நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

திருக்கண்ணபுரம் சேருமாறு பிறருக்கு உபதேசம் செய்தல் (திருக்கண்ணபுரம்)
3763மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே             (1)
   
3764கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டரே            (2)
   
3765தொண்டர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக்கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே             (3)
   
3766மானை நோக்கி மடப் பின்னை தன் கேள்வனை
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே             (4)
   
3767சரணம் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்
தரணியாளன் தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே            (5)
   
3768அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம் பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே             (6)
   
3769மெய்யன் ஆகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யன் ஆகும் புறமே தொழுவார்க்கு எல்லாம்
செய்யில் வாளை உகளும் திருக்கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே             (7)
   
3770அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே             (8)
   
3771பாதம் நாளும் பணிய தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என்குறை?
வேத நாவர் விரும்பும் திருக்கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே             (9)
   
3772இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை?
அல்லி மாதர் அமரும் திருமார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே             (10)
   
3773பாடு சாராவினை பற்று அற வேண்டுவீர்
மாடம் நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே             (11)