| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருநாங்கூர்ச் செம்பொன்செய்கோயில் | 
					
			
			
      | | 1267 | பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம் பிரானை
 வார் அணி முலையாள் மலர்-மகளோடு
 மண்-மகளும் உடன் நிற்ப
 சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள்
 செம்பொன்செய்கோயிலினுள்ளே
 கார் அணி மேகம் நின்றது ஒப்பானை-
 கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1268 | பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன்-தன்னை பேதியா இன்ப வெள்ளத்தை
 இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை
 ஏழ் இசையின் சுவை-தன்னை
 சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள்
 செம்பொன்செய்கோயிலினுள்ளே
 மறைப் பெரும் பொருளை வானவர்-கோனை-
 கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1269 | திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும்
 படர் பொருள்களும் ஆய் நின்றவன்-தன்னை
 பங்கயத்து அயன்-அவன் அனைய
 திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள்
 செம்பொன்செய்கோயிலினுள்ளே
 கடல் நிற வண்ணன்-தன்னை-நான் அடியேன்
 கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே            (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1270 | வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி மண் அளவிட்டவன்-தன்னை
 அசைவு அறும் அமரர் அடி-இணை வணங்க
 அலை கடல் துயின்ற அம்மானை
 திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள்
 செம்பொன்செய்கோயிலினுள்ளே
 உயர் மணி மகுடம் சூடி நின்றானை-
 கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1271 | தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர்-தமக்குத்
 தாய் மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும்
 தயரதன் மதலையை சயமே
 தே மலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள்
 செம்பொன்செய்கோயிலினுள்ளே
 காமனைப் பயந்தான்-தன்னை-நான் அடியேன்
 கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1272 | மல்லை மா முந்நீர் அதர்பட மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன்-தன்னை
 கல்லின்மீது இயன்ற கடி மதிள் இலங்கை
 கலங்க ஓர் வாளி தொட்டானை-
 செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்
 செம்பொன்செய்கோயிலினுள்ளே
 அல்லி மா மலராள்-தன்னொடும் அடியேன்
 கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1273 | வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும் வெகுண்டு இறுத்து அடர்த்தவன்-தன்னை
 கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானை
 கரு முகில் திரு நிறத்தவனை
 செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்
 செம்பொன்செய்கோயிலினுள்ளே
 அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானை-
 கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே   (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1274 | அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை
 மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல்
 மேவிய வேத நல் விளக்கை
 தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்
 செம்பொன்செய்கோயிலினுள்ளே
 மன்று-அது பொலிய மகிழ்ந்து நின்றானை-
 வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே            (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1275 | களங்கனி வண்ணா கண்ணனே என்-தன் கார் முகிலே என நினைந்திட்டு
 உளம் கனிந்திருக்கும் அடியவர்-தங்கள்
 உள்ளத்துள் ஊறிய தேனை
 தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்
 செம்பொன்செய்கோயிலினுள்ளே
 வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை-
 வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1276 | தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே
 வானவர்-கோனைக் கண்டமை சொல்லும்
 மங்கையார் வாள் கலிகன்றி
 ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும்
 ஒழிவு இன்றிக் கற்றுவல்லார்கள்
 மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு
 வானவர் ஆகுவர் மகிழ்ந்தே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |