நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக்காட்டல்
2903திண்ணன் வீடு முதல் முழுதும் ஆய்
எண்ணின் மீதியன் எம் பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே   (1)
   
2904ஏ பாவம் பரமே ஏழ் உலகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரிஏறு அன்றியே?     (2)
   
2905ஏறனை பூவனை பூமகள் தன்னை
வேறுஇன்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மால் தனின் மிக்கும் ஓர் தேவும் உளதே?     (3)
   
2906தேவும் எப் பொருளும் படைக்கப்
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம் பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே?   (4)
   
2907தகும் சீர்த் தன் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப் பொருளும் படைக்கத்
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேல் அறிவார் எவரே?   (5)
   
2908எவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வு இன்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழி அம் பள்ளியாரே     (6)
   
2909பள்ளி ஆல் இலை ஏழ் உலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள் உள் ஆர் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக்கருத்தே?       (7)
   
2910கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப் பிரான் அன்றி யாரே
திருத்தித் திண் நிலை மூவுலகும் தம்முள்
இருத்திக் காக்கும் இயல்வினரே?     (8)
   
2911காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன் உந்தியுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ உலகுகளே       (9)
   
2912கள்வா எம்மையும் ஏழ் உலகும் நின்
உள்ளே தோற்றிய இறைவ என்று br> வெள் ஏறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள் ஊர்தி கழல் பணிந்து ஏத்துவரே     (10)
   
2913ஏத்த ஏழ் உலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லை ஓர் ஊனமே   (11)