மூன்றாம் ஆயிரம் இயற்பா பொய்கை ஆழ்வார்
|
| முதல் திருவந்தாதி |
| 2081 | வையம் தகளியா வார் கடலே நெய் ஆக வெய்ய கதிரோன் விளக்கு ஆக செய்ய சுடர்-ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல்-மாலை- இடர்-ஆழி நீங்குகவே என்று (1) |
|
|
| |
|
|
| 2082 | என்று கடல் கடைந்தது? எவ் உலகம் நீர் ஏற்றது?- ஒன்றும் அதனை உணரேன் நான் அன்று அது- அடைத்து உடைத்து கண்படுத்த ஆழி இது-நீ படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் (2) |
|
|
| |
|
|
| 2083 | பார் அளவும் ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே சூர் உருவின் பேய் அளவு கண்ட பெருமான் அறிகிலேன்- நீ அளவு கண்ட நெறி (3) | |
|
| |
|
|
| 2084 | நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து பொறி வாசல் போர்க் கதவம் சாத்தி அறிவானாம்- ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த ஆலம் அமர் கண்டத்து அரன் (4) | |
|
| |
|
|
| 2085 | அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர் கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி உருவம் எரி கார் மேனி ஒன்று (5) | |
|
| |
|
|
| 2086 | ஒன்றும் மறந்தறியேன் ஓத நீர் வண்ணனை நான் இன்று மறப்பனோ ஏழைகாள்? அன்று கரு-அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கண்டேன்- திருவரங்கம் மேயான் திசை (6) | |
|
| |
|
|
| 2087 | திசையும் திசை உறு தெய்வமும் தெய்வத்து இசையும் கருமங்கள் எல்லாம்-அசைவு இல் சீர்க் கண்ணன் நெடு மால் கடல் கடைந்த கார் ஓத வண்ணன் படைத்த மயக்கு (7) | |
|
| |
|
|
| 2088 | மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து இயங்கும் எறி கதிரோன்-தன்னை முயங்கு அமருள் தேர் ஆழியால் மறைத்தது என் நீ திருமாலே!- போர் ஆழிக் கையால் பொருது? (8) | |
|
| |
|
|
| 2089 | பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன ்ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே-விரி தோட்ட சேவடியை நீட்டி திசை நடுங்க விண் துளங்க மா வடிவின் நீ அளந்த மண் (9) | |
|
| |
|
|
| 2090 | மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும் விண்ணும் விழுங்கியது மெய் என்பர் எண்ணில் அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இவ் உலகு அளவும் உண்டோ உன் வாய்? (10) | |
|
| |
|
|
| 2091 | வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை உலகம் தாயவனை அல்லது தாம் தொழா பேய் முலை நஞ்சு ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்- காணா கண் கேளா செவி (11) | |
|
| |
|
|
| 2092 | செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே- ஏனமாய் நின்றாற்கு இயல்வு (12) | |
|
| |
|
|
| 2093 | இயல்வு ஆக ஈன் துழாயான் அடிக்கே செல்ல முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வு ஆக நீதியால் ஓதி நியமங்களால் பரவ ஆதியாய் நின்றார் அவர் (13) |
|
|
| |
|
|
| 2094 | அவர் அவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி இவர் இவர் எம் பெருமான் என்று சுவர்மிசைச் சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகு அளந்த மூர்த்தி உருவே முதல் (14) | |
|
| |
|
|
| 2095 | முதல் ஆவார் மூவரே அம் மூவருள்ளும் முதல் ஆவான் மூரி நீர் வண்ணன் முதல் ஆய நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப் பல்லார் அருளும் பழுது (15) | |
|
| |
|
|
| 2096 | பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் அரவு-அணைமேல் கண்டு தொழுதேன்- கடல் ஓதம் கால் அலைப்பக் கண்வளரும் செங்கண் அடல் ஓத வண்ணர் அடி (16) | |
|
| |
|
|
| 2097 | அடியும் படி கடப்ப தோள் திசைமேல் செல்ல முடியும் விசும்பு அளந்தது என்பர் வடி உகிரால் ஈர்ந்தான் இரணியனது ஆகம் இரும் சிறைப் புள் ஊர்ந்தான் உலகு அளந்த நான்று (17) | |
|
| |
|
|
| 2098 | நான்ற முலைத்தலை நஞ்சு உண்டு உறி வெண்ணெய் தோன்ற உண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப் பொருது உடைவு கண்டானும் புள்வாய் கீண்டானும்- மருது இடை போய் மண் அளந்த மால் (18) | |
|
| |
|
|
| 2099 | மாலும் கருங் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு ஆலின் இலைத் துயின்ற ஆழியான் கோலக் கரு மேனிச் செங்கண் மால் கண்படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப்பெற்று? (19) | |
|
| |
|
|
| 2100 | பெற்றார் தளை கழலப் பேர்ந்து ஓர் குறள் உருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால் நல் தா- மரைமலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று (20) | |
|
| |
|
|
| 2101 | நின்று நிலம் அங்கை நீர் ஏற்று மூவடியால் சென்று திசை அளந்த செங்கண் மாற்கு என்றும் படை ஆழி புள் ஊர்தி பாம்பு-அணையான் பாதம் அடை ஆழி நெஞ்சே அறி (21) | |
|
| |
|
|
| 2102 | அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்- பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் வெறி கமழும் காம்பு ஏய் மென்தோளி கடை வெண்ணெய் உண்டாயைத் தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு (22) | |
|
| |
|
|
| 2103 | தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்தவாம் அங்கை தழும்பு இருந்த தாள் சகடம் சாடி தழும்பு இருந்த- பூங்கோதையாள் வெருவ பொன் பெயரோன் மார்பு இடந்த வீங்கு ஓத வண்ணர் விரல் (23) | |
|
| |
|
|
| 2104 | விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி உரலோடு உறப் பிணித்த நான்று குரல் ஓவாது ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே? ஓங்கு ஓத வண்ணா உரை (24) |
|
|
| |
|
|
| 2105 | உரை மேற்கொண்டு என் உள்ளம் ஓவாது எப்போதும் வரைமேல் மரகதமே போலத் திரைமேல் கிடந்தானை கீண்டானை கேழலாய்ப் பூமி இடந்தானை ஏத்தி எழும் (25) | |
|
| |
|
|
| 2106 | எழுவார் விடைகொள்வார் ஈன் துழாயானை வழுவாவகை நினைந்து வைகல் தொழுவார் வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே - வானோர் மனச் சுடரைத் தூண்டும் மலை (26) | |
|
| |
|
|
| 2107 | மலையால் குடை கவித்து மா வாய் பிளந்து சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலை யானைப் போர்க் கோடு ஒசித்தனவும் பூங் குருந்தம் சாய்த்தனவும்- கார்க் கோடு பற்றியான் கை (27) | |
|
| |
|
|
| 2108 | கைய வலம்புரியும் நேமியும் கார் வண்ணத்து ஐய மலர்மகள் நின் ஆகத்தாள் செய்ய மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த இறையான் நின் ஆகத்து இறை (28) | |
|
| |
|
|
| 2109 | இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும் அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின் பைங்கண் மால் யானை படு துயரம் காத்து அளித்த செங்கண் மால் கண்டாய் தெளி (29) | |
|
| |
|
|
| 2110 | தெளிது ஆக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்து எளிது ஆக நன்கு உணர்வார் சிந்தை எளிது ஆகத் தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே போய் நாடிக்கொள்ளும்-புரிந்து (30) | |
|
| |
|
|
| 2111 | புரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி அரி உருவும் ஆள் உருவும் ஆகி எரி உருவ வண்ணத்தான் மார்பு இடந்த மால் அடியை அல்லால் மற்று எண்ணத்தான் ஆமோ இமை? (31) | |
|
| |
|
|
| 2112 | இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல் ஆகத்து அணைப்பார் அணைவரே-ஆயிர வாய் நாகத்து அணையான் நகர் (32) | |
|
| |
|
|
| 2113 | நகரம் அருள்புரிந்து நான்முகற்குப் பூமேல் பகர மறை பயந்த பண்பன் பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும் அந்தியால் ஆம் பயன் அங்கு என்? (33) | |
|
| |
|
|
| 2114 | என் ஒருவர் மெய் என்பர் ஏழ் உலகு உண்டு ஆல் இலையில் முன் ஒருவன் ஆய முகில் வண்ணா நின் உருகிப் பேய்த் தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேர் அமர்க் கண் ஆய்த் தாய் முலை தந்த ஆறு? (34) | |
|
| |
|
|
| 2115 | ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால் கூறிய குற்றமாக் கொள்ளல் நீ தேறி நெடியோய் அடி அடைதற்கு அன்றே-ஈர்-ஐந்து முடியான் படைத்த முரண்? (35) | |
|
| |
|
|
| 2116 | முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே முன்னம் தரணி தனது ஆகத்தானே இரணியனைப் புண் நிரந்த வள் உகிர் ஆர் பொன் ஆழிக் கையால் நீ மண் இரந்து கொண்ட வகை? (36) | |
|
| |
|
|
| 2117 | வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும் புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசைதிசையின் வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர் (37) | |
|
| |
|
|
| 2118 | ஊரும் வரி அரவம் ஒண் குறவர் மால் யானை பேர எறிந்த பெரு மணியைக் கார் உடைய மின் என்று புற்று அடையும் வேங்கடமே மேல சுரர் எம் என்னும் மாலது இடம் (38) | |
|
| |
|
|
| 2119 | இடந்தது பூமி எடுத்தது குன்றம் கடந்தது கஞ்சனை முன் அஞ்ச கிடந்ததுவும் நீர் ஓத மா கடலே நின்றதுவும் வேங்கடமே- பேர் ஓத வண்ணர் பெரிது (39) | |
|
| |
|
|
| 2120 | பெரு வில் பகழிக் குறவர் கைச் செந்தீ வெருவிப் புனம் துறந்த வேழம் இரு விசும்பில் மீன் வீழக் கண்டு அஞ்சும் வேங்கடமே மேல் அசுரர்- கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று (40) | |
|
| |
|
|
| 2121 | குன்று அனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும் இன்று முதலாக என் நெஞ்சே என்றும் புறன் உரையே ஆயினும் பொன் ஆழிக் கையான் திறன் உரையே சிந்தித்திரு (41) | |
|
| |
|
|
| 2122 | திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால் திருமகட்கே தீர்ந்தவாறு என்கொல்-திருமகள்மேல் பால் ஓதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த மால் ஓத வண்ணர் மனம்? (42) | |
|
| |
|
|
| 2123 | மன மாசு தீரும் அரு வினையும் சாரா தனம் ஆய தானே கைகூடும் புனம் மேய பூந் துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி தம் தொழாநிற்பார் தமர் (43) | |
|
| |
|
|
| 2124 | தமர் உகந்தது எவ் உருவம் அவ் உருவம் தானே தமர் உகந்தது எப் பேர் மற்று அப் பேர் தமர் உகந்து எவ் வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே அவ் வண்ணம்-ஆழியான் ஆம் (44) | |
|
| |
|
|
| 2125 | ஆமே அமரர்க்கு அறிய? அது நிற்க நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே பூ மேய மா தவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை பாதம்-அத்தால் எண்ணினான் பண்பு (45) | |
|
| |
|
|
| 2126 | பண் புரிந்த நான்மறையோன் சென்னிப் பலி ஏற்ற வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர்-அமரர்-தம் போகத்தால் பூமி ஆள்வார் (46) | |
|
| |
|
|
| 2127 | வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும் சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேல் ஒருநாள ்கைந் நாகம் காத்தான் கழல் (47) | |
|
| |
|
|
| 2128 | கழல் ஒன்று எடுத்து ஒரு கை சுற்றி ஓர் கைமேல் சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும் செரு ஆழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல மருவு ஆழி நெஞ்சே மகிழ் (48) | |
|
| |
|
|
| 2129 | மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த சோதிபோல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம் ஆதி காண்பார்க்கும் அரிது (49) | |
|
| |
|
|
| 2130 | அரிய புலன் ஐந்து அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம் புரிய பரிசினால் புல்கில் பெரியனாய் மாற்றாது வீற்றிருந்த மாவலிபால் வண் கை நீர் ஏற்றானைக் காண்பது எளிது (50) | |
|
| |
|
|
| 2131 | எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என் உள்ளம் தெளிய தெளிந்தொழியும் செவ்வே களியில் பொருந்தாதவனைப் பொரல் உற்று அரியாய் இருந்தான் திருநாமம் எண் (51) | |
|
| |
|
|
| 2132 | எண்மர் பதினொருவர் ஈர்-அறுவர் ஓர் இருவர் வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி ஒரு மாலையால் பரவி ஓவாது எப்போதும் திருமாலைக் கைதொழுவர் சென்று (52) | |
|
| |
|
|
| 2133 | சென்றால் குடை ஆம் இருந்தால் சிங்காசனம் ஆம் நின்றால் மரவடி ஆம் நீள் கடலுள் என்றும் புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும் அணை ஆம் திருமாற்கு அரவு (53) | |
|
| |
|
|
| 2134 | அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய் குரவை குடம் முலை மல் குன்றம் கரவு இன்றி விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு அட்டு எடுத்த செங்கண் அவன் (54) | |
|
| |
|
|
| 2135 | அவன் தமர் எவ் வினையர் ஆகிலும் எம் கோன் அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால் ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவு அணைமேல் பேர் ஆயற்கு ஆட்பட்டார் பேர் (55) | |
|
| |
|
|
| 2136 | பேரே வரப் பிதற்றல் அல்லால் என் பெம்மானை ஆரே அறிவார்? அது நிற்க நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் (56) | |
|
| |
|
|
| 2137 | அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி உய நின் திருவடியே சேர்வான் நயம் நின்ற நல் மாலை கொண்டு நமோ நாரணா என்னும் சொல் மாலை கற்றேன் தொழுது (57) | |
|
| |
|
|
| 2138 | தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி எழுதும் எழு வாழி நெஞ்சே பழுது இன்றி மந்திரங்கள் கற்பனவும் மால் அடியே கைதொழுவான் அந்தரம் ஒன்று இல்லை அடை (58) | |
|
| |
|
|
| 2139 | அடைந்த அரு வினையோடு அல்லல் நோய் பாவம் மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கு இடையை முன் இலங்கை வைத்தான் முரண் அழிய முன் ஒரு நாள் தன் வில் அங்கை வைத்தான் சரண் (59) | |
|
| |
|
|
| 2140 | சரணா மறை பயந்த தாமரையானோடு மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் அரண் ஆய பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது ஓர் ஆழி சூழ்ந்த உலகு (60) | |
|
| |
|
|
| 2141 | உலகும் உலகு இறந்த ஊழியும் ஒண் கேழ் விலகு கருங் கடலும் வெற்பும் உலகினில் செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன் புந்தியில் ஆய புணர்ப்பு (61) | |
|
| |
|
|
| 2142 | புணர் மருதின் ஊடு போய் பூங் குருந்தம் சாய்த்து மணம் மருவ மால் விடை ஏழ் செற்று கணம் வெருவ ஏழ் உலகும் தாயினவும் எண் திசையும் போயினவும் சூழ் அரவப் பொங்கு அணையான் தோள் (62) | |
|
| |
|
|
| 2143 | தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும் கேள் அவனது இன் மொழியே கேட்டிருக்கும் நா நாளும் கோள் நாகணையான் குரை கழலே கூறுவதே நாணாமை நள்ளேன் நயம் (63) | |
|
| |
|
|
| 2144 | நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் வியவேன் திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் வரும் ஆறு என் என்மேல் வினை? (64) | |
|
| |
|
|
| 2145 | வினையால் அடர்ப்படார் வெம் நரகில் சேரார் தினையேனும் தீக்கதிக்கண் செல்லார் நினைதற்கு அரியானை சேயானை ஆயிரம் பேர்ச் செங்கண் கரியானைக் கைதொழுதக்கால் (65) | |
|
| |
|
|
| 2146 | காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக்கண் ஓர் ஆழியான் அடியே ஓதுவதும் ஓர்ப்பனவும் பேர் ஆழி கொண்டான் பெயர் (66) | |
|
| |
|
|
| 2147 | பெயரும் கருங் கடலே நோக்கும் ஆறு ஒண் பூ உயரும் கதிரவனே நோக்கும் உயிரும் தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு (67) | |
|
| |
|
|
| 2148 | உணர்வார் ஆர் உன்பெருமை ஊழிதோறு ஊழி? உணர்வார் ஆர் உன் உருவம் தன்னை? உணர்வார் ஆர் விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேதப் பண்ணகத்தாய் நீ கிடந்த பால்? (68) | |
|
| |
|
|
| 2149 | பாலன் தனது உருவாய் ஏழ் உலகு உண்டு ஆல் இலையின் மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் ஆல் அன்று வேலை நீர் உள்ளதோ? விண்ணதோ? மண்ணதோ? சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு (69) | |
|
| |
|
|
| 2150 | சொல்லும் தனையும் தொழுமின் விழும் உடம்பு செல்லும் தனையும் திருமாலை நல் இதழ்த் தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால் நாமத்தால் ஏத்துதிரேல் நன்று (70) | |
|
| |
|
|
| 2151 | நன்று பிணி மூப்புக் கையகற்றி நான்கு ஊழி நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் என்றும் விடல் ஆழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய் அடல் ஆழி கொண்டான்மாட்டு அன்பு (71) | |
|
| |
|
|
| 2152 | அன்பு ஆழியானை அணுகு என்னும் நா அவன் தன் பண்பு ஆழித் தோள் பரவி ஏத்து என்னும் முன்பு ஊழி காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும் பூண் ஆரம் பூண்டான் புகழ் (72) | |
|
| |
|
|
| 2153 | புகழ்வாய் பழிப்பாய் நீ பூந் துழாயானை இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே! திகழ் நீர்க் கடலும் மலையும் இரு விசும்பும் காற்றும் உடலும் உயிரும் ஏற்றான் (73) | |
|
| |
|
|
| 2154 | ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்வு இடந்தான் நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் கூற்று ஒருபால் மங்கையான் பூமகளான் வார் சடையான் நீள் முடியான் கங்கையான் நீள் கழலான் காப்பு (74) | |
|
| |
|
|
| 2155 | காப்பு உன்னை உன்னக் கழியும் அரு வினைகள் ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்தொழியும் மூப்பு உன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின் அடியை வந்திப்பார் காண்பர் வழி (75) | |
|
| |
|
|
| 2156 | வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா மொழி நின்ற மூர்த்தியரே ஆவர் பழுது ஒன்றும் வாராதவண்ணமே விண் கொடுக்கும் மண் அளந்த சீரான் திருவேங்கடம் (76) | |
|
| |
|
|
| 2157 | வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத பூங் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே என்றால் கெடுமாம் இடர் (77) | |
|
| |
|
|
| 2158 | இடர் ஆர் படுவார் எழு நெஞ்சே வேழம் தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த படம் உடைய பைந் நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும் கொய்ந் நாகப் பூம் போது கொண்டு (78) | |
|
| |
|
|
| 2159 | கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்? மண் தா என இரந்து மாவலியை ஒண் தாரை நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில் ஆரம் கை தோய அடுத்து? (79) | |
|
| |
|
|
| 2160 | அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்று ஓடி படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்து அரவை வல்லாளன் கைக்கொடுத்த மா மேனி மாயவனுக்கு அல்லாதும் ஆவரோ ஆள்? (80) | |
|
| |
|
|
| 2161 | ஆள் அமர் வென்றி அடு களத்துள் அந்நான்று வாள் அமர் வேண்டி வரை நட்டு நீள் அரவைச் சுற்றிக் கடைந்தான் பெயர் அன்றே தொல் நரகைப் பற்றிக் கடத்தும் படை (81) | |
|
| |
|
|
| 2162 | படை ஆரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூந் தொடையலோடு ஏந்திய தூபம் இடை இடையில் மீன் மாய மாசூணும் வேங்கடமே மேல் ஒரு நாள் மான் மாய எய்தான் வரை (82) | |
|
| |
|
|
| 2163 | வரை குடை தோள் காம்பு ஆக ஆ நிரை காத்து ஆயர் நிரை விடை ஏழ் செற்ற ஆறு என்னே? உரவு உடைய நீர் ஆழியுள் கிடந்து நேர் ஆம் நிசாசரர்மேல் பேர் ஆழி கொண்ட பிரான் (83) | |
|
| |
|
|
| 2164 | பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்? உராஅய் உலகு அளந்த நான்று வராகத்து எயிற்று அளவு போதா ஆறு என்கொலோ எந்தை அடிக்கு அளவு போந்த படி? (84) | |
|
| |
|
|
| 2165 | படி கண்டு அறிதியே? பாம்பு அணையினான் புள் கொடி கண்டு அறிதியே? கூறாய் வடிவில் பொறி ஐந்தும் உள் அடக்கி போதொடு நீர் ஏந்தி நெறி நின்ற நெஞ்சமே நீ (85) | |
|
| |
|
|
| 2166 | நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துப் பாயும் பனி மறுத்த பண்பாளா! வாசல் கடை கழியா உள் புகா காமர் பூங் கோவல் இடைகழியே பற்றி இனி (86) | |
|
| |
|
|
| 2167 | இனி யார் புகுவார் எழு நரக வாசல்? முனியாது மூரித் தாள் கோமின் கனி சாயக் கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு (87) | |
|
| |
|
|
| 2168 | நாடிலும் நின் அடியே நாடுவன் நாள்தோறும் பாடிலும் நின் புகழே பாடுவன் சூடிலும் பொன் ஆழி ஏந்தினான் பொன் அடியே சூடுவேற்கு என் ஆகில் என்னே எனக்கு? (88) | |
|
| |
|
|
| 2169 | எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம் பெருமான் தனக்கு ஆவான் தானே மற்று அல்லால்? புனக் காயாம் பூ மேனி காணப் பொதி அவிழும் பூவைப் பூ மா மேனி காட்டும் வரம் (89) | |
|
| |
|
|
| 2170 | வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால் ஈர் அரியாய் நேர் வலியோன் ஆய இரணியனை ஓர் அரியாய் நீ இடந்தது ஊன்? (90) | |
|
| |
|
|
| 2171 | ஊனக் குரம்பையின் உள் புக்கு இருள் நீக்கி ஞானச் சுடர் கொளீஇ நாள்தோறும் ஏனத்து உருவாய் உலகு இடந்த ஊழியான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான்? (91) | |
|
| |
|
|
| 2172 | வான் ஆகி தீ ஆய் மறி கடல் ஆய் மாருதம் ஆய் தேன் ஆகி பால் ஆம் திருமாலே ஆன் ஆய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே முன் ஒரு நாள் மண்ணை உமிழ்ந்த வயிறு? (92) | |
|
| |
|
|
| 2173 | வயிறு அழல வாள் உருவி வந்தானை அஞ்ச எயிறு இலக வாய் மடுத்தது என் நீ பொறி உகிரால் பூ வடிவை ஈடு அழித்த பொன் ஆழிக் கையா நின் சேவடிமேல் ஈடு அழிய செற்று? (93) | |
|
| |
|
|
| 2174 | செற்று எழுந்து தீவிழித்து சென்ற இந்த ஏழுலகும் மற்று இவை ஆ என்று வாய் அங்காந்து முற்றும் மறையவற்குக் காட்டிய மாயவனை அல்லால் இறையேனும் ஏத்தாது என் நா (94) | |
|
| |
|
|
| 2175 | நா வாயில் உண்டே நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத மாக் கதிக்கண் செல்லும் வகை உண்டே என் ஒருவர் தீக் கதிக்கண் செல்லும் திறம்? (95) | |
|
| |
|
|
| 2176 | திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய் அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் புறம் தான் இம் மண் தான் மறிகடல் தான் மாருதம் தான் வான் தானே கண்டாய் கடைக்கண் பிடி (96) | |
|
| |
|
|
| 2177 | பிடி சேர் களிறு அளித்த பேராளா உன் தன் அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே பொடி சேர் அனற்கு அங்கை ஏற்றான் அவிர் சடைமேல் பாய்ந்த புனல் கங்கை என்னும் பேர்ப் பொன்? (97) | |
|
| |
|
|
| 2178 | பொன் திகழும் மேனிப் புரி சடை அம் புண்ணியனும் நின்று உலகம் தாய நெடுமாலும் என்றும் இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன் ஒருவன் அங்கத்து என்றும் உளன் (98) | |
|
| |
|
|
| 2179 | உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் (99) | |
|
| |
|
|
| 2180 | ஓர் அடியும் சாடு உதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே! ஓர் அடியில் தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை (100) | |
|
| |
|
|