நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருநறையூர்:9
1557புள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர்தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ             (1)
   
1558ஓடா ஆள் அரியின் உரு ஆய் மருவி என்-தன்
மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா
பாடேன் தொண்டர்-தம்மைக் கவிதைப் பனுவல்கொண்டு
நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ             (2)
   
1559எம்மானும் எம் அனையும் என்னைப் பெற்று ஒழிந்ததற்பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்கு ஆகி நின்ற
நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன்
மைம் மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே             (3)
   
1560சிறியாய் ஓர் பிள்ளையும் ஆய் உலகு உண்டு ஓர் ஆல் இலைமேல்
உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது-தான்
அறியாது இருந்தறியேன் அடியேன்-அணி வண்டு கிண்டும்
நறை வாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ             (4)
   
1561நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பு அரிதால்
ஆண்டாய் என்று ஆதரிக்கப்படுவாய்க்கு நான் அடிமை
பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
நான்-தான் உனக்கு ஒழிந்தேன்-நறையூர் நின்ற நம்பீயோ             (5)
   
1562எம் தாதை தாதை அப்பால் எழுவர் பழ அடிமை
வந்தார் என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்
அந்தோ!-என் ஆர் உயிரே அரசே அருள் எனக்கு
நந்தாமல் தந்த எந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ             (6)
   
1563மன் அஞ்ச ஆயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா
என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இனிப் போய்ப் பிறர் ஒருவர்
வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்-
நல் நெஞ்ச அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ             (7)
   
1564எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள்
கைப்போது கொண்டு இறைஞ்சி கழல்மேல் வணங்க நின்றாய்
இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்-
நல் போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ             (8)
   
1565ஊன் நேர் ஆக்கை-தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால்
யான் ஆய் என்-தனக்கு ஆய் அடியேன் மனம் புகுந்த
தேனே தீங் கரும்பின் தெளிவே என் சிந்தை-தன்னால்
நானே எய்தப் பெற்றேன்-நறையூர் நின்ற நம்பீயோ             (9)
   
1566நல் நீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக்
கல் நீர மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர்-கோன்
சொல் நீர சொல்-மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில்
நல் நீர்மையால் மகிழ்ந்து நெடுங் காலம் வாழ்வாரே             (10)