலிய நெஞ்சம்
 இறை-இறை உருகும் வண்ணம்
 சுரும்பு அமர் சோலை சூழ்ந்த
 அரங்க மா கோயில் கொண்ட
 கரும்பினைக் கண்டு கொண்டு என்
 கண்ணினை களிக்குமாறே             (17)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 888 | இனி திரைத் திவலை மோத எறியும் தண் பரவை மீதே
 தனி கிடந்து அரசு செய்யும்
 தாமரைக்கண்ணன் எம்மான்
 கனி இருந்தனைய செவ்வாய்க்
 கண்ணனைக் கண்ட கண்கள்
 பனி-அரும்பு உதிருமாலோ
 என் செய்கேன் பாவியேனே?             (18)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 889 | குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
 வடதிசை பின்பு காட்டித்
 தென்திசை இலங்கை நோக்கிக்
 கடல்-நிறக் கடவுள் எந்தை
 அரவணைத் துயிலுமா கண்டு
 உடல் எனக்கு உருகுமாலோ
 என் செய்கேன் உலகத்தீரே?            (19)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 890 | பாயும் நீர் அரங்கந் தன்னுள் பாம்பு-அணைப் பள்ளிகொண்ட
 மாயனார் திரு நன் மார்வும்
 மரகத-உருவும் தோளும்
 தூய தாமரைக் கண்களும்
 துவர்-இதழ்ப் பவள-வாயும்
 ஆய சீர் முடியும் தேசும்
 அடியரோர்க்கு அகலல் ஆமே?             (20)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 891 | பணிவினால் மனமது ஒன்றிப் பவள-வாய் அரங்கனார்க்குத்
 துணிவினால் வாழ மாட்டாத்
 தொல்லை நெஞ்சே நீ சொல்லாய்
 அணியின் ஆர் செம்பொன் ஆய
 அருவரை அனைய கோயில்
 மணி அனார் கிடந்தவாற்றை
 மனத்தினால் நினைக்கல் ஆமே?             (21)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 892 | பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஒன்று உணரல் ஆகாது
 ஆசற்றார் தங்கட்கு அல்லால்
 அறியல் ஆவானும் அல்லன்
 மாசற்றார் மனத்துளானை
 வணங்கி நாம் இருப்பது அல்லால்
 பேசத்தான் ஆவது உண்டோ?
 பேதை நெஞ்சே நீ சொல்லாய்             (22)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 893 | கங்கையிற் புனிதம் ஆய காவிரி நடுவுபாட்டுப்
 பொங்குநீர் பரந்து பாயும்
 பூம்பொழில் அரங்கந் தன்னுள்
 எங்கள் மால் இறைவன் ஈசன்
 கிடந்தது ஓர் கிடக்கை கண்டும்
 எங்ஙனம் மறந்து வாழ்கேன்?
 ஏழையேன் ஏழையேனே             (23)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 894 | வெள்ள-நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கந் தன்னுள்
 கள்வனார் கிடந்தவாறும்
 கமல நன் முகமும் கண்டும்
 உள்ளமே வலியை போலும்
 ஒருவன் என்று உணர மாட்டாய்
 கள்ளமே காதல் செய்து உன்
 கள்ளத்தே கழிக்கின்றாயே             (24)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 895 | குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை தன்னை
 ஒளித்திட்டேன் என்கண் இல்லை
 நின்கணும் பத்தன் அல்லேன்
 களிப்பது என் கொண்டு? நம்பீ
 கடல்வண்ணா கதறுகின்றேன்
 அளித்து எனக்கு அருள்செய் கண்டாய்
 அரங்க மா நகருளானே             (25)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 896 | போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்
 தீதிலா மொழிகள் கொண்டு உன்
 திருக்குணம் செப்ப மாட்டேன்
 காதலால் நெஞ்சம் அன்பு
 கலந்திலேன் அது தன்னாலே
 ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே
 என் செய்வான் தோன்றினேனே?             (26)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 897 | குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்
 தரங்க நீர் அடைக்கல் உற்ற
 சலம் இலா அணிலும் போலேன்
 மரங்கள் போல் வலிய நெஞ்ச
 வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
 அரங்கனார்க்கு ஆட் செய்யாதே
 அளியத்தேன் அயர்க்கின்றேனே             (27)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 898 | உம்பரால் அறியல் ஆகா ஒளியுளார் ஆனைக்கு ஆகிச்
 செம் புலால் உண்டு வாழும்
 முதலைமேல் சீறி வந்தார்
 நம் பரம் ஆயது உண்டே?
 நாய்களோம் சிறுமை ஓரா
 எம்பிராற்கு ஆட் செய்யாதே
 என் செய்வான் தோன்றினேனே            (28)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 899 | ஊர் இலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
 பாரில் நின் பாத மூலம்
 பற்றிலேன் பரம மூர்த்தி
 காரொளி வண்ணனே என்
 கண்ணனே கதறுகின்றேன்
 ஆர் உளர் களைகண்? அம்மா
 அரங்க மா நகருளானே             (29)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 900 | மனத்தில் ஓர் தூய்மை இல்லை வாயில் ஓர் இன்சொல் இல்லை
 சினத்தினால் செற்றம் நோக்கித்
 தீவிளி விளிவன் வாளா
 புனத்துழாய் மாலையானே
 பொன்னி சூழ் திருவரங்கா
 எனக்கு இனிக் கதி என் சொல்லாய்?
 என்னை ஆளுடைய கோவே            (30)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 901 | தவத்துளார் தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன்
 உவர்த்த நீர் போல என்தன்
 உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்
 துவர்த்த செவ்வாயினார்க்கே
 துவக்கு அறத் துரிசன் ஆனேன்
 அவத்தமே பிறவி தந்தாய்
 அரங்க மா நகருளானே             (31)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 902 | ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திரு அரங்கந் தன்னுள்
 கார்த் திரள் அனைய மேனிக்
 கண்ணனே உன்னைக் காணு
 மார்க்கம் ஒன்று அறியமாட்டா
 மனிசரில் துரிசனாய
 மூர்க்கனேன் வந்து நின்றேன்
 மூர்க்கனேன் மூர்க்கனேனே             (32)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 903 | மெய் எல்லாம் போக விட்டு விரிகுழலாரிற் பட்டுப்
 பொய் எல்லாம் பொதிந்து கொண்ட
 போழ்க்கனேன் வந்து நின்றேன்
 ஐயனே அரங்கனே உன்
 அருள் என்னும் ஆசை தன்னால்
 பொய்யனேன் வந்து நின்றேன்
 பொய்யனேன் பொய்யனேனே             (33)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 904 | உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லாக்
 கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்
 தொண்டுக்கே கோலம் பூண்டு
 உள்ளுவார் உள்ளிற்று எல்லாம்
 உடன் இருந்து அறிதி என்று
 வெள்கிப்போய் என்னுள்ளே நான்
 விலவு அறச் சிரித்திட்டேனே             (34)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 905 | தாவி அன்று உலகம் எல்லாம் தலைவிளாக்கொண்ட எந்தாய்
 சேவியேன் உன்னை அல்லால்
 சிக்கெனச் செங்கண் மாலே
 ஆவியே அமுதே என்தன்
 ஆருயிர் அனைய எந்தாய்
 பாவியேன் உன்னை அல்லால்
 பாவியேன் பாவியேனே             (35)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 906 | மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுர ஆறே
 உழைக் கன்றே போல நோக்கம்
 உடையவர் வலையுள் பட்டு
 உழைக்கின்றேற்கு என்னை நோக்காது
 ஒழிவதே உன்னை யன்றே
 அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி
 அரங்கமா நகருளானே             (36)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 907 | தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கத்துள் ஓங்கும்
 ஒளியுளார் தாமே யன்றே
 தந்தையும் தாயும் ஆவார்?
 எளியது ஓர் அருளும் அன்றே
 என் திறத்து? எம்பிரானார்
 அளியன் நம் பையல் என்னார்
 அம்மவோ கொடியவாறே            (37)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 908 | மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
 ஆம் பரிசு அறிந்துகொண்டு
 ஐம்புலன் அகத்து அடக்கிக்
 காம்பு அறத் தலை சிரைத்து உன்
 கடைத்தலை இருந்து வாழும்
 சோம்பரை உகத்தி போலும்
 சூழ் புனல் அரங்கத்தானே             (38)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 909 | அடிமையிற் குடிமை இல்லா அயல் சதுப்பேதிமாரிற்
 குடிமையிற் கடைமை பட்ட
 குக்கரில் பிறப்பரேலும்
 முடியினில் துளபம் வைத்தாய்
 மொய் கழற்கு அன்பு செய்யும்
 அடியரை உகத்தி போலும்
 அரங்க மா நகருளானே 39
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 910 | திருமறுமார்வ நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து
 மருவிய மனத்தர் ஆகில்
 மா நிலத்து உயிர்கள் எல்லாம்
 வெருவு உறக் கொன்று சுட்டிட்டு
 ஈட்டிய வினையரேலும்
 அருவினைப் பயன துய்யார்
 அரங்க மா நகருளானே             (40)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 911 | வானுளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில்
 தேனுலாம் துளப மாலைச்
 சென்னியாய் என்பர் ஆகில்
 ஊனம் ஆயினகள் செய்யும்
 ஊனகாரகர்களேலும்
 போனகம் செய்த சேடம்
 தருவரேல் புனிதம் அன்றே             (41)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 912 | பழுது இலா ஒழுகல்-ஆற்றுப் பல சதுப்பேதிமார்கள்
 இழிகுலத்தவர்களேலும்
 எம் அடியார்கள் ஆகில்
 தொழுமின் நீர் கொடுமின் கொண்மின்
 என்று நின்னோடும் ஒக்க
 வழிபட அருளினாய் போல்
 மதில்-திருவரங்கத்தானே             (42)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 913 | அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
 தமர்களிற் தலைவராய
 சாதி-அந்தணர்களேலும்
 நுமர்களைப் பழிப்பர் ஆகில்
 நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
 அவர்கள்தாம் புலையர் போலும்
 அரங்க மா நகருளானே             (43)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 914 | பெண் உலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
 எண் இலா ஊழி ஊழி
 தவம் செய்தார் வெள்கி நிற்ப
 விண் உளார் வியப்ப வந்து
 ஆனைக்கு அன்று அருளை ஈந்த
 கண்ணறா உன்னை என்னோ?
 களைகணாக் கருதுமாறே             (44)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 915 | வள எழும் தவள மாட மதுரை மா நகரந் தன்னுள்
 கவள மால் யானை கொன்ற
 கண்ணனை அரங்க-மாலைத்
 துளவத் தொண்டு ஆய தொல் சீர்த்
 தொண்டரடிப் பொடி சொல்
 இளைய புன் கவிதையேலும்
 எம்பிராற்கு இனியவாறே             (45)
 | 
 |  | 
		
			|  |  |  |