நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருவட்டபுயகரம் தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி தோழி-தாயர்க்குக் கூறுதல்
1117திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை
      மலர்மிசைமேல் அயனும் வியப்ப
முரி திரை மா கடல் போல் முழங்கி
      மூவுலகும் முறையால் வணங்க
எரி அன கேசர வாள் எயிற்றோடு
      இரணியன் ஆகம் இரண்டு கூறா
அரி உரு ஆம் இவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே            (1)
   
1118வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார்
      வேதம் உரைத்து இமையோர் வணங்கும்
செந்தமிழ் பாடுவார்-தாம் வணங்கும்
      தேவர் இவர்கொல்? தெரிக்கமாட்டேன்
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து
      மாவலி வேள்வியில் மண் அளந்த
அந்தணர் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே             (2)
   
1119செம் பொன் இலங்கு வலங்கை வாளி
      திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழியோடு
      கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ
      வெண் மருப்பு ஒன்று பறித்து இருண்ட
அம்புதம் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே             (3)
   
1120மஞ்சு உயர் மா மணிக் குன்றம் ஏந்தி
      மா மழை காத்து ஒரு மாய ஆனை
அஞ்ச அதன் மருப்பு ஒன்று வாங்கும்
      ஆயர்கொல்? மாயம் அறியமாட்டேன்
வெம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி
      வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து
அம் சுடர் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே             (4)
   
1121கலைகளும் வேதமும் நீதி நூலும்
      கற்பமும் சொல் பொருள்-தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்
      நீர்மையினால் அருள்செய்து நீண்ட
மலைகளும் மா மணியும் மலர்மேல்
      மங்கையும் சங்கமும் தங்குகின்ற
அலை கடல் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே            (5)
   
1122எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில்
      ஏதும் அறிகிலம் ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறையும் எல்லாம்
      தம்மன ஆகப் புகுந்து தாமும்
பொங்கு கருங் கடல் பூவை காயா
      போது அவிழ் நீலம் புனைந்த மேகம்
அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே             (6)
   
1123முழுசி வண்டு ஆடிய தண் துழாயின்
      மொய்ம் மலர்க் கண்ணியும் மேனி அம் சாந்து
இழுசிய கோலம் இருந்தவாறும்
      எங்ஙனம் சொல்லுகேன்? ஓவி நல்லார்
எழுதிய தாமரை அன்ன கண்ணும்
      ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும்
அழகியதாம் இவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே             (7)
   
1124மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க
      வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால்
      சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில்
காவி ஒப்பார் கடலேயும் ஒப்பார்
      கண்ணும் வடிவும் நெடியர் ஆய் என்
ஆவி ஒப்பார் இவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தே என்றாரே             (8)
   
1125தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா
      நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி
      வாய் திறந்து ஒன்று பணித்தது உண்டு
நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம்
      நான் இவர்-தம்மை அறியமாட்டேன்
அஞ்சுவன் மற்று இவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே             (9)
   
1126மன்னவன் தொண்டையர்-கோன் வணங்கும்
      நீள் முடி மாலை வயிரமேகன்
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி
      அட்டபுயகரத்து ஆதி-தன்னை
கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன்
      காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை
      ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே            (10)