நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)
3609எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ
நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான்
அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர்
செல்வர்கள் வாழும் திருக்கடித்தானமே             (1)
   
3610திருக்கடித்தானமும் என்னுடையச் சிந்தையும்
ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர்
செருக் கடுத்து அன்று திகைத்த அரக்கரை
உருக் கெட வாளி பொழிந்த ஒருவனே             (2)
   
3611ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும்தோறும் தித்திப்பான்
திரு அமர் மார்வன் திருக்கடித்தானத்தை
மருவி உறைகின்ற மாயப் பிரானே             (3)
   
3612மாயப் பிரான் என வல்வினை மாய்ந்து அற
நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்
தேசத்து அமரர் திருக்கடித்தானத்தை
வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே             (4)
   
3613கோயில் கொண்டான் தன் திருக்கடித்தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சகம்;
கோயில்கொள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம்
கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே             (5)
   
3614கூத்த அம்மான் கொடியேன் இடர் முற்றவும்
மாய்த்த அம்மான் மதுசூத அம்மான் உறை
பூத்த பொழில் தண் திருக்கடித்தானத்தை
ஏத்த நில்லா குறிக்கொள்மின் இடரே             (6)
   
3615கொள்மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக்கடித்தான நகரே             (7)
   
3616தான நகர்கள் தலைச்சிறந்து எங்கெங்கும்
வான் இந் நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆனவிடத்தும் என் நெஞ்சும் திருக்கடித்
தான நகரும் தன தாயப் பதியே             (8)
   
3617தாயப் பதிகள் தலைச்சிறந்து எங்கெங்கும்
மாயத்தினால் மன்னி வீற்றிருந்தான் உறை
தேசத்து அமரர் திருக்கடித்தானத்துள்
ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே             (9)
   
3618அற்புதன் நாராயணன் அரி வாமனன்
நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம்
நல் புகழ் வேதியர் நான்மறை நின்று அதிர்
கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே             (10)
   
3619சோலைத் திருக்கடித்தானத்து உறை திரு
மாலை மதிள் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுது அன்ன ஆயிரத்து இப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே             (11)