நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம்புகுதல் (திருவேங்கடம்) |
3433 | உலகம் உண்ட பெருவாயா உலப்பு இல் கீர்த்தி அம்மானே நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆர் உயிரே திலதம் உலகுக்கு ஆய் நின்ற திருவேங்கடத்து எம் பெருமானே குல தொல் அடியேன் உன பாதம் கூடும் ஆறு கூறாயே (1) | |
|
|
|
|
3434 | கூறு ஆய் நீறு ஆய் நிலன் ஆகி கொடு வல் அசுரர் குலம் எல்லாம் சீறா எரியும் திரு நேமி வலவா தெய்வக் கோமானே சேறு ஆர் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே ஆறா அன்பில் அடியேன் உன் அடிசேர் வண்ணம் அருளாயே (2) | |
|
|
|
|
3435 | வண்ணம் மருள் கொள் அணி மேக வண்ணா மாய அம்மானே எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானே அண்ணலே உன் அடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே (3) | |
|
|
|
|
3436 | ஆஆ என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள்மேல் தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா தேவா சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே பூ ஆர் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே (4) | |
|
|
|
|
3437 | புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஓ புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வா ஓ திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் எந்நாளே? (5) | |
|
|
|
|
3438 | எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய் மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே மெய்ந் நான் எய்தி எந் நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே? (6) | |
|
|
|
|
3439 | அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே கொடியா அடு புள் உடையானே கோலக் கனிவாய்ப் பெருமானே செடி ஆர் வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம் பெருமானே நொடி ஆர் பொழுதும் உன பாதம் காண நோலாது ஆற்றேனே (7) | |
|
|
|
|
3440 | நோலாது ஆற்றேன் உன பாதம் காண என்று நுண் உணர்வின் நீல் ஆர் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே மாலாய் மயக்கி அடியேன்பால் வந்தாய் போலே வாராயே (8) | |
|
|
|
|
3441 | வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே செந்தாமரைக் கண் செங்கனி வாய் நால் தோள் அமுதே எனது உயிரே சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே அந்தோ அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே (9) | |
|
|
|
|
3442 | அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே. (10) | |
|
|
|
|
3443 | அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும் படிக் கேழ் இல்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன் முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கு இவை பத்தும் பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே. (11) |
|
|
|
|
|