| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருப்பிரிதி | 
					
			
			
      | | 957 | வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து அன்று
 ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற
 இருந்த நல் இமயத்துள்
 ஆலி மா முகில் அதிர்தர அரு வரை
 அகடு உற முகடு ஏறி
 பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்
 பிரிதி சென்று அடை நெஞ்சே (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 958 | கலங்க மாக் கடல் அரிகுலம் பணிசெய அரு வரை அணை கட்டி
 இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள்-தாம்
 இருந்த நல் இமயத்து
 விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன
 வேழங்கள் துயர்கூர
 பிலம் கொள் வாள் எயிற்று அரி-அவை திரிதரு
 பிரிதி சென்று அடை நெஞ்சே (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 959 | துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று இளங்கொடிதிறத்து ஆயர்
 இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன்
 இருந்த நல் இமயத்து
 கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின்
 மணி அறைமிசை வேழம்
 பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும்
 பிரிதி சென்று அடை நெஞ்சே            (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 960 | மறம் கொள் ஆள்-அரி உரு என வெருவர ஒருவனது அகல் மார்வம்
 திறந்து வானவர் மணி முடி பணிதர
 இருந்த நல் இமயத்துள்
 இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக்
 கிடந்து அருகு எரி வீசும்
 பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு
 பிரிதி சென்று அடை நெஞ்சே (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 961 | கரை செய் மாக் கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
 அரை செய் மேகலை அலர்மகள்-அவளொடும்
 அமர்ந்த நல் இமயத்து
 வரைசெய் மாக் களிறு இள வெதிர் வளர் முளை
 அளை மிகு தேன் தோய்த்துப்
 பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும்
 பிரிதி சென்று அடை நெஞ்சே    (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 962 | பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு-அணைப் பள்ளிகொள் பரமா என்று
 இணங்கி வானவர் மணி முடி பணிதர
 இருந்த நல் இமயத்து
 மணம் கொள் மாதவி நெடுங் கொடி விசும்பு உற
 நிமிர்ந்து அவை முகில் பற்றிப்
 பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும்
 பிரிதி சென்று அடை நெஞ்சே (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 963 | கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய கறி வளர் கொடி துன்னிப்
 போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய
 பூம் பொழில் இமயத்துள்
 ஏர் கொள் பூஞ் சுனைத் தடம் படிந்து இன மலர்
 எட்டும் இட்டு இமையோர்கள்
 பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடிதொழும்
 பிரிதி சென்று அடை நெஞ்சே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 964 | இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும் பசி-அது கூர
 அரவம் ஆவிக்கும் அகன்-பொழில் தழுவிய
 அருவரை இமயத்து
 பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று
 எண்ணி நின்று இமையோர்கள்
 பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப்
 பிரிதி சென்று அடை நெஞ்சே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 965 | ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல்
 ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை
 இருந்த நல் இமயத்து
 தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற
 தழல் புரை எழில் நோக்கி
 பேதை வண்டுகள் எரி என வெருவரு
 பிரிதி சென்று அடை நெஞ்சே (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 966 | கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று
 பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு
 பிரிதி எம் பெருமானை
 வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர்
 கலியனது ஒலி மாலை
 அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு
 அரு வினை அடையாவே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |