இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
திரு நெடுந்தாண்டகம் |
2051 | மின் உரு ஆய் முன் உருவில் வேதம் நான்கு ஆய் விளக்கு ஒளி ஆய் முளைத்து எழுந்த திங்கள்-தான் ஆய் பின் உரு ஆய் முன் உருவில் பிணி மூப்பு இல்லாப் பிறப்பிலி ஆய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும் பொன் உரு ஆய் மணி உருவில் பூதம் ஐந்து ஆய் புனல் உரு ஆய் அனல் உருவில் திகழும் சோதி தன் உரு ஆய் என் உருவில் நின்ற எந்தை தளிர் புரையும் திருவடி என் தலைமேலவே (1) | |
|
|
|
|
2052 | பார்-உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகி பல் வேறு சமயமும் ஆய்ப் பரந்து நின்ற ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும்போது ஓர் உருவம் பொன் உருவம் ஒன்று செந்தீ ஒன்று மா கடல் உருவம் ஒத்துநின்ற மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி முகில் உருவம் எம் அடிகள் உருவம்-தானே (2) | |
|
|
|
|
2053 | திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும் திரேதைக்கண் வளை உருவாய்த் திகழ்ந்தான் என்றும் பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் பெருமானைக் கரு நீல வண்ணன்-தன்னை ஒரு வடிவத்து ஓர் உரு என்று உணரல் ஆகாது ஊழிதோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால் கரு வடிவில் செங் கண்ண வண்ணன்-தன்னை- கட்டுரையே-யார் ஒருவர் காண்கிற்பாரே? (3) | |
|
|
|
|
2054 | இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன்-தன்னை இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்து ஆய் செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி திசை நான்கும் ஆய் திங்கள் ஞாயிறு ஆகி அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியே வாழலாம் மட நெஞ்சமே (4) | |
|
|
|
|
2055 | ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து அண்டம்மீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத் தண் மதியும் கதிரவனும் தவிர ஓடி தாரகையின் புறந் தடவி அப்பால் மிக்கு மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேனே (5) | |
|
|
|
|
2056 | அலம்புரிந்த நெடுந் தடக்கை அமரர்-வேந்தன் அம் சிறைப் புள் தனிப் பாகன் அவுணர்க்கு என்றும் சலம்புரிந்து அங்கு அருள் இல்லாத் தன்மையாளன் தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை ஈர்த்த நெடு வேய்கள் படு முத்தம் உந்த உந்தி புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப் பூங் கோவலூர் தொழுதும்-போது நெஞ்சே (6) | |
|
|
|
|
2057 | வற்பு உடைய வரை நெடுந் தோள் மன்னர் மாள வடி வாய மழு ஏந்தி உலகம் ஆண்டு வெற்பு உடைய நெடுங் கடலுள் தனி வேல் உய்த்த வேள் முதலா வென்றான் ஊர்-விந்தம் மேய கற்பு உடைய மடக் கன்னி காவல் பூண்ட கடி பொழில் சூழ் நெடு மறுகில் கமல வேலி பொற்பு உடைய மலை-அரையன் பணிய நின்ற பூங் கோவலூர்-தொழுதும்-போது நெஞ்சே (7) | |
|
|
|
|
2058 | நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய் உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும் காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணினேனே (8) | |
|
|
|
|
2059 | வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய் கொங்குத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன் குலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான் பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனி வரையின் உச்சியாய் பவள வண்ணா எங்கு உற்றாய்? எம் பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே (9) | |
|
|
|
|
2060 | பொன் ஆனாய் பொழில் ஏழும் காவல் பூண்ட புகழ் ஆனாய் இகழ்வாய தொண்டனேன் நான் என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால் என் அறிவன்-ஏழையேன்? உலகம் ஏத்தும் தென் ஆனாய் வட ஆனாய் குடபால் ஆனாய் குணபால மத யானாய் இமையோர்க்கு என்றும் முன் ஆனாய் பின் ஆனார் வணங்கும் சோதி திருமூழிக்களத்து ஆனாய் முதல் ஆனாயே (10) | |
|
|
|
|
2061 | பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள் பனி நெடுங் கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள் எள் துணைப் போது என் குடங்கால் இருக்ககில்லாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும் மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் மட மானை இது செய்தார்-தம்மை மெய்யே கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்!- கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே? (11) | |
|
|
|
|
2062 | நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும் நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள் நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும் வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும் அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும் அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும் என் சிறகின்கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன் இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே (12) | |
|
|
|
|
2063 | கல் எடுத்துக் கல்-மாரி காத்தாய் என்னும் காமரு பூங் கச்சி ஊரகத்தாய் என்னும் வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும் வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும் மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும் மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும் சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே (13) | |
|
|
|
|
2064 | முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே (14) | |
|
|
|
|
2065 | கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும் அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும் சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே மென் கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே (15) | |
|
|
|
|
2066 | கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும் கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும் மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும் வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும் வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும் விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய் என்றும் துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும் துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே (16) | |
|
|
|
|
2067 | பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்ப பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும் சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து ஆங்கே தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித் தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை? என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே (17) | |
|
|
|
|
2068 | கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடி-இணையும் கமல வண்ணம் பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன் ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும் நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே (18) | |
|
|
|
|
2069 | முற்று ஆரா வன முலையாள் பாவை மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும் அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள் அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும் பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள் பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் பொரு அற்றாள் என் மகள்-உம் பொன்னும் அஃதே? (19) | |
|
|
|
|
2070 | தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாள தென் இலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி போர் ஆளன் ஆயிரந் தோள் வாணன் மாள பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க பார் ஆளன் பார் இடந்து பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட பேர் ஆளன் பேர் ஓதும் பெண்ணை மண்மேல் பெருந் தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே? (20) | |
|
|
|
|
2071 | மை வண்ண நறுங் குஞ்சிக் குழல் பின் தாழ மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட எய் வண்ண வெம் சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்-இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ் வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே (21) | |
|
|
|
|
2072 | நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும் செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய இப்பால் கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும் எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு இது அன்றோ எழில் ஆலி என்றார் தாமே (22) | |
|
|
|
|
2073 | உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே தெள் ஊரும் இளந் தெங்கின் தேறல் மாந்திச் சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன கள் ஊரும் பைந் துழாய் மாலையானைக் கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன் என்றாலும் இது நமக்கு ஓர் புலவி-தானே (23) | |
|
|
|
|
2074 | இரு கையில் சங்கு-இவை நில்லா எல்லே பாவம்!- இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து என் பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே (24) | |
|
|
|
|
2075 | மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும் தன் அலர்ந்த நறுந் துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி என் நலனும் என் நிறையும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு பொன் அலர்ந்த நறுஞ் செருந்திப் பொழிலினூடே புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே (25) | |
|
|
|
|
2076 | தே மருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத் தேன்-அதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும் பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை ஆ மருவி நிரை மேய்த்த அமரர்-கோமான் அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே (26) | |
|
|
|
|
2077 | செங் கால மட நாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு என் செங் கண் மாலுக்கு என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும் பைங் கானம் ஈது எல்லாம் உனதே ஆகப் பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன் தந்தால் இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே (27) | |
|
|
|
|
2078 | தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாளச் சென்று உலகம் மூன்றினையும் திரிந்து ஓர் தேரால் மன் இலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த வரை உருவின் மா களிற்றை தோழீ என்-தன் பொன் இலங்கு முலைக் குவட்டில் பூட்டிக்கொண்டு போகாமை வல்லேனாய்ப் புலவி எய்தி என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே (28) | |
|
|
|
|
2079 | அன்று ஆயர் குலமகளுக்கு அரையன்-தன்னை அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான்-தன்னை குன்றாத வலி அரக்கர் கோனை மாள கொடும் சிலைவாய்ச் சரம் துரந்து குலம் களைந்து வென்றானை குன்று எடுத்த தோளினானை விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை தண் குடந்தைக் கிடந்த மாலை நெடியானை-அடி நாயேன் நினைந்திட்டேனே (29) | |
|
|
|
|
2080 | மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று அன்னம் ஆய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் மான வேல் பரகாலன் கலியன் சொன்ன பன்னிய நூல் தமிழ்-மாலை வல்லார் தொல்லைப் பழவினையை முதல் அரிய வல்லார் தாமே (30) | |
|
|
|
|