| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருநாங்கூர்த் திருமணிக்கூடம் | 
					
			
			
      | | 1287 | தூம்பு உடைப் பனைக் கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னும்
 காம்பு உடைக் குன்றம் ஏந்திக்
 கடு மழை காத்த எந்தை-
 பூம் புனல் பொன்னி முற்றும்
 புகுந்து பொன் வரன்ற எங்கும்
 தேம் பொழில் கமழும் நாங்கூர்த்
 திருமணிக்கூடத்தானே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1288 | கவ்வை வாள் எயிற்று வன் பேய்க் கதிர் முலை சுவைத்து இலங்கை
 வவ்விய இடும்பை தீரக்
 கடுங் கணை துரந்த எந்தை-
 கொவ்வை வாய் மகளிர் கொங்கைக்
 குங்குமம் கழுவிப் போந்த
 தெய்வ நீர் கமழும் நாங்கூர்த்
 திருமணிக்கூடத்தானே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1289 | மாத் தொழில் மடங்கச் செற்று மருது இற நடந்து வன் தாள்
 சேத் தொழில் சிதைத்துப் பின்னை
 செவ்வித் தோள் புணர்ந்த எந்தை-
 நாத் தொழில் மறை வல்லார்கள்
 நயந்து அறம் பயந்த வண் கைத்
 தீத் தொழில் பயிலும் நாங்கூர்த்
 திருமணிக்கூடத்தானே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1290 | தாங்கு-அரும் சினத்து வன் தாள் தடக் கை மா மருப்பு வாங்கி
 பூங் குருந்து ஒசித்து புள் வாய்
 பிளந்து எருது அடர்த்த எந்தை-
 மாங்கனி நுகர்ந்த மந்தி
 வந்து வண்டு இரிய வாழைத்
 தீங் கனி நுகரும் நாங்கூர்த்
 திருமணிக்கூடத்தானே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1291 | கரு மகள் இலங்கையாட்டி பிலங் கொள் வாய் திறந்து தன்மேல்
 வரும்-அவள் செவியும் மூக்கும்
 வாளினால் தடிந்த எந்தை-
 பெரு மகள் பேதை மங்கை
 தன்னொடும் பிரிவு இலாத
 திருமகள் மருவும் நாங்கூர்த்
 திருமணிக்கூடத்தானே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1292 | கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்
 அண்டமும் சுடரும் அல்லா
 ஆற்றலும் ஆய எந்தை-
 ஒண் திறல் தென்னன் ஓட
 வட அரசு ஓட்டம் கண்ட
 திண் திறலாளர் நாங்கூர்த்
 திருமணிக்கூடத்தானே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1293 | குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு
 நின்ற வெம் சுடரும் அல்லா
 நிலைகளும் ஆய எந்தை-
 மன்றமும் வயலும் காவும்
 மாடமும் மணங் கொண்டு எங்கும்
 தென்றல் வந்து உலவும் நாங்கூர்த்
 திருமணிக்கூடத்தானே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1294 | சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத் தரணி ஓம்பும்
 பொங்கிய முகிலும் அல்லாப்
 பொருள்களும் ஆய எந்தை-
 பங்கயம் உகுத்த தேறல்
 பருகிய வாளை பாய
 செங் கயல் உகளும் நாங்கூர்த்
 திருமணிக்கூடத்தானே   (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1295 | பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பம்-தானும்
 கோவமும் அருளும் அல்லாக்
 குணங்களும் ஆய எந்தை-
 மூவரில் எங்கள் மூர்த்தி
 இவன் என முனிவரோடு
 தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த்
 திருமணிக்கூடத்தானே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1296 | திங்கள் தோய் மாட நாங்கூர்த் திருமணிக்கூடத்தானை
 மங்கையர் தலைவன் வண் தார்க்
 கலியன் வாய் ஒலிகள் வல்லார்
 பொங்கு நீர் உலகம் ஆண்டு
 பொன்-உலகு ஆண்டு பின்னும்
 வெம் கதிர்ப் பரிதி வட்டத்து
 ஊடு போய் விளங்குவாரே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |