நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திரு நெடுந்தாண்டகம்
2051மின் உரு ஆய் முன் உருவில் வேதம் நான்கு ஆய்
      விளக்கு ஒளி ஆய் முளைத்து எழுந்த திங்கள்-தான் ஆய்
பின் உரு ஆய் முன் உருவில் பிணி மூப்பு இல்லாப்
      பிறப்பிலி ஆய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன் உரு ஆய் மணி உருவில் பூதம் ஐந்து ஆய்
      புனல் உரு ஆய் அனல் உருவில் திகழும் சோதி
தன் உரு ஆய் என் உருவில் நின்ற எந்தை
      தளிர் புரையும் திருவடி என் தலைமேலவே             (1)
   
2052பார்-உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகி
      பல் வேறு சமயமும் ஆய்ப் பரந்து நின்ற
ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற
      இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும்போது
ஓர் உருவம் பொன் உருவம் ஒன்று செந்தீ
      ஒன்று மா கடல் உருவம் ஒத்துநின்ற
மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி
      முகில் உருவம் எம் அடிகள் உருவம்-தானே             (2)
   
2053திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
      திரேதைக்கண் வளை உருவாய்த் திகழ்ந்தான் என்றும்
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்
      பெருமானைக் கரு நீல வண்ணன்-தன்னை
      ஒரு வடிவத்து ஓர் உரு என்று உணரல் ஆகாது
      ஊழிதோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கரு வடிவில் செங் கண்ண வண்ணன்-தன்னை-
      கட்டுரையே-யார் ஒருவர் காண்கிற்பாரே?             (3)
   
2054இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன்-தன்னை
      இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்து ஆய்
செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி
      திசை நான்கும் ஆய் திங்கள் ஞாயிறு ஆகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா
      அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும்
      வாழுதியே வாழலாம் மட நெஞ்சமே             (4)  
   
2055ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப
      ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்டம்மீது போகி
      இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிர ஓடி
      தாரகையின் புறந் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை
      மலர் புரையும் திருவடியே வணங்கினேனே            (5)  
   
2056அலம்புரிந்த நெடுந் தடக்கை அமரர்-வேந்தன்
      அம் சிறைப் புள் தனிப் பாகன் அவுணர்க்கு என்றும்
சலம்புரிந்து அங்கு அருள் இல்லாத் தன்மையாளன்
      தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை ஈர்த்த
      நெடு வேய்கள் படு முத்தம் உந்த உந்தி
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப்
      பூங் கோவலூர் தொழுதும்-போது நெஞ்சே             (6)
   
2057வற்பு உடைய வரை நெடுந் தோள் மன்னர் மாள
      வடி வாய மழு ஏந்தி உலகம் ஆண்டு
வெற்பு உடைய நெடுங் கடலுள் தனி வேல் உய்த்த
      வேள் முதலா வென்றான் ஊர்-விந்தம் மேய
கற்பு உடைய மடக் கன்னி காவல் பூண்ட
      கடி பொழில் சூழ் நெடு மறுகில் கமல வேலி
      பொற்பு உடைய மலை-அரையன் பணிய நின்ற
      பூங் கோவலூர்-தொழுதும்-போது நெஞ்சே             (7)
   
2058நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
      நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
      உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
      காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
      பெருமான் உன் திருவடியே பேணினேனே             (8)
   
2059வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர்
      மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய்
கொங்குத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன்
      குலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான்
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
      பனி வரையின் உச்சியாய் பவள வண்ணா
எங்கு உற்றாய்? எம் பெருமான் உன்னை நாடி
      ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே             (9)
   
2060பொன் ஆனாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
      புகழ் ஆனாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால்
      என் அறிவன்-ஏழையேன்? உலகம் ஏத்தும்
தென் ஆனாய் வட ஆனாய் குடபால் ஆனாய்
      குணபால மத யானாய் இமையோர்க்கு என்றும்
முன் ஆனாய் பின் ஆனார் வணங்கும் சோதி
      திருமூழிக்களத்து ஆனாய் முதல் ஆனாயே             (10)
   
2061பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள்
      பனி நெடுங் கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள்
எள் துணைப் போது என் குடங்கால் இருக்ககில்லாள்
      எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்
      மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல்
      மட மானை இது செய்தார்-தம்மை மெய்யே
கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்!-
      கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே?             (11)
   
2062நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்
      நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்
      வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும்
அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும்
      அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்
      என் சிறகின்கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்
      இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே             (12)
   
2063கல் எடுத்துக் கல்-மாரி காத்தாய் என்னும்
      காமரு பூங் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
      வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும்
      மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று
      துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே             (13)  
   
2064முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா
      மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய
      அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை
விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில்
      வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று
      மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே             (14)
   
2065கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
      களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும்
அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி
      அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி
      தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு
மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே
      மென் கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே             (15)
   
2066கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
      கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும்
      வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
      விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
      துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே             (16)
   
2067பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்ப
      பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று
செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்
      சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து ஆங்கே
தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித்
      தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை? என்ன
      நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே             (17)
   
2068கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்
      கைத்தலமும் அடி-இணையும் கமல வண்ணம்
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர்
      பனி மலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன்
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள்
      எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்
      இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே             (18)
   
2069முற்று ஆரா வன முலையாள் பாவை மாயன்
      மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள்
      அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்
பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்
      பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி
      பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்
      பொரு அற்றாள் என் மகள்-உம் பொன்னும் அஃதே?             (19)
   
2070தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாள
      தென் இலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி
போர் ஆளன் ஆயிரந் தோள் வாணன் மாள
      பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க
பார் ஆளன் பார் இடந்து பாரை உண்டு
      பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட
பேர் ஆளன் பேர் ஓதும் பெண்ணை மண்மேல்
      பெருந் தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே?             (20)
   
2071மை வண்ண நறுங் குஞ்சிக் குழல் பின் தாழ
      மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட
எய் வண்ண வெம் சிலையே துணையா இங்கே
      இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
      கண்-இணையும் அரவிந்தம் அடியும் அஃதே
அவ் வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ
      அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே             (21)
   
2072நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா
      நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி
      எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்
      கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு
      இது அன்றோ எழில் ஆலி என்றார் தாமே             (22)
   
2073உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து என்
      ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
தெள் ஊரும் இளந் தெங்கின் தேறல் மாந்திச்
      சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன
கள் ஊரும் பைந் துழாய் மாலையானைக்
      கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது
புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன்
      என்றாலும் இது நமக்கு ஓர் புலவி-தானே             (23)
   
2074இரு கையில் சங்கு-இவை நில்லா எல்லே பாவம்!-
      இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்
      பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி
      உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து என்
பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து
      புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே             (24)
   
2075மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும்
      கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்
தன் அலர்ந்த நறுந் துழாய் மலரின் கீழே
      தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும்
      என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு
      பொன் அலர்ந்த நறுஞ் செருந்திப் பொழிலினூடே
      புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே             (25)
   
2076தே மருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்
      தேன்-அதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த
      அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த அமரர்-கோமான்
      அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது
      நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே             (26)
   
2077செங் கால மட நாராய் இன்றே சென்று
      திருக்கண்ணபுரம் புக்கு என் செங் கண் மாலுக்கு
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்
      இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும்
பைங் கானம் ஈது எல்லாம் உனதே ஆகப்
      பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன் தந்தால்
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்
      இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே             (27)
   
2078தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாளச்
      சென்று உலகம் மூன்றினையும் திரிந்து ஓர் தேரால்
மன் இலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த
      வரை உருவின் மா களிற்றை தோழீ என்-தன்
பொன் இலங்கு முலைக் குவட்டில் பூட்டிக்கொண்டு
      போகாமை வல்லேனாய்ப் புலவி எய்தி
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த
      எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே             (28)
   
2079அன்று ஆயர் குலமகளுக்கு அரையன்-தன்னை
      அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான்-தன்னை
குன்றாத வலி அரக்கர் கோனை மாள
      கொடும் சிலைவாய்ச் சரம் துரந்து குலம் களைந்து
வென்றானை குன்று எடுத்த தோளினானை
      விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானை தண் குடந்தைக் கிடந்த மாலை
      நெடியானை-அடி நாயேன் நினைந்திட்டேனே             (29)
   
2080மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
      விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று
அன்னம் ஆய் முனிவரோடு அமரர் ஏத்த
      அருமறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
      மான வேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ்-மாலை வல்லார் தொல்லைப்
      பழவினையை முதல் அரிய வல்லார் தாமே             (30)