நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)
3400உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி
திண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே             (1)
   
3401ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்ற கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக்கோளூர்க்கே
போரும் கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே?            (2)
   
3402பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண் பழனத் திருக்கோளூர்க்கே
கோவை வாய் துடிப்ப மழைக்கண்ணொடு என் செய்யும்கொலோ?            (3)
   
3403கொல்லை என்பர்கொலோ குணம் மிக்கனள் என்பர்கொலோ
சில்லை வாய்ப் பெண்டுகள் அயல் சேரி உள்ளாரும்? எல்லே
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
மேல் இடை நுடங்க இளமான் செல்ல மேவினளே             (4)
   
3404மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக்கோளூரில்
பூ இயல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்கும்கொல் இன்றே?             (5)
   
3405இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப் போய்
தென் திசைத் திலதம் அனைய திருக்கோளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடும் கண்கள் பனி மல்கவே             (6)
   
3406மல்கு நீர்க் கண்ணொடு மையல் உற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடுமால் என்று அழைத்து இனிப் போய்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளுர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகும்கொல் ஒசிந்தே?             (7)
   
3407ஒசிந்த நுண் இடைமேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய் கண்ண நீர் துளும்பச் செல்லும்கொல்
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே?             (8)
   
3408காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் கிடக்க இனிப் போய்
சேரி பல் பழி தூஉய் இரைப்ப திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைந்திலளே             (9)
   
3409நினைக்கிலேன் தெய்வங்காள் நெடும் கண் இளமான் இனிப் போய்
அனைத்து உலகும் உடைய அரவிந்தலோசனனைத்
தினைத்தனையும் விடாள் அவன் சேர் திருக்கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே             (10)
   
3410வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே
சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன் உலகு ஆள்வாரே             (11)