நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்
3015முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந் நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்
வெம் நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந் நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே?             (1)
   
3016வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பல் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொல் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்றுகொலோ?             (2)
   
3017கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப் போர்
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வது ஓர் சூழ்ச்சியே             (3)
   
3018சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளி ஆகி என்றும்
ஏழ்ச்சி கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணைக்கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே             (4)
   
3019வந்தாய் போலே வந்தும் என் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யாய் இதுவே இது ஆகில்
கொந்து ஆர் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யான் உன்னை எங்கு வந்து அணுகிற்பனே?             (5)
   
3020கிற்பன் கில்லேன் என்று இலன் முனம் நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்றொழிந்தேன்
பற்பல் ஆயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொன் சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்றே?             (6)
   
3021எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினை இயல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற
மெய்ஞ் ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே             (7)
   
3022மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே
கூவுகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே?             (8)
   
3023கூவிக் கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனித் தலைப்பெய்வனே?             (9)
   
3024தலைப்பெய் காலம் நமன்தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் அல்லல் எல்லாம் அகல
கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே             (10)
   
3025உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப் பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே             (11)