நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)
3268எங்ஙனேயோ அன்னைமீர்காள்
      என்னை முனிவது நீர்?
நங்கள் கோலத் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும்
      தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும்
      செல்கின்றது என் நெஞ்சமே             (1)
   
3269என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்
      என்னை முனியாதே
தென் நன் சோலைத் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும்
      மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும்
      வந்து எங்கும் நின்றிடுமே             (2)
   
3270நின்றிடும் திசைக்கும் நையும் என்று
      அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
வென்றி வில்லும் தண்டும் வாளும்
      சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா
      நெஞ்சுள்ளும் நீங்காவே             (3)
   
3271நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று
      அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
பூந் தண் மாலைத் தண் துழாயும்
      பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும்
      பாவியேன் பக்கத்தவே             (4)
   
3272பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று
      அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும்
      நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன்
      ஆவியின் மேலனவே             (5)
   
3273மேலும் வன் பழி நம் குடிக்கு இவள் என்று
      அன்னை காணக்கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக்
      கண்ணும் கனி வாயும்
நீல மேனியும் நான்கு தோளும்
      என் நெஞ்சம் நிறைந்தனவே             (6)
   
3274நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று
      அன்னை காணக்கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த
      நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான்
      நேமி அங்கை உளதே            (7)
   
3275கையுள் நன் முகம் வைக்கும் நையும் என்று
      அன்னையரும் முனிதிர்
மை கொள் மாடத் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும்
      சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும்
      பாவியேன் முன் நிற்குமே             (8)
   
3276முன் நின்றாய் என்று தோழிமார்களும்
      அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
சென்னி நீள் முடி ஆதி ஆய
      உலப்பு இல் அணிகலத்தன்
கன்னல் பால் அமுது ஆகி வந்து என்
      நெஞ்சம் கழியானே             (9)
   
3277கழிய மிக்கது ஓர் காதலள் இவள் என்று
      அன்னை காணக்கொடாள்
வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி
      நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைதொழச்
      சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்
      ஆர்க்கும் அறிவு அரிதே (10)
   
3278அறிவு அரிய பிரானை
      ஆழி அங்கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி
      நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும்
      திருக்குறுங்குடி அதன்மேல்
அறியக் கற்று வல்லார்
      வைட்டவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே            (11)