நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருக்கண்ணபுரம்: 4
1678விண்ணவர்-தங்கள் பெருமான் திருமார்வன்
மண்ணவர் எல்லாம் வணங்கும் மலி புகழ் சேர்
கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடிமேல்
வண்ண நறுந் துழாய் வந்து ஊதாய்-கோல் தும்பீ (1)
   
1679வேத முதல்வன் விளங்கு புரி நூலன்
பாதம் பரவிப் பலரும் பணிந்து ஏத்தி
காதன்மை செய்யும் கண்ணபுரத்து எம் பெருமான்
தாது நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (2)
   
1680விண்ட மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி?
அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும்
கண்டு வணங்கும் கண்ணபுரத்து எம் பெருமான்
வண்டு நறுந் துழாய் வந்து ஊதாய்-கோல் தும்பீ (3)
   
1681நீர் மலிகின்றது ஓர் மீன் ஆய் ஓர் ஆமையும் ஆய்
சீர் மலிகின்றது ஓர் சிங்க உரு ஆகி
கார் மலி வண்ணன் கண்ணபுரத்து எம் பெருமான்
தார் மலி தண் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (4)
   
1682ஏர் ஆர் மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி?
பார் ஆர் உலகம் பரவ பெருங் கடலுள்
கார் ஆமை ஆன கண்ணபுரத்து எம் பெருமான்
தார் ஆர் நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (5)
   
1683மார்வில் திருவன் வலன் ஏந்து சக்கரத்தன்
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி
காரில் திகழ் காயா வண்ணன் கதிர் முடிமேல்
தாரில் நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (6)
   
1684வாமனன் கற்கி மதுசூதன் மாதவன்
தார் மன்னு தாசரதி ஆய தடமார்வன்
காமன்-தன் தாதை கண்ணபுரத்து எம் பெருமான்
தாம நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ             (7)
   
1685நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில்
சால மலர் எல்லாம் ஊதாதே வாள் அரக்கர்
காலன் கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடிமேல்
கோல நறுந் துழாய் கொண்டு ஊதாய்-கோல் தும்பீ (8)
   
1686நந்தன் மதலை நில மங்கை நல் துணைவன்
அந்தம் முதல்வன் அமரர்கள்-தம் பெருமான்
கந்தம் கமழ் காயா வண்ணன் கதிர் முடிமேல்
கொந்து நறுந் துழாய் கொண்டு ஊதாய்-கோல் தும்பீ (9)