நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

ஆராதனைக்கு எளியவன்
2837பரிவது இல் ஈசனைப் பாடி
விரிவது மேவல் உறுவீர்
பிரிவகை இன்றி நல் நீர் தூய்
புரிவதுவும் புகை பூவே       (1)
   
2838மதுவார் தண் அம் துழாயான்
முது வேத முதலவனுக்கு
எது ஏது என் பணி என்னாது
அதுவே ஆள் செய்யும் ஈடே       (2)
   
2839ஈடும் எடுப்பும் இல் ஈசன்
மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல்
ஆடும் என் அங்கம் அணங்கே     (3)
   
2840அணங்கு என ஆடும் என் அங்கம்
வணங்கி வழிபடும் ஈசன்
பிணங்கி அமரர் பிதற்றும்
குணங்கெழு கொள்கையினானே     (4)
   
2841கொள்கை கொளாமை இலாதான்
எள்கல் இராகம் இலாதான்
விள்கை விள்ளாமை விரும்பி
உள் கலந்தார்க்கு ஓர் அமுதே   (5)
   
2842அமுதம் அமரர்கட்கு ஈந்த
நிமிர் சுடர் ஆழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன்
நிமிர் திரை நீள் கடலானே   (6)
   
2843நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்
தோள்கள் தலை துணிசெய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கள் தலைக்கழிமின்னே     (7)
   
2844கழிமின் தொண்டீர்கள் கழித்துத்
தொழுமின் அவனை தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து
அழிவின்றி ஆக்கம் தருமே     (8)
   
2845தரும அரும் பயன் ஆய
திருமகளார் தனிக் கேள்வன்
பெருமை உடைய பிரானார்
இருமை வினை கடிவாரே   (9)
   
2846கடிவார் தீய வினைகள்
நொடியாரும் அளவைக்கண்
கொடியா அடு புள் உயர்த்த
வடிவு ஆர் மாதவனாரே     (10)
   
2847மாதவன்பால் சடகோபன்
தீது அவம் இன்றி உரைத்த
ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து
ஓத வல்லார் பிறவாரே     (11)