நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை
2870இவையும் அவையும் உவையும்
      இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுளே
      ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்
      கண்ண பிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன்
      என்னுடைச் சூழல் உளானே   (1)
   
2871சூழல் பலபல வல்லான்
      தொல்லை அம் காலத்து உலகைக்
கேழல் ஒன்று ஆகி இடந்த
      கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான்
      விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங் கடல் சேர்ந்தான்
      அவன் என் அருகவிலானே   (2)
   
2872அருகல் இலாய பெரும் சீர்
      அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன் மேனி
      வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொரு சிறைப் புள் உவந்து ஏறும்
      பூமகளார் தனிக் கேள்வன்
ஒருகதியின் சுவை தந்திட்டு
      ஒழிவு இலன் என்னோடு உடனே   (3)
   
2873உடன் அமர் காதல் மகளிர்
      திருமகள் மண்மகள் ஆயர்
மட மகள் என்று இவர் மூவர்
      ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி
      ஆல் இலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான்
      கண்ணன் என் ஒக்கலையானே   (4)
   
2874ஒக்கலை வைத்து முலைப் பால்
      உண் என்று தந்திட வாங்கிச்
செக்கம் செக அன்று அவள்பால்
      உயிர் செக உண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும்
      இந்திரனும் முதலாக
ஒக்கவும் தோற்றிய ஈசன்
      மாயன் என் நெஞ்சின் உளானே   (5)
   
2875மாயன் என் நெஞ்சின் உள்ளான்
      மற்றும் எவர்க்கும் அதுவே
காயமும் சீவனும் தானே
      காலும் எரியும் அவனே
சேயன் அணியன் எவர்க்கும்
      சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன்
      என்னுடைத் தோளிணையானே     (6)
   
2876தோள் இணை மேலும் நன் மார்பின்
      மேலும் சுடர் முடி மேலும்
தாள் இணை மேலும் புனைந்த
      தண் அம் துழாய் உடை அம்மான்
கேள் இணை ஒன்றும் இலாதான்
      கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான்
      என்னுடை நாவின் உளானே   (7)
   
2877நாவினுள் நின்று மலரும்
      ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே
      அழிப்போடு அளிப்பவன் தானே
பூ இயல் நால் தடம் தோளன்
      பொரு படை ஆழி சங்கு ஏந்தும்
காவி நன் மேனிக் கமலக்
      கண்ணன் என் கண்ணின் உளானே   (8)
   
2878கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான்
      காண்பன் அவன் கண்களாலே
அமலங்கள் ஆக விழிக்கும்
      ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்து அயன் நம்பி தன்னைக்
      கண்ணுதலானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தொடு உலகம்
      ஆக்கி என் நெற்றி உளானே   (9)
   
2879நெற்றியுள் நின்று என்னை ஆளும்
      நிரை மலர்ப் பாதங்கள் சூடிக்
கற்றைத் துழாய் முடிக் கோலக்
      கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை அணிந்தானும்
      நான்முகனும் இந்திரனும்
மற்றை அமரரும் எல்லாம்
      வந்து எனது உச்சியுளானே   (10)
   
2880உச்சியுள்ளே நிற்கும் தேவ
      தேவற்குக் கண்ண பிரானுக்கு
இச்சையுள் செல்ல உணர்த்தி
      வண் குருகூர்ச் சடகோபன்
இச் சொன்ன ஆயிரத்துள்ளே
      இவையும் ஓர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய
      நீள் கழல் சென்னி பொருமே   (11)