| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருநாங்கூர்க் காவளம்பாடி | 
					
			
			
      | | 1297 | தா அளந்து உலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
 நா வளம் நவின்று அங்கு ஏத்த
 நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
 மா வளம் பெருகி மன்னும்
 மறையவர் வாழும் நாங்கைக்
 காவளம்பாடி மேய
 கண்ணனே களைகண் நீயே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1298 | மண் இடந்து ஏனம் ஆகி மாவலி வலி தொலைப்பான்
 விண்ணவர் வேண்டச் சென்று
 வேள்வியில் குறை இரந்தாய்
 துண் என மாற்றார்-தம்மைத்
 தொலைத்தவர் நாங்கை மேய
 கண்ணனே காவளம் தண்
 பாடியாய் களைகண் நீயே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1299 | உருத்து எழு வாலி மார்வில் ஒரு கணை உருவ ஓட்டி
 கருத்து உடைத் தம்பிக்கு இன்பக்
 கதிர் முடி அரசு அளித்தாய்
 பருத்து எழு பலவும் மாவும்
 பழம் விழுந்து ஒழுகும் நாங்கைக்
 கருத்தனே காவளம் தண்
 பாடியாய் களைகண் நீயே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1300 | முனைமுகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு
 அனையவற்கு இளையவற்கே
 அரசு அளித்து அருளினானே
 சுனைகளில் கயல்கள் பாயச்
 சுரும்பு தேன் நுகரும் நாங்கைக்
 கனை கழல் காவளம் தண்
 பாடியாய் களைகண் நீயே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1301 | பட அரவு உச்சி-தன்மேல் பாய்ந்து பல் நடங்கள்செய்து
 மடவரல் மங்கை-தன்னை
 மார்வகத்து இருத்தினானே
 தட வரை தங்கு மாடத்
 தகு புகழ் நாங்கை மேய
 கடவுளே காவளம் தண்
 பாடியாய் களைகண் நீயே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1302 | மல்லரை அட்டு மாள கஞ்சனை மலைந்து கொன்று
 பல் அரசு அவிந்து வீழப்
 பாரதப் போர் முடித்தாய்
 நல் அரண் காவின் நீழல்
 நறை கமழ் நாங்கை மேய
 கல் அரண் காவளம் தண்
 பாடியாய் களைகண் நீயே            (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1303 | மூத்தவற்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்தருளி
 மாத்து அமர் பாகன் வீழ
 மத கரி மருப்பு ஒசித்தாய்
 பூத்து அமர் சோலை ஓங்கி
 புனல் பரந்து ஒழுகும் நாங்கைக்
 காத்தனே காவளம் தண்
 பாடியாய் களைகண் நீயே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1304 | ஏவு இளங் கன்னிக்கு ஆகி இமையவர்-கோனைச் செற்று
 கா வளம் கடிது இறுத்துக்
 கற்பகம் கொண்டு போந்தாய்
 பூ வளம் பொழில்கள் சூழ்ந்த
 புரந்தரன் செய்த நாங்கைக்
 காவளம்பாடி மேய
 கண்ணனே களைகண் நீயே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1305 | சந்தம் ஆய் சமயம் ஆகி சமய ஐம் பூதம் ஆகி
 அந்தம் ஆய் ஆதி ஆகி
 அரு மறை-அவையும் ஆனாய்
 மந்தம் ஆர் பொழில்கள்தோறும்
 மட மயில் ஆலும் நாங்கைக்
 கந்தம் ஆர் காவளம் தண்
 பாடியாய் களைகண் நீயே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1306 | மா வளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக்
 காவளம்பாடி மேய
 கண்ணனைக் கலியன் சொன்ன
 பா வளம் பத்தும் வல்லார்
 பார்மிசை அரசர் ஆகிக்
 கோ இள மன்னர் தாழக்
 குடை நிழல் பொலிவர்-தாமே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |