இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம் |
1277 | மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்று அவர்-தம் காதலிமார் குழையும் தந்தை கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்- நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின் சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (1) | |
|
|
|
|
1278 | பொற்றொடித் தோள் மட மகள்- தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி பெற்று எடுத்த தாய்போல மடுப்ப ஆரும் பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்- நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங் கணார்-தம் சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (2) | |
|
|
|
|
1279 | படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும் அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்- மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர்ப் பொன்னி திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (3) | |
|
|
|
|
1280 | வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்- ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச் சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (4) | |
|
|
|
|
1281 | கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை கதிர் முத்த வெண் நகையாள் கருங் கண் ஆய்ச்சி முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர்- மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி ஆடவரை மட மொழியார் முகத்து இரண்டு சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (5) | |
|
|
|
|
1282 | தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்திருப்பான் அரக்கர்-தங்கள் கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்- மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார் மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (6) | |
|
|
|
|
1283 | பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறள் உரு ஆய் பொருந்தா வாணன் மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்- கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்-தன்னால் செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (7) | |
|
|
|
|
1284 | சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் குலுங்க நில-மடந்தை-தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்- இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும் ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும் சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (8) | |
|
|
|
|
1285 | ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம் மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம் முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்- ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கும் நாவர் சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (9) | |
|
|
|
|
1286 | சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலை கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர்-கோன் குறையல் ஆளி பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர்-தாமே (10) | |
|
|
|
|