நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருநாங்கூர் வண்புருடோத்தமம்
1257கம்ப மா கடல் அடைத்து இலங்கைக்கு மன்
      கதிர் முடி-அவை பத்தும்
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு
      அளித்தவன் உறை கோயில்-
செம் பலா நிரை செண்பகம் மாதவி
      சூதகம் வாழைகள் சூழ்
வம்பு உலாம் கமுகு ஓங்கிய நாங்கூர
      ்-வண்புருடோத்தமமே             (1)
   
1258பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி அக்
      காளியன் பண அரங்கில்
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம்செய்த
      உம்பர்-கோன் உறை கோயில்-
நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம் ஐ
      வேள்வியோடு ஆறு அங்கம்
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர்
      -வண்புருடோத்தமமே             (2)
   
1259அண்டர் ஆனவர் வானவர்-கோனுக்கு என்று
      அமைத்த சோறு-அது எல்லாம்
உண்டு கோ-நிரை மேய்த்து அவை காத்தவன்
      உகந்து இனிது உறை கோயில்-
கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில்
      குல மயில் நடம் ஆட
வண்டு -தான் இசை பாடிடும் நாங்கூர்
      -வண்புருடோத்தமமே             (3)
   
1260பருங் கை யானையின் கொம்பினைப் பறித்து அதன்
      பாகனைச் சாடிப் புக்கு
ஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை
      உதைத்தவன் உறை கோயில்-
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு
      கழனியில் மலி வாவி
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர்
      -வண்புருடோத்தமமே             (4)
   
1261சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து ஈசன் தன்
      படையொடும் கிளையோடும்
ஓட வாணனை ஆயிரம் தோள்களும்
      துணித்தவன் உறை கோயில்-
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப்
      பகலவன் ஒளி மறைக்கும்
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்-
      வண்புருடோத்தமமே             (5)
   
1262அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன்
      அலர் கொடு தொழுது ஏத்த
கங்கை போதரக் கால் நிமிர்த்தருளிய
      கண்ணன் வந்து உறை கோயில்-
கொங்கை கோங்கு-அவை காட்ட வாய் குமுதங்கள்
      காட்ட மா பதுமங்கள்
மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர்-
      வண்புருடோத்தமமே             (6)
   
1263உளைய ஒண் திறல் பொன்பெயரோன்-தனது
      உரம் பிளந்து உதிரத்தை
அளையும் வெம் சினத்து அரி பரி கீறிய
      அப்பன் வந்து உறை கோயில்-
இளைய மங்கையர் இணை-அடிச் சிலம்பினோடு
      எழில் கொள் பந்து அடிப்போர் கை
வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர்-
      வண்புருடோத்தமமே                 (7)
   
1264வாளை ஆர் தடங் கண் உமை-பங்கன் வன்
      சாபம் மற்று அது நீங்க
மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த எம்
      முகில் வண்ணன் உறை கோயில்-
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வண்
      பழம் விழ வெருவிப் போய்
வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர்-
      வண்புருடோத்தமமே                (8)
   
1265இந்து வார் சடை ஈசனைப் பயந்த நான்
      முகனைத் தன் எழில் ஆரும்
உந்தி மா மலர்மீமிசைப் படைத்தவன்
      உகந்து இனிது உறை கோயில்-
குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து தன்
      குருளையைத் தழுவிப் போய்
மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர்-
      வண்புருடோத்தமமே             (9)
   
1266மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்
      வண்புருடோத்தமத்துள்
அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்
      ஆலி மன் அருள் மாரி
பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல் இப்
      பத்தும் வல்லார் உலகில்
எண் இலாத பேர் இன்பம் உற்று இமையவ
      ரோடும் கூடுவரே             (10)