நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

உலகத்தைப் பிரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி உலகிற்கு உபதேசித்தல்
2001மைந் நின்ற கருங் கடல்வாய் உலகு இன்றி
      வானவரும் யாமும் எல்லாம்
நெய்ந் நின்ற சக்கரத்தன் திருவயிற்றில்
      நெடுங் காலம் கிடந்தது ஓரீர்
எந் நன்றி செய்தாரா ஏதிலோர்
      தெய்வத்தை ஏத்துகின்றீர்?
செய்ந்நன்றி குன்றேல்மின் தொண்டர்காள்
      அண்டனைய ஏத்தீர்களே             (1)
   
2002நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீது
      ஓடி நிமிர்ந்த காலம்
மல் ஆண்ட தடக் கையால் பகிரண்டம்
      அகப்படுத்த காலத்து அன்று
எல்லாரும் அறியாரோ? எம் பெருமான்
      உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே? அவன் அருளே
      உலகு ஆவது அறியீர்களே?             (2)
   
2003நெற்றிமேல் கண்ணானும் நிறை மொழி வாய்
      நான்முகனும் நீண்ட நால் வாய்
ஒற்றைக் கை வெண் பகட்டின் ஒருவனையும்
      உள்ளிட்ட அமரரோடும்
வெற்றிப் போர்க் கடல் அரையன் விழுங்காமல்
      தான் விழுங்கி உய்யக்கொண்ட
கொற்றப்போர் ஆழியான் குணம் பரவாச்
      சிறுதொண்டர் கொடிய ஆறே             (3)
   
2004பனிப் பரவைத் திரை ததும்ப பார் எல்லாம்
      நெடுங் கடலே ஆன காலம்
இனிக் களைகண் இவர்க்கு இல்லை என்று உலகம்
      ஏழினையும் ஊழில் வாங்கி
முனித் தலைவன் முழங்கு ஒளி சேர் திரு வயிற்றில்
      வைத்து உம்மை உய்யக்கொண்ட
கனிக் களவத் திரு உருவத்து ஒருவனையே
      கழல் தொழுமா கல்லீர்களே             (4)
   
2005பார் ஆரும் காணாமே பரவை மா
      நெடுங் கடலே ஆன காலம்
ஆரானும் அவனுடைய திரு வயிற்றில்
      நெடுங்காலம் கிடந்தது உள்ளத்து
ஓராத உணர்விலீர் உணருதிரேல்
      உலகு அளந்த உம்பர் கோமான்
பேராளன் பேரான பேர்கள்
      ஆயிரங்களுமே பேசீர்களே             (5)
   
2006பேய் இருக்கும் நெடு வெள்ளம் பெரு விசும்பின்-மீது
      ஓடிப் பெருகு காலம்
தாய் இருக்கும் வண்ணமே உம்மைத் தன்
      வயிற்று இருத்தி உய்யக்கொண்டான்
போய் இருக்க மற்று இங்கு ஓர் புதுத் தெய்வம்
      கொண்டாடும் தொண்டீர் பெற்ற
தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ-
      மாட்டாத தகவு அற்றீரே?
6
   
2007மண் நாடும் விண் நாடும் வானவரும்
      தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல்
      தான் விழுங்கி உய்யக்கொண்ட
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன்
      கழல் சூடி அவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத
      போது எல்லாம் இனிய ஆறே 7
   
2008மறம் கிளர்ந்த கருங் கடல் நீர் உரம் துரந்து
      பரந்து ஏறி அண்டத்து அப்பால்
புறம் கிளர்ந்த காலத்து பொன் உலகம்
      ஏழினையும் ஊழில் வாங்கி
அறம் கிளந்த திரு வயிற்றின் அகம்படியில்
      வைத்து உம்மை உய்யக்கொண்ட
நிறம் கிளர்ந்த கருஞ் சோதி நெடுந்தகையை
      நினையாதார் நீசர்-தாமே 8
   
2009அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர்த்
      திரை ததும்ப ஆஆ என்று
தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும்
      தான் அருளி உலகம் ஏழும்
உண்டு ஒத்த திருவயிற்றின் அகம்படியில்
      வைத்து உம்மை உய்யக்கொண்ட
கொண்டல் கை மணி வண்ணன் தண்
      குடந்தை நகர் பாடி ஆடீர்களே 9
   
2010தேவரையும் அசுரரையும் திசைகளையும்
      கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம் பெருமான்
      உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
கா வளரும் பொழில் மங்கைக் கலிகன்றி
      ஒலி மாலை கற்று வல்லார்
பூ வளரும் திருமகளால் அருள்பெற்றுப்
      பொன்-உலகில் பொலிவர்-தாமே 10