| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| பெரிய திருமந்திரத்தின் மகிமை | 
					
			
			
      | | 947 | வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந் துயர் இடும்பையில் பிறந்து
 கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
 அவர் தரும் கலவியே கருதி
 ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
 உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
 நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
 - நாராயணா என்னும் நாமம்             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 948 | ஆவியே அமுதே என நினைந்து உருகி அவர் அவர் பணை முலை துணையாப்
 பாவியேன் உணராது எத்தனை பகலும்
 பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்
 தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்
 சூழ் புனல் குடந்தையே தொழுது என்
 நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்
 - நாராயணா என்னும் நாமம்             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 949 | சேமமே வேண்டி தீவினை பெருக்கி தெரிவைமார் உருவமே மருவி
 ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்
 ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்
 காமனார் தாதை நம்முடை அடிகள்
 தம் அடைந்தார் மனத்து இருப்பார்
 நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்
 - நாராயணா என்னும் நாமம் (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 950 | வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேல்கணார் கலவியே கருதி
 நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்
 என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
 பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட
 பாழியான் ஆழியான் அருளே
 நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன்
 - நாராயணா என்னும் நாமம்             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 951 | கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன் கண்டவா திரிதந்தேனேலும்
 தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன்
 சிக்கெனத் திருவருள் பெற்றேன்
 உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்
 உடம்பு எலாம் கண்ண நீர் சோர
 நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன்
 - நாராயணா என்னும் நாமம்             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 952 | எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
 அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
 அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
 வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை
 மா மணிக் கோயிலே வணங்கி
 நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன்
 - நாராயணா என்னும் நாமம்             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 953 | இல்-பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னது ஓர் தன்மை என்று உணரீர்
 கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்
 கண்டவா தொண்டரைப் பாடும்
 சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்
 சூழ் புனல் குடந்தையே தொழுமின்
 நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின்
 - நாராயணா என்னும் நாமம்             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 954 | கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை
 பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
 பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்
 செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்
 செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி
 நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன்
 - நாராயணா என்னும் நாமம்             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 955 | குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
 நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
 அருளொடு பெரு நிலம் அளிக்கும்
 வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
 தாயினும் ஆயின செய்யும்
 நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
 - நாராயணா என்னும் நாமம்             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 956 | மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி
 செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை
 இவை கொண்டு சிக்கென தொண்டீர்
 துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின்
 துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்
 நஞ்சு-தான் கண்டீர் நம்முடை வினைக்கு
 - நாராயணா என்னும் நாமம்             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |