நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்
3257ஊர் எல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள் இருள் ஆய்
நீர் எல்லாம் தேறி ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால்
பார் எல்லாம் உண்ட நம் பாம்பு அணையான் வாரானால்
ஆர் எல்லே வல்வினையேன் ஆவி காப்பார் இனியே?             (1)
   
3258ஆவி காப்பார் இனி யார்? ஆழ் கடல் மண் விண் மூடி
மா விகாரம் ஆய் ஓர் வல் இரவு ஆய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே நீயும் பாங்கு அல்லையே.             (2)
   
3259நீயும் பாங்கு அல்லைகாண் நெஞ்சமே நீள் இரவும்
ஓயும் பொழுது இன்றி ஊழி ஆய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே             (3)
   
3260பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் இம் மண் அளந்த
கண் பெரிய செவ்வாய் எம் கார் ஏறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?             (4)
   
3261ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே             (5)
   
3262பின்நின்று காதல் நோய் நெஞ்சம் பெரிது அடுமால்
முன்நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ் இடத்தே?             (6)
   
3263காப்பார் ஆர் இவ் இடத்து? கங்கு இருளின் நுண் துளி ஆய்
சேண் பாலது ஊழி ஆய் செல்கின்ற கங்குல்வாய்த்
தூப் பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப் பால வல்வினையேன் தெய்வங்காள் என் செய்கேனோ?             (7)
   
3264தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழி ஆய்
மெய் வந்து நின்று எனது ஆவி மெலிவிக்கும்
கைவந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தைவந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே             (8)
   
3265வெம் சுடரில் தான் அடுமால் வீங்கு இருளின் நுண் துளி ஆய்
அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்
செஞ் சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார்? நின்று உருகுகின்றேனே             (9)
   
3266நின்று உருகுகின்றேனே போல நெடு வானம்
சென்று உருகி நுண் துளி ஆய் செல்கின்ற கங்குல்வாய்
அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்று ஒருகால் சொல்லாது உலகோ உறங்குமே             (10)
   
3267உறங்குவான் போல் யோகுசெய்த பெருமானை
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?             (11)