நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருப்பிரிதி
957வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட
      வரி சிலை வளைவித்து அன்று
ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற
      இருந்த நல் இமயத்துள்
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை
      அகடு உற முகடு ஏறி
பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்
      பிரிதி சென்று அடை நெஞ்சே (1)
   
958கலங்க மாக் கடல் அரிகுலம் பணிசெய
      அரு வரை அணை கட்டி
இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள்-தாம்
      இருந்த நல் இமயத்து
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன
      வேழங்கள் துயர்கூர
பிலம் கொள் வாள் எயிற்று அரி-அவை திரிதரு
      பிரிதி சென்று அடை நெஞ்சே (2)
   
959துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று
      இளங்கொடிதிறத்து ஆயர்
இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன்
      இருந்த நல் இமயத்து
கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின்
      மணி அறைமிசை வேழம்
பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும்
      பிரிதி சென்று அடை நெஞ்சே            (3)
   
960மறம் கொள் ஆள்-அரி உரு என வெருவர
      ஒருவனது அகல் மார்வம்
திறந்து வானவர் மணி முடி பணிதர
      இருந்த நல் இமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக்
      கிடந்து அருகு எரி வீசும்
பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு
      பிரிதி சென்று அடை நெஞ்சே (4)
   
961கரை செய் மாக் கடல் கிடந்தவன் கனை கழல்
      அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை அலர்மகள்-அவளொடும்
      அமர்ந்த நல் இமயத்து
வரைசெய் மாக் களிறு இள வெதிர் வளர் முளை
      அளை மிகு தேன் தோய்த்துப்
பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும்
      பிரிதி சென்று அடை நெஞ்சே    (5)
   
962பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு-அணைப்
      பள்ளிகொள் பரமா என்று
இணங்கி வானவர் மணி முடி பணிதர
      இருந்த நல் இமயத்து
மணம் கொள் மாதவி நெடுங் கொடி விசும்பு உற
      நிமிர்ந்து அவை முகில் பற்றிப்
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும்
      பிரிதி சென்று அடை நெஞ்சே (6)
   
963கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய
      கறி வளர் கொடி துன்னிப்
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய
      பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூஞ் சுனைத் தடம் படிந்து இன மலர்
      எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடிதொழும்
      பிரிதி சென்று அடை நெஞ்சே             (7)
   
964இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை
      இரும் பசி-அது கூர
அரவம் ஆவிக்கும் அகன்-பொழில் தழுவிய
      அருவரை இமயத்து
பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று
      எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப்
      பிரிதி சென்று அடை நெஞ்சே             (8)
   
965ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு
      உறு துயர் அடையாமல்
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை
      இருந்த நல் இமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற
      தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு
      பிரிதி சென்று அடை நெஞ்சே (9)
   
966கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை
      முழங்கிட களிறு என்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு
      பிரிதி எம் பெருமானை
வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர்
      கலியனது ஒலி மாலை
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு
      அரு வினை அடையாவே             (10)