மூன்றாம் ஆயிரம் இயற்பா நம்மாழ்வார்
|
திருவாசிரியம் |
2577 | செக்கர் மா முகில் உடுத்து மிக்க செஞ் சுடர்ப் பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு பல சுடர் புனைந்த பவளச் செவ்வாய் திகழ் பசுஞ் சோதி மரகதக் குன்றம் கடலோன் கைம்மிசைக் கண்வளர்வது போல் பீதக ஆடை முடி பூண் முதலா மேதகு பல் கலன் அணிந்து சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டுப் பச்சை மேனி மிகப் பகைப்ப நச்சு வினைக் கவர்தலை அரவின் அமளி ஏறி எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வக் குழாங்கள் கைதொழ கிடந்த தாமரை உந்தித் தனிப் பெரு நாயக மூவுலகு அளந்த சேவடியோயே (1) | |
|
|
|
|
2578 | உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல் சுடர்ப் பூந் தாமரை சூடுதற்கு அவாவு ஆர் உயிர் உருகி உக்க நேரிய காதல் அன்பில் இன்பு ஈன் தேறல் அமுத வெள்ளத்தான் ஆம் சிறப்பு விட்டு ஒரு பொருட்கு அசைவோர் அசைக திருவொடு மருவிய இயற்கை மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினொடு நல் வீடு பெறினும் கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே? (2) | |
|
|
|
|
2579 | குறிப்பில் கொண்டு நெறிப்பட உலகம் மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை மெய் பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வன் ஆகி சுடர் விளங்கு அகலத்து வரை புரை திரை பொர பெரு வரை வெருவர உரும் முரல் ஒலி மலி நளிர் கடல் பட அரவு அரசு உடல் தட வரை சுழற்றிய தனி மாத் தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே இசையுங்கொல் ஊழிதோறு ஊழி ஓவாதே? (3) | |
|
|
|
|
2580 | ஊழிதோறு ஊழி ஓவாது வாழிய என்று யாம் தொழ இசையுங்கொல் யாவகை உலகமும் யாவரும் இல்லா மேல் வரும் பெரும்பாழ்க் காலத்து இரும் பொருட்கு எல்லாம் அரும் பெறல் தனி வித்து ஒரு தான் ஆகி தெய்வ நான்முகக் கொழு முளை ஈன்று முக்கண் ஈசனொடு தேவு பல நுதலி மூவுலகம் விளைத்த உந்தி மாயக் கடவுள் மா முதல் அடியே? (4) | |
|
|
|
|
2581 | மா முதல் அடிப் போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடிப் போது ஒன்று விண் செலீஇ நான்முகப் புத்தேள் நாடு வியந்து உவப்ப வானவர் முறைமுறை வழிபட நெறீஇ தாமரைக் காடு மலர்க் கண்ணொடு கனி வாய் உடையதும் ஆய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன கற்பகக் காவு பற்பல அன்ன முடி தோள் ஆயிரம் தழைத்த நெடியோய்க்கு அல்லது அடியதோ உலகே? (5) | |
|
|
|
|
2582 | ஓஓ உலகினது இயல்வே! ஈன்றோள் இருக்க மணை நீராட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து தேஎர்ந்து உலகு அளிக்கும் முதல் பெருங் கடவுள் நிற்ப புடைப் பல தான் அறி தெய்வம் பேணுதல் தனாது புல்லறிவாண்மை பொருந்தக் காட்டி கொல்வன முதலா அல்லன முயலும் இனைய செய்கை இன்பு துன்பு அளி தொல் மா மாயப் பிறவியுள் நீங்காப் பல் மா மாயத்து அழுந்துமாம் நளிர்ந்தே (6) | |
|
|
|
|
2583 | நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா யாவகை உலகமும் யாவரும் அகப்பட நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும் மலர் சுடர் பிறவும் சிறிது உடன் மயங்க ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும் அகப்படக் கரந்து ஓர் ஆல் இலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை அல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே? (7) | |
|
|
|
|