நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)
3378துவள் இல் மா மணி மாடம் ஓங்கு
      தொலைவில்லிமங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு
      ஆசை இல்லை விடுமினோ
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும்
      தாமரைத் தடம் கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க
      நின்று நின்று குமுறுமே             (1)
   
3379குமுறும் ஓசை விழவு ஒலித்
      தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு
அமுத மென் மொழியாளை நீர் உமக்கு
      ஆசை இன்றி அகற்றினீர்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் மற்று இவள்
      தேவ தேவபிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க
      நெக்கு ஒசிந்து கரையுமே             (2)
   
3380கரை கொள் பைம் பொழில் தண் பணைத்
      தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு
உரை கொள் இன் மொழியாளை நீர் உமக்கு
      ஆசை இன்றி அகற்றினீர்
திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும்
      திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி
      நெடும் கண் நீர் மல்க நிற்குமே             (3)
   
3381நிற்கும் நால்மறைவாணர் வாழ்
      தொலைவில்லிமங்கலம் கண்டபின்
அற்கம் ஒன்றும் அற உறாள் மலிந்தாள்
      கண்டீர் இவள் அன்னைமீர்
கற்கும் கல்வி எல்லாம் கருங் கடல்
      வண்ணன் கண்ண பிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து
      உள் மகிழ்ந்து குழையுமே             (4)
   
3382குழையும் வாள் முகத்து ஏழையைத்
      தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்
      பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு
      அன்று தொட்டும் மையாந்து இவள்
நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும்
      அத் திசை உற்று நோக்கியே             (5)
   
3383நோக்கும் பக்கம் எல்லாம் கரும்பொடு
      செந்நெல் ஓங்கு செந்தாமரை
வாய்க்கும் தண் பொருநல் வடகரை
      வண் தொலைவில்லிமங்கலம்
நோக்குமேல் அத் திசை அல்லால் மறு
      நோக்கு இலள் வைகல் நாள்தொறும்
வாய்க்கொள் வாசகமும் மணிவண்ணன்
      நாமமே இவள் அன்னைமீர்!             (6)
   
3384அன்னைமீர் அணி மா மயில் சிறுமான்
      இவள் நம்மைக் கைவலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள்
      தொலைவில்லிமங்கலம் என்று அல்லால்
முன்னம் நோற்ற விதிகொலோ? முகில்
      வண்ணன் மாயம் கொலோ? அவன்
சின்னமும் திருநாமமும் இவள்
      வாயனகள் திருந்தவே             (7)
   
3385திருந்து வேதமும் வேள்வியும்
      திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வடகரை
      வண் தொலைவில்லிமங்கலம்
கருந் தடம் கண்ணி கைதொழுத அந் நாள்
      தொடங்கி இந் நாள்தொறும்
இருந்து இருந்து அரவிந்தலோசன
      என்று என்றே நைந்து இரங்குமே            (8)
   
3386இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள்
      கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை
      மணிவண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தான் உறை
      தொலைவில்லிமங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித் தொழும் அவ் ஊர்த்
      திருநாமம் கற்றதன் பின்னையே             (9)
   
3387பின்னைகொல் நில மா மகள்கொல்
      திருமகள்கொல் பிறந்திட்டாள்?
என்ன மாயம்கொலோ இவள் நெடுமால்
      என்றே நின்று கூவுமால்
முன்னி வந்து அவன் நின்று இருந்து
      உறையும் தொலைவில்லிமங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் ஊர்த்
      திருநாமம் கேட்பது சிந்தையே.            (10)
   
3388சிந்தையாலும் சொல்லாலும்
      செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்று அடைந்த
      வண் குருகூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை
      வில்லிமங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ்ப் பத்தும் வல்லார்
      அடிமைசெய்வார் திருமாலுக்கே             (11)