நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருநாங்கூர்த் திருமணிக்கூடம்
1287தூம்பு உடைப் பனைக் கை வேழம்
      துயர் கெடுத்தருளி மன்னும்
காம்பு உடைக் குன்றம் ஏந்திக்
      கடு மழை காத்த எந்தை-   
பூம் புனல் பொன்னி முற்றும்
      புகுந்து பொன் வரன்ற எங்கும்
தேம் பொழில் கமழும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே             (1)
   
1288கவ்வை வாள் எயிற்று வன் பேய்க்
      கதிர் முலை சுவைத்து இலங்கை
வவ்விய இடும்பை தீரக்
      கடுங் கணை துரந்த எந்தை-   
கொவ்வை வாய் மகளிர் கொங்கைக்
      குங்குமம் கழுவிப் போந்த
தெய்வ நீர் கமழும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே             (2)
   
1289மாத் தொழில் மடங்கச் செற்று
      மருது இற நடந்து வன் தாள்
சேத் தொழில் சிதைத்துப் பின்னை
      செவ்வித் தோள் புணர்ந்த எந்தை-
நாத் தொழில் மறை வல்லார்கள்
      நயந்து அறம் பயந்த வண் கைத்
தீத் தொழில் பயிலும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே             (3)
   
1290தாங்கு-அரும் சினத்து வன் தாள்
      தடக் கை மா மருப்பு வாங்கி
பூங் குருந்து ஒசித்து புள் வாய்
      பிளந்து எருது அடர்த்த எந்தை-
மாங்கனி நுகர்ந்த மந்தி
      வந்து வண்டு இரிய வாழைத்
தீங் கனி நுகரும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே             (4)
   
1291கரு மகள் இலங்கையாட்டி
      பிலங் கொள் வாய் திறந்து தன்மேல்
வரும்-அவள் செவியும் மூக்கும்
      வாளினால் தடிந்த எந்தை-   
பெரு மகள் பேதை மங்கை
      தன்னொடும் பிரிவு இலாத
திருமகள் மருவும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே             (5)
   
1292கெண்டையும் குறளும் புள்ளும்
      கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா
      ஆற்றலும் ஆய எந்தை-
ஒண் திறல் தென்னன் ஓட
      வட அரசு ஓட்டம் கண்ட
திண் திறலாளர் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே             (6)
   
1293குன்றமும் வானும் மண்ணும்
      குளிர் புனல் திங்களோடு
நின்ற வெம் சுடரும் அல்லா
      நிலைகளும் ஆய எந்தை-
மன்றமும் வயலும் காவும்
      மாடமும் மணங் கொண்டு எங்கும்
தென்றல் வந்து உலவும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே             (7)
   
1294சங்கையும் துணிவும் பொய்யும்
      மெய்யும் இத் தரணி ஓம்பும்
பொங்கிய முகிலும் அல்லாப்
      பொருள்களும் ஆய எந்தை-
பங்கயம் உகுத்த தேறல்
      பருகிய வாளை பாய   
செங் கயல் உகளும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே   (8)
   
1295பாவமும் அறமும் வீடும்
      இன்பமும் துன்பம்-தானும்
கோவமும் அருளும் அல்லாக்
      குணங்களும் ஆய எந்தை-
மூவரில் எங்கள் மூர்த்தி
      இவன் என முனிவரோடு
தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானே             (9)
   
1296திங்கள் தோய் மாட நாங்கூர்த்
      திருமணிக்கூடத்தானை   
மங்கையர் தலைவன் வண் தார்க்
      கலியன் வாய் ஒலிகள் வல்லார்
பொங்கு நீர் உலகம் ஆண்டு
      பொன்-உலகு ஆண்டு பின்னும்
வெம் கதிர்ப் பரிதி வட்டத்து
      ஊடு போய் விளங்குவாரே             (10)