இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
திருநாங்கூர் வகுந்தவிண்ணகரம் |
1227 | சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு தடங் கடலைக் கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான் நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (1)1 | |
|
|
|
|
1228 | திண்ணியது ஓர் அரி உருவாய் திசை அனைத்தும் நடுங்க தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன் நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- எண் இல் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர் மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே (2) | |
|
|
|
|
1229 | அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும் முண்டம்-அது நிறைத்து அவன்கண் சாபம்-அது நீக்கும் முதல்வன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- எண் திசையும் பெருஞ் செந்நெல் இளந் தெங்கு கதலி இலைக்கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (3) | |
|
|
|
|
1230 | கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக் கொடியைக் காதொடு மூக்கு உடன் அரிய கதறி அவள் ஓடி தலையில் அங் கை வைத்து மலை இலங்கை புகச் செய்த தடந் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- சிலை இலங்கு மணி மாடத்து உச்சிமிசைச் சூலம் செழுங் கொண்டல் அகடு இரிய சொரிந்த செழு முத்தம் மலை இலங்கு மாளிகைமேல் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (4) | |
|
|
|
|
1231 | மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர தன் நிகர் இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த தடந் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும் மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (5) | |
|
|
|
|
1232 | பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும் தேவன்-அவன்மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- உண்மை மிகு மறையொடு நல் கலைகள் நிறை பொறைகள் உதவு கொடை என்று இவற்றின் ஒழிவு இல்லாப் பெரிய வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (6) | |
|
|
|
|
1233 | விளங்கனியை இளங் கன்று கொண்டு உதிர எறிந்து வேல் நெடுங் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் உளம்குளிர அமுது செய்து இவ் உலகு உண்ட காளை உகந்து இனிது நாள்தோறும் மருவி உறை கோயில்- இளம்படி நல் கமுகு குலைத் தெங்கு கொடி செந்நெல் ஈன் கரும்பு கண்வளரக் கால் தடவும் புனலால் வளம் கொண்ட பெருஞ் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே <7> | |
|
|
|
|
1234 | ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த அடல் ஆழித் தடக் கையன் அலர்-மகட்கும் அரற்கும் கூறாகக் கொடுத்தருளும் திரு உடம்பன் இமையோர் குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- மாறாத மலர்க் கமலம் செங்கழுநீர் ததும்பி மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை அடைப்ப மாறாத பெருஞ் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (8) | |
|
|
|
|
1235 | வங்கம் மலி தடங் கடலுள் வானவர்களோடு மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் ஈசன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- செங் கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்ப சேல் உகளும் செழும் பணை சூழ் வீதிதொறும் மிடைந்து மங்குல் மதி அகடு உரிஞ்சும் மணி மாட நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (9) | |
|
|
|
|
1236 | சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரைக் கண் நெடிய பிரான்-தான் அமரும் கோயில் வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகர்மேல் வண்டு அறையும் பொழில் சூழ் மங்கையர்-தம் தலைவன் மருவலர்-தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன சங்கம் மலி தமிழ்-மாலை பத்து-இவை வல்லார்கள் தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவாரே (10) | |
|
|
|
|