நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருவாலி:3
1207கள்வன்கொல்? யான் அறியேன்-கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்-தன் மட மானினைப் போத என்று
வெள்ளி வளைக் கைப் பற்ற பெற்ற தாயரை விட்டு அகன்று
அள்ளல் அம் பூங் கழனி அணி ஆலி புகுவர்கொலோ?             (1)
   
1208பண்டு இவன் ஆயன் நங்காய் படிறன் புகுந்து என் மகள்-தன்
தொண்டை அம் செங் கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன்பின்
கெண்டை ஒண் கண் மிளிர கிளிபோல் மிழற்றி நடந்து
வண்டு அமர் கானல் மல்கும் வயல் ஆலி புகுவர்கொலோ?             (2)
   
1209அஞ்சுவன் வெம் சொல் நங்காய் அரக்கர் குலப் பாவை-தன்னை
வெம் சின மூக்கு அரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே
பஞ்சிய மெல் அடி எம் பணைத் தோளி பரக்கழிந்து
வஞ்சி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்கொலோ?             (3)
   
1210ஏது அவன் தொல் பிறப்பு? இளையவன் வளை ஊதி மன்னர்
தூதுவன் ஆயவன் ஊர் சொல்வீர்கள் சொலீர் அறியேன்
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில்
போது வண்டு ஆடு செம்மல் புனல் ஆலி புகுவர்கொலோ?             (4)
   
1211தாய் எனை என்று இரங்காள் தடந் தோளி தனக்கு அமைந்த
மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள்
வேய் அன தோள் விசிறி பெடை அன்னம் என நடந்து
போயின பூங் கொடியாள் புனல் ஆலி புகுவர்கொலோ?             (5)
   
1212என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
தன் துணை ஆய என்-தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள்
வன் துணை வானவர்க்கு ஆய் வரம் செற்று அரங்கத்து உறையும்
இன் துணைவனொடும் போய் எழில் ஆலி புகுவர்கொலோ?             (6)
   
1213அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்
பின்னை-தன் காதலன்-தன் பெருந் தோள் நலம் பேணினளால்
மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள் நடந்து
புன்னையும் அன்னமும் சூழ் புனல் ஆலி புகுவர்கொலோ?             (7)
   
1214முற்றிலும் பைங் கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற   
சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற செழுங் கோதை-தன்னைப்
பெற்றிலேன் முற்று இழையை பிறப்பிலி பின்னே நடந்து
மற்று எல்லாம் கைதொழப் போய் வயல் ஆலி புகுவர்கொலோ?             (8)
   
1215காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை ஒப்பாள்
பாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து   
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய்
வாவி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்கொலோ?             (9)
   
1216தாய் மனம் நின்று இரங்க தனியே நெடுமால் துணையா
போயின பூங் கொடியாள் புனல் ஆலி புகுவர் என்று
காய் சின வேல் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை பத்தும்
மேவிய நெஞ்சு உடையார் தஞ்சம் ஆவது விண் உலகே (10)