| மூன்றாம் ஆயிரம் இயற்பா
 பொய்கை ஆழ்வார்
 
 | 
		| முதல் திருவந்தாதி | 
					
			
			
      | | 2081 | வையம் தகளியா வார் கடலே நெய் ஆக வெய்ய கதிரோன் விளக்கு ஆக செய்ய
 சுடர்-ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல்-மாலை-
 இடர்-ஆழி நீங்குகவே என்று             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2082 | என்று கடல் கடைந்தது? எவ் உலகம் நீர் ஏற்றது?- ஒன்றும் அதனை உணரேன் நான் அன்று அது-
 அடைத்து உடைத்து கண்படுத்த ஆழி இது-நீ
 படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார்             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2083 | பார் அளவும் ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே சூர் உருவின்
 பேய் அளவு கண்ட பெருமான் அறிகிலேன்-
 நீ அளவு கண்ட நெறி             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2084 | நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து பொறி வாசல் போர்க் கதவம் சாத்தி அறிவானாம்-
 ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த
 ஆலம் அமர் கண்டத்து அரன்             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2085 | அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர்
 கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
 உருவம் எரி கார் மேனி ஒன்று             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2086 | ஒன்றும் மறந்தறியேன் ஓத நீர் வண்ணனை நான் இன்று மறப்பனோ ஏழைகாள்? அன்று
 கரு-அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கண்டேன்-
 திருவரங்கம் மேயான் திசை             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2087 | திசையும் திசை உறு தெய்வமும் தெய்வத்து இசையும் கருமங்கள் எல்லாம்-அசைவு இல் சீர்க்
 கண்ணன் நெடு மால் கடல் கடைந்த கார் ஓத
 வண்ணன் படைத்த மயக்கு             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2088 | மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து இயங்கும் எறி கதிரோன்-தன்னை முயங்கு அமருள்
 தேர் ஆழியால் மறைத்தது என் நீ திருமாலே!-
 போர் ஆழிக் கையால் பொருது?             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2089 | பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன ்ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே-விரி தோட்ட
 சேவடியை நீட்டி திசை நடுங்க விண் துளங்க
 மா வடிவின் நீ அளந்த மண்             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2090 | மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும் விண்ணும் விழுங்கியது மெய் என்பர் எண்ணில்
 அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இவ்
 உலகு அளவும் உண்டோ உன் வாய்?             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2091 | வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை உலகம் தாயவனை அல்லது தாம் தொழா பேய் முலை நஞ்சு
 ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்-
 காணா கண் கேளா செவி             (11)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2092 | செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத
 ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே-
 ஏனமாய் நின்றாற்கு இயல்வு             (12)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2093 | இயல்வு ஆக ஈன் துழாயான் அடிக்கே செல்ல முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வு ஆக
 நீதியால் ஓதி நியமங்களால் பரவ
 ஆதியாய் நின்றார் அவர்             (13)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2094 | அவர் அவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி இவர் இவர் எம் பெருமான் என்று சுவர்மிசைச்
 சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகு அளந்த
 மூர்த்தி உருவே முதல்             (14)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2095 | முதல் ஆவார் மூவரே அம் மூவருள்ளும் முதல் ஆவான் மூரி நீர் வண்ணன் முதல் ஆய
 நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
 பல்லார் அருளும் பழுது             (15)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2096 | பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் அரவு-அணைமேல் கண்டு தொழுதேன்-
 கடல் ஓதம் கால் அலைப்பக் கண்வளரும் செங்கண்
 அடல் ஓத வண்ணர் அடி             (16)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2097 | அடியும் படி கடப்ப தோள் திசைமேல் செல்ல முடியும் விசும்பு அளந்தது என்பர் வடி உகிரால்
 ஈர்ந்தான் இரணியனது ஆகம் இரும் சிறைப் புள்
 ஊர்ந்தான் உலகு அளந்த நான்று             (17)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2098 | நான்ற முலைத்தலை நஞ்சு உண்டு உறி வெண்ணெய் தோன்ற உண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப்
 பொருது உடைவு கண்டானும் புள்வாய் கீண்டானும்-
 மருது இடை போய் மண் அளந்த மால்             (18)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2099 | மாலும் கருங் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு ஆலின் இலைத் துயின்ற ஆழியான் கோலக்
 கரு மேனிச் செங்கண் மால் கண்படையுள் என்றும்
 திருமேனி நீ தீண்டப்பெற்று?             (19)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2100 | பெற்றார் தளை கழலப் பேர்ந்து ஓர் குறள் உருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால் நல் தா-
 மரைமலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
 நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று             (20)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2101 | நின்று நிலம் அங்கை நீர் ஏற்று மூவடியால் சென்று திசை அளந்த செங்கண் மாற்கு என்றும்
 படை ஆழி புள் ஊர்தி பாம்பு-அணையான் பாதம்
 அடை ஆழி நெஞ்சே அறி             (21)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2102 | அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்- பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் வெறி கமழும்
 காம்பு ஏய் மென்தோளி கடை வெண்ணெய் உண்டாயைத்
 தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு             (22)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2103 | தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்தவாம் அங்கை தழும்பு இருந்த தாள் சகடம் சாடி தழும்பு இருந்த-
 பூங்கோதையாள் வெருவ பொன் பெயரோன் மார்பு இடந்த
 வீங்கு ஓத வண்ணர் விரல்             (23)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2104 | விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி உரலோடு உறப் பிணித்த நான்று குரல் ஓவாது
 ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே?
 ஓங்கு ஓத வண்ணா உரை             (24)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2105 | உரை மேற்கொண்டு என் உள்ளம் ஓவாது எப்போதும் வரைமேல் மரகதமே போலத் திரைமேல்
 கிடந்தானை கீண்டானை கேழலாய்ப் பூமி
 இடந்தானை ஏத்தி எழும்             (25)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2106 | எழுவார் விடைகொள்வார் ஈன் துழாயானை வழுவாவகை நினைந்து வைகல் தொழுவார்
 வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே - வானோர்
 மனச் சுடரைத் தூண்டும் மலை             (26)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2107 | மலையால் குடை கவித்து மா வாய் பிளந்து சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலை யானைப்
 போர்க் கோடு ஒசித்தனவும் பூங் குருந்தம் சாய்த்தனவும்-
 கார்க் கோடு பற்றியான் கை             (27)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2108 | கைய வலம்புரியும் நேமியும் கார் வண்ணத்து ஐய மலர்மகள் நின் ஆகத்தாள் செய்ய
 மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த
 இறையான் நின் ஆகத்து இறை             (28)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2109 | இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும் அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின்
 பைங்கண் மால் யானை படு துயரம் காத்து அளித்த
 செங்கண் மால் கண்டாய் தெளி             (29)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2110 | தெளிது ஆக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்து எளிது ஆக நன்கு உணர்வார் சிந்தை எளிது ஆகத்
 தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே
 போய் நாடிக்கொள்ளும்-புரிந்து             (30)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2111 | புரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி அரி உருவும் ஆள் உருவும் ஆகி எரி உருவ
 வண்ணத்தான் மார்பு இடந்த மால் அடியை அல்லால் மற்று
 எண்ணத்தான் ஆமோ இமை?             (31)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2112 | இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
 ஆகத்து அணைப்பார் அணைவரே-ஆயிர வாய்
 நாகத்து அணையான் நகர்             (32)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2113 | நகரம் அருள்புரிந்து நான்முகற்குப் பூமேல் பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
 புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும்
 அந்தியால் ஆம் பயன் அங்கு என்?             (33)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2114 | என் ஒருவர் மெய் என்பர் ஏழ் உலகு உண்டு ஆல் இலையில் முன் ஒருவன் ஆய முகில் வண்ணா நின் உருகிப்
 பேய்த் தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேர் அமர்க் கண்
 ஆய்த் தாய் முலை தந்த ஆறு?             (34)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2115 | ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால் கூறிய குற்றமாக் கொள்ளல் நீ தேறி
 நெடியோய் அடி அடைதற்கு அன்றே-ஈர்-ஐந்து
 முடியான் படைத்த முரண்?             (35)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2116 | முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே முன்னம் தரணி தனது ஆகத்தானே இரணியனைப்
 புண் நிரந்த வள் உகிர் ஆர் பொன் ஆழிக் கையால் நீ
 மண் இரந்து கொண்ட வகை?             (36)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2117 | வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும் புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசைதிசையின்
 வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
 ஊதிய வாய் மால் உகந்த ஊர்             (37)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2118 | ஊரும் வரி அரவம் ஒண் குறவர் மால் யானை பேர எறிந்த பெரு மணியைக் கார் உடைய
 மின் என்று புற்று அடையும் வேங்கடமே மேல சுரர்
 எம் என்னும் மாலது இடம்             (38)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2119 | இடந்தது பூமி எடுத்தது குன்றம் கடந்தது கஞ்சனை முன் அஞ்ச கிடந்ததுவும்
 நீர் ஓத மா கடலே நின்றதுவும் வேங்கடமே-
 பேர் ஓத வண்ணர் பெரிது             (39)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2120 | பெரு வில் பகழிக் குறவர் கைச் செந்தீ வெருவிப் புனம் துறந்த வேழம் இரு விசும்பில்
 மீன் வீழக் கண்டு அஞ்சும் வேங்கடமே மேல் அசுரர்-
 கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று             (40)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2121 | குன்று அனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும் இன்று முதலாக என் நெஞ்சே என்றும்
 புறன் உரையே ஆயினும் பொன் ஆழிக் கையான்
 திறன் உரையே சிந்தித்திரு             (41)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2122 | திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால் திருமகட்கே தீர்ந்தவாறு என்கொல்-திருமகள்மேல்
 பால் ஓதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
 மால் ஓத வண்ணர் மனம்?             (42)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2123 | மன மாசு தீரும் அரு வினையும் சாரா தனம் ஆய தானே கைகூடும் புனம் மேய
 பூந் துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி
 தம் தொழாநிற்பார் தமர்             (43)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2124 | தமர் உகந்தது எவ் உருவம் அவ் உருவம் தானே தமர் உகந்தது எப் பேர் மற்று அப் பேர் தமர் உகந்து
 எவ் வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
 அவ் வண்ணம்-ஆழியான் ஆம்             (44)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2125 | ஆமே அமரர்க்கு அறிய? அது நிற்க நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே பூ மேய
 மா தவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை
 பாதம்-அத்தால் எண்ணினான் பண்பு             (45)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2126 | பண் புரிந்த நான்மறையோன் சென்னிப் பலி ஏற்ற வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த
 ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர்-அமரர்-தம்
 போகத்தால் பூமி ஆள்வார்             (46)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2127 | வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும் சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
 மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேல் ஒருநாள
 ்கைந் நாகம் காத்தான் கழல்             (47)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2128 | கழல் ஒன்று எடுத்து ஒரு கை சுற்றி ஓர் கைமேல் சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்
 செரு ஆழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
 மருவு ஆழி நெஞ்சே மகிழ்             (48)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2129 | மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த
 சோதிபோல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்
 ஆதி காண்பார்க்கும் அரிது             (49)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2130 | அரிய புலன் ஐந்து அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம் புரிய பரிசினால் புல்கில் பெரியனாய்
 மாற்றாது வீற்றிருந்த மாவலிபால் வண் கை நீர்
 ஏற்றானைக் காண்பது எளிது             (50)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2131 | எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என் உள்ளம் தெளிய தெளிந்தொழியும் செவ்வே களியில்
 பொருந்தாதவனைப் பொரல் உற்று அரியாய்
 இருந்தான் திருநாமம் எண்             (51)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2132 | எண்மர் பதினொருவர் ஈர்-அறுவர் ஓர் இருவர் வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி
 ஒரு மாலையால் பரவி ஓவாது எப்போதும்
 திருமாலைக் கைதொழுவர் சென்று             (52)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2133 | சென்றால் குடை ஆம் இருந்தால் சிங்காசனம் ஆம் நின்றால் மரவடி ஆம் நீள் கடலுள் என்றும்
 புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும்
 அணை ஆம் திருமாற்கு அரவு             (53)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2134 | அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய் குரவை குடம் முலை மல் குன்றம் கரவு இன்றி
 விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு
 அட்டு எடுத்த செங்கண் அவன்             (54)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2135 | அவன் தமர் எவ் வினையர் ஆகிலும் எம் கோன் அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
 ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவு அணைமேல்
 பேர் ஆயற்கு ஆட்பட்டார் பேர்             (55)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2136 | பேரே வரப் பிதற்றல் அல்லால் என் பெம்மானை ஆரே அறிவார்? அது நிற்க நேரே
 கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன்
 அடிக்கமலம் தன்னை அயன்             (56)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2137 | அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி உய நின் திருவடியே சேர்வான் நயம் நின்ற
 நல் மாலை கொண்டு நமோ நாரணா என்னும்
 சொல் மாலை கற்றேன் தொழுது             (57)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2138 | தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி எழுதும் எழு வாழி நெஞ்சே பழுது இன்றி
 மந்திரங்கள் கற்பனவும் மால் அடியே கைதொழுவான்
 அந்தரம் ஒன்று இல்லை அடை             (58)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2139 | அடைந்த அரு வினையோடு அல்லல் நோய் பாவம் மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கு இடையை
 முன் இலங்கை வைத்தான் முரண் அழிய முன் ஒரு நாள்
 தன் வில் அங்கை வைத்தான் சரண்             (59)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2140 | சரணா மறை பயந்த தாமரையானோடு மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் அரண் ஆய
 பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
 ஓர் ஆழி சூழ்ந்த உலகு             (60)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2141 | உலகும் உலகு இறந்த ஊழியும் ஒண் கேழ் விலகு கருங் கடலும் வெற்பும் உலகினில்
 செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
 புந்தியில் ஆய புணர்ப்பு             (61)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2142 | புணர் மருதின் ஊடு போய் பூங் குருந்தம் சாய்த்து மணம் மருவ மால் விடை ஏழ் செற்று கணம் வெருவ
 ஏழ் உலகும் தாயினவும் எண் திசையும் போயினவும்
 சூழ் அரவப் பொங்கு அணையான் தோள்             (62)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2143 | தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும் கேள் அவனது இன் மொழியே கேட்டிருக்கும் நா நாளும்
 கோள் நாகணையான் குரை கழலே கூறுவதே
 நாணாமை நள்ளேன் நயம்             (63)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2144 | நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் வியவேன்
 திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்
 வரும் ஆறு என் என்மேல் வினை?             (64)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2145 | வினையால் அடர்ப்படார் வெம் நரகில் சேரார் தினையேனும் தீக்கதிக்கண் செல்லார் நினைதற்கு
 அரியானை சேயானை ஆயிரம் பேர்ச் செங்கண்
 கரியானைக் கைதொழுதக்கால்             (65)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2146 | காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக்கண்
 ஓர் ஆழியான் அடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்
 பேர் ஆழி கொண்டான் பெயர்             (66)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2147 | பெயரும் கருங் கடலே நோக்கும் ஆறு ஒண் பூ உயரும் கதிரவனே நோக்கும் உயிரும்
 தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
 ஒருவனையே நோக்கும் உணர்வு             (67)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2148 | உணர்வார் ஆர் உன்பெருமை ஊழிதோறு ஊழி? உணர்வார் ஆர் உன் உருவம் தன்னை? உணர்வார் ஆர்
 விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேதப்
 பண்ணகத்தாய் நீ கிடந்த பால்?             (68)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2149 | பாலன் தனது உருவாய் ஏழ் உலகு உண்டு ஆல் இலையின் மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் ஆல் அன்று
 வேலை நீர் உள்ளதோ? விண்ணதோ? மண்ணதோ?
 சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு             (69)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2150 | சொல்லும் தனையும் தொழுமின் விழும் உடம்பு செல்லும் தனையும் திருமாலை நல் இதழ்த்
 தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
 நாமத்தால் ஏத்துதிரேல் நன்று             (70)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2151 | நன்று பிணி மூப்புக் கையகற்றி நான்கு ஊழி நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் என்றும்
 விடல் ஆழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
 அடல் ஆழி கொண்டான்மாட்டு அன்பு             (71)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2152 | அன்பு ஆழியானை அணுகு என்னும் நா அவன் தன் பண்பு ஆழித் தோள் பரவி ஏத்து என்னும் முன்பு ஊழி
 காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்
 பூண் ஆரம் பூண்டான் புகழ்             (72)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2153 | புகழ்வாய் பழிப்பாய் நீ பூந் துழாயானை இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே! திகழ் நீர்க்
 கடலும் மலையும் இரு விசும்பும் காற்றும்
 உடலும் உயிரும் ஏற்றான்             (73)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2154 | ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்வு இடந்தான் நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் கூற்று ஒருபால்
 மங்கையான் பூமகளான் வார் சடையான் நீள் முடியான்
 கங்கையான் நீள் கழலான் காப்பு             (74)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2155 | காப்பு உன்னை உன்னக் கழியும் அரு வினைகள் ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்தொழியும் மூப்பு உன்னைச்
 சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின் அடியை
 வந்திப்பார் காண்பர் வழி             (75)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2156 | வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா மொழி நின்ற மூர்த்தியரே ஆவர் பழுது ஒன்றும்
 வாராதவண்ணமே விண் கொடுக்கும் மண் அளந்த
 சீரான் திருவேங்கடம்             (76)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2157 | வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத பூங் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும்
 நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
 என்றால் கெடுமாம் இடர்             (77)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2158 | இடர் ஆர் படுவார் எழு நெஞ்சே வேழம் தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த படம் உடைய
 பைந் நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்
 கொய்ந் நாகப் பூம் போது கொண்டு             (78)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2159 | கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்? மண் தா என இரந்து மாவலியை ஒண் தாரை
 நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
 ஆரம் கை தோய அடுத்து?             (79)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2160 | அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்று ஓடி படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்து அரவை
 வல்லாளன் கைக்கொடுத்த மா மேனி மாயவனுக்கு
 அல்லாதும் ஆவரோ ஆள்?             (80)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2161 | ஆள் அமர் வென்றி அடு களத்துள் அந்நான்று வாள் அமர் வேண்டி வரை நட்டு நீள் அரவைச்
 சுற்றிக் கடைந்தான் பெயர் அன்றே தொல் நரகைப்
 பற்றிக் கடத்தும் படை             (81)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2162 | படை ஆரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூந் தொடையலோடு ஏந்திய தூபம் இடை இடையில்
 மீன் மாய மாசூணும் வேங்கடமே மேல் ஒரு நாள்
 மான் மாய எய்தான் வரை             (82)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2163 | வரை குடை தோள் காம்பு ஆக ஆ நிரை காத்து ஆயர் நிரை விடை ஏழ் செற்ற ஆறு என்னே? உரவு உடைய
 நீர் ஆழியுள் கிடந்து நேர் ஆம் நிசாசரர்மேல்
 பேர் ஆழி கொண்ட பிரான்             (83)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2164 | பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்? உராஅய் உலகு அளந்த நான்று வராகத்து
 எயிற்று அளவு போதா ஆறு என்கொலோ எந்தை
 அடிக்கு அளவு போந்த படி?             (84)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2165 | படி கண்டு அறிதியே? பாம்பு அணையினான் புள் கொடி கண்டு அறிதியே? கூறாய் வடிவில்
 பொறி ஐந்தும் உள் அடக்கி போதொடு நீர் ஏந்தி
 நெறி நின்ற நெஞ்சமே நீ             (85)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2166 | நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துப் பாயும் பனி மறுத்த பண்பாளா! வாசல்
 கடை கழியா உள் புகா காமர் பூங் கோவல்
 இடைகழியே பற்றி இனி             (86)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2167 | இனி யார் புகுவார் எழு நரக வாசல்? முனியாது மூரித் தாள் கோமின் கனி சாயக்
 கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
 நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு             (87)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2168 | நாடிலும் நின் அடியே நாடுவன் நாள்தோறும் பாடிலும் நின் புகழே பாடுவன் சூடிலும்
 பொன் ஆழி ஏந்தினான் பொன் அடியே சூடுவேற்கு
 என் ஆகில் என்னே எனக்கு?             (88)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2169 | எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம் பெருமான் தனக்கு ஆவான் தானே மற்று அல்லால்? புனக் காயாம்
 பூ மேனி காணப் பொதி அவிழும் பூவைப் பூ
 மா மேனி காட்டும் வரம்             (89)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2170 | வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
 ஈர் அரியாய் நேர் வலியோன் ஆய இரணியனை
 ஓர் அரியாய் நீ இடந்தது ஊன்?             (90)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2171 | ஊனக் குரம்பையின் உள் புக்கு இருள் நீக்கி ஞானச் சுடர் கொளீஇ நாள்தோறும் ஏனத்து
 உருவாய் உலகு இடந்த ஊழியான் பாதம்
 மருவாதார்க்கு உண்டாமோ வான்?             (91)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2172 | வான் ஆகி தீ ஆய் மறி கடல் ஆய் மாருதம் ஆய் தேன் ஆகி பால் ஆம் திருமாலே ஆன் ஆய்ச்சி
 வெண்ணெய் விழுங்க நிறையுமே முன் ஒரு நாள்
 மண்ணை உமிழ்ந்த வயிறு?             (92)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2173 | வயிறு அழல வாள் உருவி வந்தானை அஞ்ச எயிறு இலக வாய் மடுத்தது என் நீ பொறி உகிரால்
 பூ வடிவை ஈடு அழித்த பொன் ஆழிக் கையா நின்
 சேவடிமேல் ஈடு அழிய செற்று?             (93)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2174 | செற்று எழுந்து தீவிழித்து சென்ற இந்த ஏழுலகும் மற்று இவை ஆ என்று வாய் அங்காந்து முற்றும்
 மறையவற்குக் காட்டிய மாயவனை அல்லால்
 இறையேனும் ஏத்தாது என் நா             (94)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2175 | நா வாயில் உண்டே நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
 மாக் கதிக்கண் செல்லும் வகை உண்டே என் ஒருவர்
 தீக் கதிக்கண் செல்லும் திறம்?             (95)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2176 | திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய் அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் புறம் தான் இம்
 மண் தான் மறிகடல் தான் மாருதம் தான் வான் தானே
 கண்டாய் கடைக்கண் பிடி             (96)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2177 | பிடி சேர் களிறு அளித்த பேராளா உன் தன் அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே பொடி சேர்
 அனற்கு அங்கை ஏற்றான் அவிர் சடைமேல் பாய்ந்த
 புனல் கங்கை என்னும் பேர்ப் பொன்?             (97)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2178 | பொன் திகழும் மேனிப் புரி சடை அம் புண்ணியனும் நின்று உலகம் தாய நெடுமாலும் என்றும்
 இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன்
 ஒருவன் அங்கத்து என்றும் உளன்             (98)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2179 | உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
 வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
 உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்             (99)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2180 | ஓர் அடியும் சாடு உதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே! ஓர் அடியில்
 தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர்
 மாயவனையே மனத்து வை             (100)
 | 
 |  | 
		
			|  |  |  |