நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்
3576அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி
அங்கம் சேரும் பூமகள் மண்மகள் ஆய்மகள்
சங்கு சக்கரக் கையவன் என்பர் சரணமே             (1)
   
3577சரணம் ஆகிய நான்மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்று இவை மாய்த்தோம்
கரணப் பல் படை பற்று அற ஓடும் கனல் ஆழி
அரணத் திண் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே             (2)
   
3578ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை
தாளும் தோளும் கைகளை ஆரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே             (3)
   
3579ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா உரு ஆகி
ஆலம் பேர் இலை அன்னவசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வது ஓர் கார் இருள் ஊழி ஒத்து உளதால் உன்
கோலம் கார் எழில் காணலுற்று ஆழும் கொடியேற்கே             (4)
   
3580கொடியார் மாடக் கோளூர் அகத்தும் புளியங்குடியும்
மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல் இப்
படி தான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே             (5)
   
3581பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே ஆம்
அணி ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர் காண்மின்
தணியா வெம் நோய் உலகில் தவிர்ப்பான் திருநீல
மணி ஆர் மேனியோடு என் மனம் சூழ வருவாரே             (6)
   
3582வருவார் செல்வார் வண்பரிசாரத்து இருந்த என்
திருவாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என்
உரு ஆர் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு
ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்றே?             (7)
   
3583என்றே என்னை உன் ஏர் ஆர் கோலத் திருந்து அடிக்கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பதுதான்?
குன்று ஏழ் பார் ஏழ் சூழ் கடல் ஞாலம் முழு ஏழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே             (8)
   
3584திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார்? பேசி என்?
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை ஆளுடைக்
கரு மா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே             (9)
   
3585கலக்கம் இல்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கம் இல்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கம் எய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ்கிற்பது என் செய்வது? உரையீரே?             (10)
   
3586உரையா வெம் நோய் தவிர அருள் நீள் முடியானை
வரை ஆர் மாடம் மன்னு குருகூர்ச் சடகோபன்
உரை ஏய் சொல்தொடை ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
நிரையே வல்லார் நீடு உலகத்துப் பிறவாரே             (11)