நாலாயிர திவ்ய பிரபந்தம்

மூன்றாம் ஆயிரம்
இயற்பா
பூதத்தாழ்வார்

இரண்டாம் திருவந்தாதி
2181அன்பே தகளியா ஆர்வமே நெய் ஆக
இன்பு உருகு சிந்தை இடு திரியா நன்பு உருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்             (1)
   
2182ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால் வானத்து
அணி அமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணி அமரர் கோமான் பரிசு             (2)
   
2183பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப்பெறுவர் போலாம் புரிவார்கள்
தொல் அமரர் கேள்வித் துலங்கு ஒளி சேர் தோற்றத்து
நல் அமரர் கோமான் நகர்             (3)
   
2184நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரம் சேர்த்து நிகர் இல்லாப்
பைங் கமலம் ஏந்திப் பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி             (4)
   
2185அடி மூன்றில் இவ் உலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் படிநின்ற
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை
யார் ஓத வல்லார் அறிந்து?             (5)
   
2186அறிந்து ஐந்தும் உள் அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே அறிந்து அவன் தன்
பேர் ஓதி ஏத்தும் பெருந்தவத்தோர் காண்பரே
கார் ஓத வண்ணன் கழல்             (6)
   
2187கழல் எடுத்து வாய் மடித்து கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச தழல் எடுத்த
போர் ஆழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியை
ஓர் ஆழி நெஞ்சே! உகந்து             (7)
   
2188உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்றாள் ஆவி உகந்து
முலை உண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பால் ஆனமையால் அன்று             (8)
   
2189அன்று அதுகண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந் நீர்மைக்கு அன்று
வரன்முறையால் நீ அளந்த மா கடல் சூழ் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து?             (9)
   
2190பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண் இரந்து
காத்தனை பல் உயிரும் காவலனே ஏத்திய
நா உடையேன் பூ உடையேன் நின் உள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை             (10)
   
2191அவர் இவர் என்று இல்லை அரவு அணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார்? எண்ணில் பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் அன்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து?             (12)
   
2192அவர் இவர் என்று இல்லை அரவு அணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார்? எண்ணில் பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் அன்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து?             (12)
   
2193தொடர் எடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படர் எடுத்த பைங் கமலம் கொண்டு அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்று பண்டு?             (13)
   
2194பண்டிப் பெரும் பதியை ஆக்கி பழி பாவம்
கொண்டு இங்கு வாழ்வாரைக் கூறாதே எண் திசையும்
பேர்த்த கரம் நான்கு உடையான் பேர் ஓதி பேதைகாள்
தீர்த்தகரர் ஆமின் திரிந்து             (14)
   
2195திரிந்தது வெம் சமத்துத் தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும்
கண் பள்ளிகொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு?             (15)
   
2196தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும்
மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வனத் திடரை
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று?             (16)
   
2197மற்று ஆர் இயல் ஆவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை ஒற்றைப்
பிறை இருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை இரந்து தான் முடித்தான் கொண்டு?             (17)
   
2198கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக்கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு             (18)
   
2199வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா குழக் கன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திருமாலே!
பார் விளங்கச் செய்தாய் பழி             (19)
   
2200பழி பாவம் கையகற்றி பல் காலும் நின்னை
வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ வழு இன்றி
நாரணன் தன் நாமங்கள் நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும்
காரணங்கள் தாம் உடையார் தாம்             (20)
   
2201தாம் உளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது             (21)
   
2202அரியது எளிது ஆகும் ஆற்றலால் மாற்றிப்
பெருக முயல்வாரைப் பெற்றால் கரியது ஓர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து?             (22)
   
2203தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் தாழ்ந்த
விளங் கனிக்குக் கன்று எறிந்து வேற்று உருவாய் ஞாலம்
அளந்து அடிக்கீழ்க் கொண்ட அவன்             (23)
   
2204அவன் கண்டாய் நல் நெஞ்சே ஆர் அருளும் கேடும்
அவன் கண்டாய் ஐம்புலனாய் நின்றான் அவன் கண்டாய்
காற்று தீ நீர் வான் கரு வரை மண் கார் ஓதச்
சீற்றத் தீ ஆவானும் சென்று             (24)
   
2205சென்றது இலங்கைமேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது இராவணனை கூறுங்கால் நின்றதுவும்
வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாய் ஓங்கு தொல் புகழான் வந்து             (25)
   
2206வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்து அடக்கி ஆர்வமாய் உந்திப்
படி அமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி அமரர் வாழும் பதி             (26)
   
2207பதி அமைந்து நாடி பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி கதி மிகுத்து அம்
கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம்             (27)
   
2208மனத்து உள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான் எனைப் பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன் ஒரு நாள்
மா வாய் பிளந்த மகன்             (28)
   
2209மகனாகக் கொண்டு எடுத்தாள் மாண்பு ஆய கொங்கை
அகன் ஆர உண்பன் என்று உண்டு மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென் இலங்கை
நீறு ஆக எய்து அழித்தாய் நீ             (29)
   
2210நீ அன்று உலகு அளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் நீ அன்று
கார் ஓதம் முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேர் ஓத மேனிப் பிரான்             (30)
   
2211பிரான் என்றும் நாளும் பெரும் புலரி என்றும்
குரா நல் செழும் போது கொண்டு வராகத்து
அணி உருவன் பாதம் பணியும் அவர் கண்டீர்
மணி உருவம் காண்பார் மகிழ்ந்து             (31)
   
2212மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி மகிழ்ந்தது
அழல் ஆழி சங்கம் அவை பாடி ஆடும்
தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து             (32)
   
2213துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்கம்
அணிந்தவன் பேர் உள்ளத்துப் பல்கால் பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விறல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை             (33)
   
2214வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே மிக வாய்ந்த
அன்பு ஆக்கி ஏத்தி அடிமைப்பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி             (34)
   
2215இனிது என்பர் காமம் அதனிலும் ஆற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் இனிது என்று
காமம் நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது             (35)
   
2216சிறியார் பெருமை சிறிதின்கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு என் நெஞ்சே இரு             (36)
   
2217இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசைமுகனைத் தந்தாய் பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு             (37)
   
2218எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கு என்றும் சார்வம் அறிந்து நமக்கு என்றும்
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து             (38)
   
2219ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் ஓத்து அதனை
வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஓத்தின் சுருக்கு             (39)
   
2220சுருக்காக வாங்கி சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்             (40)
   
2221பொருளால் அமர் உலகம் புக்கு இயலல் ஆகாது
அருளால் அறம் அருளும் அன்றே அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணிவண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே! நினை             (41)
   
2222நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார் மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதார் அத் தோள்             (42)
   
2223தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துரந்தான் தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு             (43)
   
2224சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன்பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு             (44)
   
2225உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தல் அதன் அருகும் சாரார் அளவு அரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று             (45)
   
2226பயின்றது அரங்கம் திருக்கோட்டி பல் நாள்
பயின்றதுவும் வேங்கடமே பல்நாள் பயின்றது
அணி திகழும் சோலை அணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால்             (46)
   
2227மாலை அரி உருவன் பாதமலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த ஆற்றால் உணர்ந்து             (47)
   
2228உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர் மகள் தோள் மாலே மணந்தாய் போய்
வேய் இரும் சாரல் வியல் இரு ஞாலம் சூழ்
மா இரும் சோலை மலை             (48)
   
2229மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் முலை சூழ்ந்த
நஞ்சு உரத்துப் பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாது என்நெஞ்சே அழை             (49)
   
2230அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி இழைப்பு அரிய
ஆயவனே யாதவனே என்றவனை யார் முகப்பும்
மாயவனே என்று மதித்து             (50)
   
2231மதிக் கண்டாய் நெஞ்சே மணிவண்ணன் பாதம்
மதிக் கண்டாய் மற்று அவன் பேர் தன்னை மதிக் கண்டாய்
பேர் ஆழிநின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீர் ஆழி வண்ணன் நிறம்             (51)
   
2232நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியன் ஆர் அது அறிவார் மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி?             (52)
   
2233நெறியார் குழல் கற்றை முன்நின்று பின் தாழ்ந்து
அறியாது இளங் கிரி என்று எண்ணி பிரியாது
பூங்கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு             (53)
   
2234வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ் இரண்டும்
நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல் நிற்பு என்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளங் கோயில் கைவிடேல் என்று             (54)
   
2235என்றும் மறந்தறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் வென்றி
அடல் ஆழி கொண்ட அறிவனே! இன்பக்
கடல் ஆழி நீ அருளிக் காண்             (55)
   
2236காணக் கழி காதல் கைமிக்குக் காட்டினால்
நாணப்படும் என்றால் நாணுமே? பேணி
கரு மாலைப் பொன் மேனி காட்டாமுன் காட்டும்
திருமாலை நங்கள் திரு             (56)
   
2237திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்பிடிமின் கண்டீர் உரிமையால்
ஏத்தினோம் பாதம் இருந் தடக்கை எந்தை பேர்
நால் திசையும் கேட்டீரே? நாம்             (57)
   
2238நாம் பெற்ற நன்மையும் நா மங்கை நல் நெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து வேம்பின்
பொருள் நீர்மை ஆயினும் பொன் ஆழி பாடு என்று
அருள் நீர்மை தந்த அருள்             (58)
   
2239அருள் புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் அது ஒண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து             (59)
   
2240ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று             (60)
   
2241நின்றது ஓர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனே! உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு             (61)
   
2242பேறு ஒன்றும் முன் அறியேன் பெற்று அறியேன் பேதைமையால்
மாறு என்று சொல்லி வணங்கினேன் ஏறின்
பெருத்தெருத்தம் கோடு ஒசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு             (62)
   
2243ஏறு ஏழும் வென்று அடர்த்த எந்தை எரி உருவத்து
ஏறு ஏறி பட்ட இடுசாபம் பாறு ஏறி
உண்ட தலை வாய் நிறைய கோட்டு அம் கை ஒண் குருதி
கண்ட பொருள் சொல்லின் கதை             (63)
   
2244கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதயம் இருந்தவையே ஏத்தில் கதையின்
திருமொழியாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி             (64)
   
2245பணிந்தேன் திருமேனி பைங் கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடிமேல் அன்பாய் துணிந்தேன்
புரிந்து ஏத்தி உன்னை புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது             (65)
   
2246இது கண்டாய் நல் நெஞ்சே இப் பிறவி ஆவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது இது கண்டாய்
நாரணன் பேர் ஓதி நரகத்து அருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்             (66)
   
2247கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்து பின்னும்
மறு நோய் செறுவான் வலி             (67)
   
2248வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலி மிக்க வாள் வரை மத்து ஆக வலி மிக்க
வாள் நாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோள் நாகம் கொம்பு ஒசித்த கோ             (68)
   
2249கோ ஆகி மா நிலம் காத்து நம் கண் முகப்பே
மா ஏகிச் செல்கின்ற மன்னவரும் பூ மேவும்
செங் கமல நாபியான் சேவடிக்கே ஏழ் பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர்             (69)
   
2250தமர் உள்ளம் தஞ்சை தலை அரங்கம் தண்கால்
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை தமர் உள்ளும்
மாமல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏ வல்ல எந்தைக்கு இடம்             (70)
   
2251இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி விடம் காலும்
தீ வாய் அரவு அணைமேல் தோன்றல் திசை அளப்பான்
பூ ஆர் அடி நிமிர்த்த போது             (71)
   
2252போது அறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போது அரிந்துகொண்டு ஏத்தும் போது உள்ளம் போதும்
மணி வேங்கடவன் மலர் அடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேர் ஆய்ந்து             (72)
   
2253ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் ஏய்ந்த
பிறைக் கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்படத் துணிந்த யான்             (73)
   
2254யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம் பெருமான் யானே
இருந் தமிழ் நல் மாலை இணை அடிக்கே சொன்னேன்
பெருந் தமிழன் நல்லேன் பெருகு             (74)
   
2255பெருகு மத வேழம் மாப் பிடிக்கு முன் நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி அருகு இருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை             (75)
   
2256வரைச் சந்தனக் குழம்பும் வான் கலனும் பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் நிரைத்துக்கொண்டு
ஆதிக்கண் நின்ற அறிவன் அடி இணையே
ஓதிப் பணிவது உறும்             (76)
   
2257உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்து அவன் பேர் ஈர் ஐஞ்ஞூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்             (77)
   
2258தவம் செய்து நான் முகனே பெற்றான் தரணி
நிவந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் சிவந்த தன்
கை அனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்து அனைத்துப் பேர் மொழிந்து பின்             (78)
   
2259பின் நின்று தாய் இரப்ப கேளான் பெரும் பணைத் தோள்
முன் நின்று தான் இரப்பாள் மொய்ம் மலராள் சொல் நின்ற
தோள் நலத்தான் நேர் இல்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அத்தனைக்கும் நேர்             (79)
   
2260நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடிமேல் அன்பாய் ஆர்ந்த
அடிக் கோலம் கண்டவர்க்கு என்கொலோ முன்னைப்
படிக் கோலம் கண்ட பகல்?             (80)
   
2261பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு             (81)
   
2262வடிக் கோல வாள் நெடுங் கண் மா மலராள் செவ்விப்
படிக் கோலம் கண்டு அகலாள் பல்நாள் அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என்கொலோ?
கோலத்தால் இல்லை குறை             (82)
   
2263குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை ஆங்கு என உரைத்த மாலை இறையேனும்
ஈயும்கொல் என்றே இருந்தேன் எனைப் பகலும்
மாயன்கண் சென்ற வரம்             (83)
   
2264வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருதி மூர்க்கத்தவனை நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அம் கண் மா ஞாலத்து அமுது             (84)
   
2265அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் அமுது அன்ன
சொல் மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நல் மாலை ஏத்தி நவின்று             (85)
   
2266நவின்று உரைத்த நாவலர்கள் நாள் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என்கொல்? பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பு அரிய மேக மணி வண்ணனை யான்
எத் தவத்தால் காண்பன்கொல் இன்று?             (86)
   
2267இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை அன்று
கருக்கோட்டியுள் கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருக்கோட்டி எந்தை திறம்             (87)
   
2268திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை
திறம்பா வழிச் சென்றார்க்கு அல்லால் திறம்பாச்
செடி நரகை நீக்கி தாம் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசல் கதவு             (88)
   
2269கதவி கதம் சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவி போர் யானை ஒசித்து பதவியாய்ப்
பாணியால் நீர் ஏற்று பண்டு ஒருகால் மாவலியை
மாணியாய்க் கொண்டிலையே மண்?             (89)
   
2270மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன் அகத்தும் மேவேனே நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானை கைதொழுத பின்             (90)
   
2271பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ பல் நூல்
அளந்தானை கார்க் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி             (91)
   
2272அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடிமேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது             (92)
   
2273கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்று அது கூடாமுன்னம் வடி சங்கம்
கொண்டானை கூந்தல் வாய் கீண்டானை கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று             (93)
   
2274உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் பற்றிப்
பொருந்தாதான் மார்பு இடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு             (94)
   
2275என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் தானவனை
வல் நெஞ்சம் கீண்ட மணி வண்ணன் முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தியூரான்             (95)
   
2276அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின்மேல் துயில்வான் முத்தீ
மறை ஆவான் மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்
இறை ஆவான் எங்கள் பிரான்             (96)
   
2277எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடு மால் திருமார்பா பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பு அணைமேல் சேர்ந்தாய்
குடமூக்குக் கோயிலாக் கொண்டு             (97)
   
2278கொண்டு வளர்க்க குழவியாய்த் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க கொண்டு
குடம் ஆடி கோவலனாய் மேவி என் நெஞ்சம்
இடமாகக் கொண்ட இறை             (98)
   
2279இறை எம் பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய்ம் மலர்கள் தூவ அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறள் உருவாய்
மாவடிவின் மண் கொண்டான் மால்             (99)
   
2280மாலே நெடியோனே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே மேலால்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே! என் தன்
அளவு அன்றால் யானுடைய அன்பு             (100)